12 January 2026

திருப்பாவை 29

 இருபத்தொன்பதாம் பாசுரம் -  இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.





11 January 2026

திருப்பாவை 28

  இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.




10 January 2026

திருப்பாவை 27

இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.





09 January 2026

திருப்பாவை 26

இருபத்தாறாம் பாசுரம் -  இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். 

முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். 

நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.



08 January 2026

திருப்பாவை 25

 இருபத்தஞ்சாம் பாசுரம் - எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.




07 January 2026

திருப்பாவை 24

 இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ரிஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.






06 January 2026

திருப்பாவை 23

 இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.