12 March 2026

திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !! - மாசிக் கேட்டை

 திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.








மேல்கோட்டை உற்சவமூர்த்திப் பெருமாளைத் தேடி டில்லி பாதுஷா அரண்மனைக்குச் சென்ற ஸ்ரீ எதிராஜர்,அங்கு அமர்ந்து "வாராய் செல்லப், பிள்ளாய்; வாராய் செல்வப்பிள்ளாய்" என்று  தாயன்புடன் அழைக்க அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த உற்சவர் பெருமாள் சலங்கை ஒலி சலசலக்க, பூமாலை மணம் கமழ, தத்தித் தத்தி நடந்து வந்து, ராமாநுஜர் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

அந்த செல்வப் பிள்ளையை எம்பெருமானார் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, மேல்கோட்டைக்கு அழைத்து வந்தார்.

செல்வப்பிள்ளை மேல்கோட்டைக்கு மீண்டும் எழுந்தருளிய அந்த மாசிக் கேட்டை திருநாளிலிருந்து அந்தப் பெருமாள்,ஸ்ரீ எதிராஜரின் செல்ல(வ)ப் பிள்ளை(சம்பத்குமாரர்) ஆகிவிட்டார்.

உற்சவர் திருநாமமே ''எதிராஜ சம்பத்குமாரர்"!! 

நமக்கும் அவர் செல்லப்பிள்ளையாக என்றும் மேல்கோட்டையில் அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் திருநாராயணபுரத்தில் இந்த வைபவம், மாசிக் கேட்டையில்  "டில்லி உற்சவம்" என்று கொண்டாடப்படுகிறது .

மாசிக் கேட்டையான நேற்று (11/03/26) காலை ஸ்ரீ எதிராஜ சம்பத்குமாரருக்கும் உபய நாச்சிமார்களுக்கும், ஸ்ரீ எதிராஜருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.





 நேற்று  மாலை, ஸ்ரீஎதிராஜ சம்பத்குமாரரும், ஸ்ரீ எதிராஜரும் வீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.








செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன், மாயமே!
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே   8

3005


ஒரு நாயகமாய் ஓட, உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்
பெரு நாடு காண, இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ. 1

3231


ஸ்ரீ யதுகிரி தாயார் சமேத ஸ்ரீ திருநாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!


அன்புடன்

அனுபிரேம் 💗💗💗


No comments:

Post a Comment