07 August 2020

அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை

 கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இன்று   ஆலயதரிசனம் வழியாக அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் தரிசனம்  காணலாம்....




 இத்தலம் பெருமுளை, சிறுமுளை, பூமாலை, செம்மலை என்னும் மலைகளாக  இருந்து தொன்மை வாய்ந்தது. 

இங்கு ஸ்ரீ வள்ளி தெய்வ குஞ்சரி சமேத முத்தையா சுவாமி என்ற திருநாமத்துடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.




முந்தைய பதிவில் குமாரை பச்சையம்மன் கோவில் தரிசனம் கண்டோம். 

அந்த குமாரை பச்சையம்மன்  கோவிலிலுள்ள பூமாலையப்பர், முத்தையா ஆகிய காவல் தெய்வங்கள் இருவரும் அண்ணன், தம்பிகள். 

இவர்கள் இருவரும் அடிக்கடி தென்பகுதிக் காட்டுக்கு இரவில் வேட்டையாடவும் அம்மனின் கட்டளையை நிறைவேற்றவும் போவதுண்டு. 

ஒருமுறை இருவரும் வேட்டைக்குப் போய்விட்டு பெருமுளை கிராமத்தை ஒட்டிய ஏரிக்கரையில் சங்கமுள் காட்டில் வரும் போது முத்தையா காலில் முள் தைத்துவிட்டது.

 உடனே அண்ணன் பூமாலையிடம், “நீங்க முன்னாடி போங்க. என் காலில் பட்ட முள்ளை எடுத்துவிட்டு பின்னாடி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டார் முத்தையா. முள்ளை எடுப்பதற்குள் விடிந்து விட்டது.

விடிந்தும் தம்பி வராததைக் கண்டு பூமாலையப்பர் மீண்டும் பெருமுளையை நோக்கி குதிரையில் வேகமாக வந்தார். 

அப்போது அந்த ஏரிக்கரையில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த சிறு தெய்வங்கள் கும்பலாகச் சூழ்ந்துகொண்டு, “இந்த இடத்தைவிட்டு எழுந்து போ. இது எங்க இடம்" என்று முத்தையாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தன. 

இதைப் பார்த்த பூமாலையப்பர் குதிரைமீது இருந்தபடியே கோபமாக தனது ஈட்டியைத் தூக்கி வீசினார். உடனே சிறு தெய்வ கும்பல் பயந்து ஓடிவிட்டது.

 

தம்பி முத்தையாவை, “இனி இங்கு இருக்க வேண்டாம்; புறப்படு. குமாரைக்குப் போகலாம்” என்று கூப்பிட்டார்.


“அண்ணா! எனக்கு இந்தப் பெருமுளை ஏரிக்கரையை  ரொம்பவும் பிடித்து விட்டது. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்” என்று முத்தையா சொல்ல, அண்ணன் பூமாலையின் முகம் வாடிப்போனது. 

“என்னண்ணா ஒருமாதிரியா ஆகிட்டீங்க" என முத்தையா கேட்க, 

”எனக்கு நீ தம்பியா இருந்தாலும் இனி உனக்குத்தான் மக்கள் முதல் மரியாதை தருவார்கள். ஏனென்றால் உன்னைத் தாண்டித்தான் மக்கள் என்னைப் பார்க்க குமாரைக்கு வரவேண்டும்” என்று பூமாலையப்பர் வருத்தம் மேலிடச் சொல்லவே, 

பதறிப் போன தம்பி, ”என்னண்ணா இப்படிச் சொல்லிட்டீங்க? உங்களுக்குதான் எப்போதும் முதல் மரியாதை. முதலில் உங்களை வந்து வணங்கிப் பூசை செய்த பிறகே மக்கள் என்னிடம் வருவார்கள். இது சத்தியம்” என்று அண்ணன் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார் முத்தையா.


அதேபோன்று இன்று வரை எவ்வளவு மக்கள் இவர்களைக் கும்பிட வந்தாலும் பெருமுளையைத் தாண்டி உள்ள குமாரைக்குச் சென்று பூமாலையப்பரை வழிபட்ட பிறகு, மீண்டும் திரும்பி வந்துதான் முத்தையா சாமியை வழிபாடு செய்து வருகிறார்கள். 


ஒவ்வொரு பங்குனி மாதம் நடைபெறும் பரிவேட்டைத் திருவிழா முதல் நாள் குமாரையில் நடைபெறும். அதற்கு மறுநாள் அதே மாதிரி பரிவேட்டைத் திருவிழா பெருமுளை முத்தையாவுக்கு நடத்துகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது என்கிறார்கள்.






இங்கு கோவிலுக்கு உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால் வெளிப்புற காட்சிகள் மட்டுமே.



இங்கு  வெள்ளை யானை ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது.

முத்தையா சுவாமி அமர்ந்த திருக்கோலத்தில் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் மிக பெரும் உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.






மேலும் முத்தையா சுவாமி சன்னதி அருகே  பச்சையம்மன் சன்னதி, அதே வளாகத்தில்   பேச்சியம்மன், பூங்களாம்மன், காத்தாளம்மன், மருளாளம்மன் சன்னதிகளும்  , 

மயில் வாகனத்துடன் ஆறுமுக சுவாமி சன்னிதானமும், அகோதர வீரபத்திர சுவாமி சன்னதிகளும் அமைந்துள்ளன.

கோவிலுக்கு வெளியே ராயப்பா சுவாமி, பூமாலையப்பா சுவாமிகளும்  தனி சன்னதி கொண்டுள்ளனர்.


முத்தையா சுவாமிக்கு ஏரிக்கரையான் என்ற திருப்பெயரும், இந்த ஏரிக்கு அன்னக்கரை என்ற பெயரும் உண்டு. 

இங்கு தீய  சக்திகளின் பிணியிலிருந்து விடுபட சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.


முக நூலிலிருந்து  கிடைத்த சுவாமியின்  அழகிய படங்கள் ...















மிக சிறப்பான கோவில் எங்களுக்கும் அருமையான , அமைதியான தரிசனம் இங்கு கிடைத்தது.


அபிராமி அந்தாதி...

58. மனஅமைதி பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.



59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.


60. மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?


ஓம்சக்தி ....


அன்புடன் 
அனுபிரேம் 


3 comments:

  1. ஐராவதம் தான் எத்தனை அழகு.. கம்பீரம்...
    முத்தையா ஸ்வாமி கோயிலைப் பற்றிய செய்திகள் அருமை...

    கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யும் வரத்தை அவர்தான் தந்தருள வேண்டும்... ஓம் நம சிவாய..

    ReplyDelete
  2. படங்களும் விவரங்களும் அழகு.

    ReplyDelete
  3. படங்களும் தகவல்களும் சிறப்பு. திட்டக்குடியை அடிக்கடி கடந்திருந்தாலும் இந்த்க் கோவில்கள் பற்றி அறிந்ததில்லை.

    ReplyDelete