21 June 2021

பெரியாழ்வார் திருநட்சத்திரம்

இன்று   பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)





ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே





பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

தந்தை           : முகுந்தர்

தாய்              : பதுமவல்லி

பிறந்த நாள்  : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்

நட்சத்திரம்    : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)

கிழமை           : திங்கள்

எழுதிய நூல்   : பெரியாழ்வார் திருமொழி

பாடிய பாடல் : 473

சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்


போன வருட  பதிவுகள் ...








பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்


வட்டுநடுவே வளர்கின்ற * மாணிக்க 
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் *
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க * என் 
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 

1 108


கிங்கிணிகட்டிக் கிறிகட்டி * கையினில் 
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி *
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து *
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 

2 109


கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் *
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் *
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.

3 110



நாந்தகமேந்திய நம்பிசரணென்று *
தாழ்ந்த தனஞ்சயற்காகி * தரணியில் 
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் *
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 

4 111


வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி *
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் *
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப * பண்டு 
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான். 

5 112


சத்திரமேந்தித் தனியொருமாணியாய் *
உத்தரவேதியில் நின்றஒருவனை *
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட *
பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான். 

6 113






பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி *
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் * 
மெத்தத்திருவயிறார விழுங்கிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 

7 114



மூத்தவைகாண முதுமணற்குன்றேறி *
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி *
வாய்த்தமறையோர் வணங்க * இமையவர் 
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 

8 115


கற்பகக்காவு கருதியகாதலிக்கு *
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில் *
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் *
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 

9 116



ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய *
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து *
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் *
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 

10 117







ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்

16


உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

20







                                                       ஓம் நமோ நாராயணாய நம!!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம் 

1 comment:

  1. படங்களும் தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete