ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்
சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் இக்கோவில் உள்ளது .
108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது என்று கல்வெட்டு உள்ளதாக கூறுவர். இது திவ்ய தேசமல்ல ஆனால் அதனினும் பெருமை வாய்ந்தது. சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூர் "வீர நாராயண புரம்" என குறிப்பிடப் பட்டுள்ளது.
காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.
மூலவர்: ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்
தாயார்: ஸ்ரீ மரகதவல்லி தாயார் தனி சன்னதியில்
உற்சவர்: ஸ்ரீ ராஜகோபாலன்,ஸ்ரீ சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.
உற்சவ தாயார்; ஸ்ரீ செங்கமலவல்லி தாயார்
தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி
தலவிருட்சம் : நந்தியாவட்டை
பிரார்த்தனை பெருமாள்: ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ செண்பக மன்னனார்
தல விருச்சம் : அடுக்கு நந்தியாவட்டை
தல தீர்த்தம் : தேவ புஷ்கர்ணி
நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தார் அவதார தலம் .
மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். தவிர அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.
.
தல வரலாறு -
ஜிரும்பன ராஜா மகரிஷியின் பிரார்த்தனையினால், மகாலட்சுமி தேவியே அவரது குழந்தையாக இங்கு பிறந்தார். அவள் இளம்பெண்ணாக வளர்ந்தவுடன், அவளின் திருமணத்திற்காக ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் நாராயண பகவான் தனது கருட வாகனத்தில் ஒரு மன்னன் (மன்னன்) வேடத்தில் இங்கு வந்தார்.
சுயம்வரத்தில் மஹாலக்ஸ்மி தேவியை வென்ற பெருமான், தன்னைத் தாக்கிய மற்ற மன்னர்களை தோற்கடித்தார். ஸ்ரீமன் நாராயணன் இங்கே வீரம் (வீரம்) காட்டியதால், அவர் வீர நாராயண பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் பிரம்மா ஏற்பாடு செய்த அஸ்வமேத யாகத்தில் வேத மந்திரத்தை உச்சரிக்கும் போது மாதங்க ரிஷி தவறு செய்தார் என்று மற்றொரு கதை கூறுகிறது. பிரம்மாவின் சாபத்திலிருந்து தன்னை விடுவிக்க , அவர் ஸ்ரீ முஷ்ணத்திற்கு வந்தார், அங்கு இறைவன் அவர் முன் தோன்றி, ஸ்ரீ முஷ்ணத்தின் தென்கிழக்கில் உள்ள மன்யு க்ஷேத்திரத்திற்குத் செல்லுமாறு கூறவே, இங்கு வேத புஷ்கரணிக்கு அருகில் தவம் மேற்கொண்டார்.
பல வருடங்கள் இங்கு தவம் செய்த பிறகு, நாராயண பகவான் தனது சதுர்புஜ வடிவில் ரிஷியின் முன் தோன்றி அவருக்கு தரிசனம் அளித்து, ரிஷியின் விருப்பப்படி இங்கு தங்க ஒப்புக்கொண்டார்.
வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த தலம் இது. "லக்ஷ்மி நாத சமாரம்பாம்" என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்.
![]() |
ஆளவந்தார்
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.
ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்து அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.
நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.
பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.
இவர் மஹாபாஷ்யபட்டரிடம் தொடக்க கல்வியைப் பயின்றார்.
அந்த சமயத்தில், ராஜ புரோஹிதரான ஆக்கியாழ்வான், அவனுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து, அவன் தலைமை புரோஹிதராக இருப்பதால் அனைத்து புரோஹிதர்களும் அவனுக்கு வரி கட்டுமாறு அல்லது வாதத்துக்கு வந்து தன்னை ஜெயிக்குமாறு கூறினான்.
இதைக் கேட்டவுடன் மஹாபாஷ்யபட்டர் வருத்தப்பட, யமுனைத்துறைவர் இந்த பிரச்னையை தாம் பார்த்துக்கொள்வதாகக் கூறினார்.
மஹாபாஷ்ய பட்டரோ சிறுவனான உன்னால் பெரும் வித்வானான ஆக்கியாழ்வானை எப்படி வெல்ல முடியும் என்று பரிதவித்தார்.
பெரிய மரமாக இருந்தாலும் சிறிய வாள் அறுத்துவிடாதா? அடுத்து ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை ஆணவமே அழிக்கும்; அதில் தான் ஒரு கருவி” என்றார்.
அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம் யமுனைத்துறைவர், “அல்பமான விளம்பரத்தை விரும்பும் கவிஞனை அழித்துவிடுவேன்” என்ற ஒரு ஸ்லோகத்தை அந்த பிரதிநிதிகளிடம் கொடுத்து அனுப்பினார்.
இதைப் பார்த்த ஆக்கியாழ்வான் மிகவும் கோபமடைந்து, அவனது வீரர்களை அழைத்து, யமுனைத்துறைவரை ராஜாவின் தர்பாருக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.
யமுனைத் துறைவர் அந்த வீரர்களிடம், “நானும் வித்வான் தானே… எப்படி நடந்து வருவது.? பல்லக்கு அனுப்பி தக்க மரியாதையுடன் அழைத்தால் தான் வருவேன்” என்று கூறினார்.
இதைக் கேட்ட ராஜா ஒரு பல்லக்கை அனுப்ப, யமுனைத்துறைவரும் ராஜ தர்பாருக்கு வந்தார். வாதம் தொடங்குவதற்கு முன், யமுனைத்துறைவரின் மலர்ந்த முகம் கண்டு, இந்த சிறுவன்தான் வெற்றிபெறுவார் என்று உறுதியாக ராஜாவிடம் கூறினாள், ராணி.
“இல்லை ராணி, அவன் சிறுவன். பச்சிளம் பாலகன். இப்போதுதான் பாடம் படித்து வருகிறான். எப்படி ஜெயிக்கமுடியும்?” என ராஜா சொல்ல, வாக்குவாதம் வளர்ந்தது.
கடைசியில் ராணி, “அப்படி அவர் தோற்றால், நான் ராணியல்ல. ராஜாவின் சேவகியாக இருப்பேன். சரி. ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?”. என்று பதிலுக்கு கேட்க, ராஜாவும், “பாதி ராஜ்யத்தை யமுனைத்துறைவருக்குத் தருவதாகக் கூறினார்.
ஆக்கியாழ்வான் தன்னுடைய வாதத்திறமையை நினைத்து, யமுனைத்துறைவர் எதைக்கூறினாலும் அதை தன்னால் மறுத்துப்பேசமுடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
யமுனைதுறைவர் 3 கேள்விகளை கேட்டு அதை மறுத்து பேசுமாறு கூறினார்.
1.உன் தாய் மலடி அல்ல
2.இந்த ராஜா பேரரசர்
3.இந்த ராணி பதிவிரதை
இதைக் கேட்ட ஆக்கியாழ்வான் ஒரு வார்த்தையும் பேசாமல் நின்றார்.
ராஜா என்ன செய்வாரோ என்று பயந்து இதை அவரால் மறுத்துப்பேச முடியவில்லை. ஆனால் யமுனைத்துறைவரோ மிகச் சுலபமாக இந்த 3 கேள்விகளுக்கும் மறுத்துப்பேசி பதில் அளித்தார்.
ஆக்கியாழ்வனுடைய தாயார் மலடி தான். ஏனெனில் அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. (ஸாமான்ய ஶாஸ்த்ரத்தில் ஒரு குழந்தை மட்டுமே உடைய பெண்மணியை மலடி என்றே கூறுகிறது)
இந்த ராஜா பேரரசன் அல்ல. ஏனெனில் இவர் உலகத்தையே ஆளவில்லை, உலகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆள்கிறார்.
சாஸ்த்ரப்படி நடக்கும் திருமணங்களில், குறிப்பிட்ட சில மந்திரத்தின் மூலம் மணமகள் தேவர்களுடன் திருமணம் ஆன பின்னரே அவளுடைய கணவனுடன் திருமணம் நடக்கும். இதனால் ராணி பதிவிரதை இல்லை என்று நிரூபித்தார்.
ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவருடைய உண்மையான திறமையை உணர்ந்தார். யமுனைத்துறைவர் சாஸ்த்ரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வனை தோற்கடித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார்.
ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவருக்கு சிஷ்யரானார். ராணி, எம்மை ஆளவந்தீரோ! என்று கூறி, யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்று பெயர் கொடுத்தார். ராணியும் அவருக்கு சிஷ்யை ஆனாள். ஆளவந்தாருக்கும் பாதி ராஜ்யம் கிடைக்கிறது, அவரும் தன்னை நிர்வாகப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதாயப் பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.
ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார்.
பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரிய பெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப் பேரரசரானார்.
ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.
இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.
ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் " எட்டு" - இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.
கோவிலின் அமைப்பு -
கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே செல்லும் போது கொடிமரத்தை காண்கிறோம் . அதன் பிறகு பலி பீடம் பின்பு பெரிய திருவடியான கருடாழ்வார் இருக்கிறார் .அவரை கடந்து உள்ளே சென்றால் இக்கோயில் உருவாக காரணமான மதங்க முனிவர் தனி சன்னதியில் உள்ளார் . நம்மாழ்வாரை வணங்கியவாறு மதுரகவியாழ்வார் உள்ள சந்நதியை காண்கிறோம் . பின்பு நாத முனிகள் சன்னதி , நரசிம்மர் சன்னதி ,ஸ்ரீராமர் சன்னதி தி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் .
இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம். பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்குச் செல்வோம். இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும் திருப்பெயரோடு அருள்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள். அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் வணங்குகிறோம்.
இங்கு நடுவில் ஸ்ரீ வீர நாராயணன், இடதுபுறம் நாத முனி சன்னதி (தெற்கு நோக்கி), வடக்கே ஆளவந்தார் சன்னதி (முகம்) அவரது வலது (நாதமுனிகள் சன்னதிக்கு நேர் எதிரே) மற்றும் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சன்னதிக்கு இடையில் அவரது வலதுபுறத்தில் மரகதவல்லி தாயார் சன்னதி உள்ளது.
கண்டராதித்த சோழன் கால கல்வெட்டில் வீரநாராயண விண்ணகர் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
ஜடாவர்ம சுந்தரபாண்டியன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் பெருமாளின் பெயர் மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டில் அழகிய மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
இவ்வூரில் அமைந்துள்ள வீராணம் ஏரி மிகவும் புகழ்பெற்றது . கடல் போல் காட்சியளிக்கும் இந்த வீராணம் ஏரியை கட்டியது முதலாம் பராந்தக சோழன் ஆவார் . அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த வீராணம் ஏரி பற்றி சிறப்பாக சொல்லியிருப்பார்கள் .
இவ் காட்டுமன்னார்கோயில் கல்வெட்டுகளில் சதுர்வேதிமங்கலம் என்று இத்திருத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் பராந்தக சோழன், தனது ஆட்சியின் போது (கி.பி. 907 முதல் 935 வரை), சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளத்தை உருவாக்கி, அதற்கு 'வீர நாராயணன் ஏரி' என்று பெயரிட்டுள்ளார். 'வீர நாராயணன்' என்பது அவரது வீரத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்.
வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தையும் உருவாக்கினார். இந்த கிராமம் நான்கு வேதங்களை நன்கு அறிந்த அறிஞர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. வீராணம் குளத்தின் வலது ஓரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் இப்போது காட்டுமன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஐந்தாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி – ஆராவமுதே
பேறுகிட்டாமையால் ஆராவமுதாழ்வாரிடத்தில் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமருதல்
No comments:
Post a Comment