12 October 2024

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீ பெரும்புதூர்

ஸ்ரீ ஆதிகேசவப்  பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ பெரும்புதூர் 

 சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ.  தொலைவிலும் ஸ்ரீ ஆதிகேசவப்  பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

சுவாமி ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல இக்கோவில்  அமைந்திருக்கிறது.





மூலவர் - ஆதிகேசவப் பெருமாள்

தாயார் - யதிராஜநாதவல்லி

தீர்த்தம் - அனந்தசரஸ் தீர்த்தம்.

தல வரலாறு 

ஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தில் ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது அவரது ஆடை விலகியது, அதைக்கண்ட அவரது பூத கணங்கள் நகைக்க அதனால் கோபமடைந்த சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் வந்து பிறக்க சாபம் கொடுத்தார். 

சாப விமோசனம் பெற அவர்கள் திருமாலை நாட அவரும், திருவேங்கடகிரிக்கும், சத்தியகிரிக்கும் இடையே உள்ள ஆரண்யத்தில் சென்று தவம் செய்யுங்கள் என்று பணிக்க,

 அவர்களும் இத்தலம் வந்து கடுமையான தவம் செய்தனர். 

அவர்களது தவத்தினால் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு ஆதி கேசவப் பெருமாளாக பிரத்யக்ஷ்யமாகி சாப விமோசனம் அளித்தார்.

 அனந்தாழ்வரால் ஏற்படுத்தப்பட்ட அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி பூத கணங்களும் சாப விமோசனம் பெற்று மீண்டும் சிவபெருமானுக்கு சேவை செய்ய கயிலை சென்றனர்.

பூத கணங்கள் அமைத்த பூத மண்டபம், பூத ஸ்தம்பங்களுடன் பெருமாள் சன்னதிக்கு முன் அமைந்துள்ளது.

 ஒவ்வொரு ஸ்தம்பமும் நான்கு குதிரை வீரர்களுடன் கம்பீரமாக, பிரும்மாண்டமானதாக் அமைந்துள்ளன. எனவே இத்தலம் பூதபுரி என்றும் வழங்கப்படுகின்றது. மேலும் ஆதித்ய மஹாராஜாவுக்கும் பெருமாள் இத்தலத்திலே பிரத்யஷமாகி சேவை சாதித்தார்.

ஹரிதன் என்ற அரசன் கொடிய மிருகங்களை வேட்டையாடச் சென்றபோது, சாதுவான ஒரு பசுவைக் கொல்ல நேர்ந்தது. அதனால் தோஷம் பீடிக்கப்பட்ட அவன், அதற்கு பிராயசித்தம் செய்ய இந்த பூதபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு நாராயணன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் தந்ததோடு, அந்தத் தலத்திலேயே ராமானுஜர் என்ற மகா புண்ணிய ஆத்மா ஒன்று அவதரிக்கும் என்றும் எடுத்துக் கூறினாராம். அங்கேயே வைகானஸ சாஸ்திரப்படி பஞ்சபேர விதானத்தை பிரதிஷ்டை செய்து கேசவப் பெருமாளுக்காக கோயிலும் நிர்மாணித்தானாம் ஹரிதன்.







சுவாமி ராமானுஜர் 

4000 பாசுரங்களையும் நாதமுனிகள், நம்மாழ்வாரிடம் நேரடியாக உபதேசம் செய்யப் பெற்றார்,. அப்படி உபதேசம் செய்யும் போது எதிர்காலத்திலே கலி தோஷம் நீங்க ஒரு மகான் இந்த உலகத்திலே பிறக்கப் போகிறார் என்று நம்மாழ்வார் அறிவித்தார். அதற்கான திருவாய்மொழி பாடல்.


“பொலிக பொலிக பொலிக! போயிற்று வல் உயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை

கலியும் கெடும், கண்டு கொண்மின்,கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து, இசைபாடி, ஆடி,உழி தரக் கண்டோம்’’


ஆக, ஒரு அவதாரம் என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பது தெரிகிறது. அவர் எப்படி இருப்பார் என்பதையும் ஒரு விக்கிரகமாக வடித்து நாதமுனிகளுக்குத் தந்ததாகச் சரித்திரம் உண்டு. எதிர்காலத்தில் தோன்றப் போகின்ற ஆச்சாரியார் இந்த திரு வடிவத்தில் இருப்பார் என்று சொல்லப் பட்டதால், அந்த விக்கிரகத்திற்கு பவிஷ்ய ஆச்சாரிய விக்ரகம் என்று பெயர் ஏற்பட்டது. (பவிஷ்யம் என்றால் எதிர்காலம் என்று பொருள்).




நாதமுனிகள் தம் காலத்தில் இப்படி ஒரு ஆச்சாரியார் அவதரிப்பார் என்று காத்திருந்தார். ஆனால், அவர் காலத்தில் அது நடக்கவில்லை. ஆயினும் தன்னுடைய சீடர்களிடம், இந்த விக்கிரகத்தைக் கொடுத்து, இந்த திருவுருவத்தில் ஒரு மகான் எதிர்காலத்தில் அவதரிப்பார் என்பதைச் சொல்லிச் சென்றார். நாதமுனிகளுக்குப் பிறகு அவருடைய பேரனான ஆளவந்தார் வைணவ சமயத்தின் தலைவராகி, திருவரங்கத்தில் இருந்து வைணவத்தை வளர்த்து வந்தார்.


அப்பொழுதுதான் தம்முடைய காலத்துக்குப் பின் வைணவத்தை வளர்க்க யார் வரப்போகிறார்கள், அவரைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்திக்க, காஞ்சிபுரத்தில், திருக்கச்சி நம்பிகள் என்கின்ற ஆசாரியனின் சீடனாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு தீர்த்தக் கைங்கரியம் செய்துகொண்டிருந்த ஒரு இளைஞனைத் தூரத்தில் இருந்து பார்த்து ஆஹா நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கக் கூடிய விக்கிரகம் போலவே இவருடைய திருவுருவம் இருக்கிறது (ஆம் முதல்வன் இவன்) என்று எண்ணி தம்முடைய சீடர்களிடம் எப்படியாவது இவரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்து வைணவ சமயத் தலைவராகப்பொறுப் பேற்கச் செய்து வைணவத்தை வளர்க்க வேண்டும் என்று நியமித்தார்.


ஸ்ரீராமானுஜரின் அவதாரம்

இறையருளால் நம்மாழ்வாரால் அடையாளம் காட்டப்பட்டு, பின்னால், ஆளவந்தார் என்கின்ற மகானால் ஆசீர்வதிக்கப்பட்டு வைணவ சமயத்தின் தலைவராக வாழ்ந்தவர்தான் ஸ்ரீ ராமானுஜர். வேதம் பூர்ண ஆயுள் 100 வயது என்கிறது. ஆனால், ஜோதிஷ சாஸ்திரத்தின்படி 120 ஆண்டுகள் அதாவது இரண்டு பூர்த்தியான விம்சோத்தரி தசை காலம் பூர்ண ஆயுள் என்பார்கள். ஸ்ரீ ராமானுஜர் 120 ஆண்டு காலம் இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்து மகத்தான செயல்களைச் செய்தார்.


ஸ்ரீ ராமானுஜரின் அவதாரம் ஸ்ரீபெரும்புதூர் எனும் திருத்தலத்தில் நிகழ்ந்தது. அங்கே தினமும் யாகங்களை செய்யும் அக்னி ஹோத்ரியான, ஹாரித கோத்திரம் ஆசூரி வம்சத்தைச் சேர்ந்த கேசவ சோமயாஜி என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவருடைய துணைவியார் காந்திமதி என்ற பெயருடன் எப்பொழுதும் சாந்தம் தவழும் மதி நிறைந்த முகத்தோடு இருந்தார். வேதச் செல்வமும் பக்திச் செல்வமும் நிறைந்த அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை.


அதற்காக திருவல்லிக்கேணி சென்றார்கள். அங்கே ஸ்ரீ பார்த்தசாரதி பெருமானைச் சேவித்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.

 அப்பொழுது பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி, ‘‘நாமே உமக்குக் குழந்தையாக அவதரிப்போம்’’ என்று சொன்னார். பெருமாளின் வாக்குப்படி, 1017 ஆம் ஆண்டு சித்திரை திங்கள் 12 ஆம் நாள் வளர்பிறை பஞ்சமி திதியில் வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜர் உலகம் உய்ய அவதரித்தார்.


கருவில் திரு உடையவராக அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், கல்வி கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கினார்.

 முதலில் அவர் தம்முடைய தந்தையையே குருவாக எண்ணி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அதற்குப் பிறகு வேதாந்தம் படிப்பதற்காக காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி என்ற திவ்யதேசத்தில் வசித்த யாதவ பிரகாசர் என்கின்ற அத்வைத பண்டிதரிடம் பாடம் படித்தார்.

உபநிஷத் வாக்கிய விளக்கங்களில் அவ்வப்பொழுது குருவுக்கும் சீடருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும், பின்னால் ஸ்ரீ ராமானுஜர் மிகப் பெரிய புகழை அடைந்தபொழுது, அவருக்கு ஆரம்ப பாடம் சொல்லித்தந்த (பூர்வ பாகம்) யாதவப் பிரகாசரே சீடராகச் சேர்ந்தார். 



 மூன்று உறுதிமொழிகள்

ராமானுஜரின் ஐந்து ஆசாரியர்களுக்கும் ஆச்சாரியாராக இருந்தவர் சுவாமி நாதமுனிகளின் பேரரான ஆளவந்தார். 

ஆளவந்தாரை ஸ்ரீராமானுஜர் நேரடியாகத் தரிசிக்க ஆவல் கொண்டிருந்தார். அதற்கான அழைப்பு வந்தது. தன் காலத்துக்கு பின் ராமானுஜரிடம் வைணவத் தலைமையை ஒப்படைத்துவிட வேண்டும் என்று நினைத்து அந்திம காலத்தில் ஆளவந்தார் பெரிய நம்பிகளை அனுப்பி ராமானுஜரை அழைத்து வரச் செய்தார்.

 ஆனால், அவர் திருவரங்கம் வந்து சேர்வதற்குள் ஆளவந்தார் பரமபதம் அடைந்து விட்டார். 

ஆனாலும், அவருடைய கை விரல்கள் மூன்று மடங்கி இருந்தன. 

இதனை அறிந்த ராமானுஜர் அவருக்கு ஏதோ மூன்று குறிக்கோள்கள் இருந்தன என்பதை உணர்ந்து அவற்றை ஆச்சாரியன் கட்டளையாகக் கருதி நிறைவேற்றித் தருவதாக வாக்களித்தவுடன் மடங்கியிருந்த ஆளவந்தாரின் விரல்கள் நிமிர்ந்தன அவர் வாக்களித்த மூன்று விஷயங்கள்.


1. வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு வைணவ நெறியின் (விசிஷ்டாத்வைத) அடிப்படையில் ஒரு உரை காண்பது.

2. வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த வியாசரையும், விஷ்ணுபுராணம் எழுதிய பராசர பட்டரையும் பெருமைப்படுத்தி அவருடைய புகழைப் பரப்புவது.

3. வேதம் தமிழ் செய்த மாறனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பரப்புவது அதற்கு உரை காண்பது.



 மதுராந்தக மகிழ மரத்தடி

ஸ்ரீ ராமானுஜருக்கு பல ஆச்சாரியார்கள் இருந்தனர். 

குறிப்பாக, ஐந்து ஆச்சாரியார்களைச் சொல்வார்கள். இந்த ஐந்து ஆசாரியர்களிடமிருந்தும் அவர் ஒவ்வொரு சிறப்பான விஷயத்தை கிரகித்தார். 

இவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் தந்து திருமந்திரம் உபதேசித்த நேரடி ஆச்சாரியர் ஸ்ரீ பெரிய நம்பிகள். அவர்தான் மதுராந்தகத்தில் இவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தார். அவர் பஞ்ச சம்ஸ்காரம் செய்த உபகரணங்கள் (சங்கு சக்கரம்) இன்றும் மதுராந்தகம் ஸ்ரீ ராமர் கோயிலில் காணலாம். 

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று ஆண்டுதோறும் மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்கார உற்சவம் நடைபெறுகின்றது. மதுராந்தகத்தை துவையம் விளைந்த திருப்பதி என்று கொண்டாடுவார்கள். கருவறைக்கு பின் உள்ள மகிழ மரத்தடியில்தான் இந்த வைபவம் நடந்தது.





 பதினெட்டுமுறை நடந்தார்

மிகவும், ரஹஸ்யமான சரம சுலோகத்தினுடைய சிறப்பான அர்த்தங்களைக் கற்றுக் கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே சென்றார். 

பதினெட்டு முறையும் ஒவ்வொரு சிறப்பான விஷயத்தைப் பெற்றதாகவும் சொல்வார்கள். 

கடைசியில் 18வது முறை அவருக்கு “தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இந்த அர்த்தங்களைக் கூறக்கூடாது”, என்ற நிபந்தனையுடன் திருக்கோஷ்டியூர் நம்பி சரம சுலோகத்தினுடைய அர்த்த விசேஷத்தை அவருக்கு உபதேசம் செய்தார். 

ராமானுஜர் மகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டார். ஆனால், அவர் மனம் திருப்தி அடையவில்லை.

இவ்வளவு சிரமப்பட்டுதான் மட்டும் தெரிந்து கொண்டதால் அவர் உள்ளம் நிறைவடையாது தவித்தது. என்ன செய்யலாம் என யோசித்தார். “தன்னைப் போலவே ஒவ்வொருவரும் இந்த நிபந்தனையை பின்பற்ற முடியுமா, அப்படிப் பின்பற்ற ஆற்றல் இல்லாதவர்கள் இந்தப் பிறவியை வீணாக்க வேண்டியதுதானா?” எனக் கலங்கினார்.


 ஆசை உடையோர் எல்லாம் வாருங்கள்

அடுத்த நாள் இந்த ரஹஸ்யார்த்தத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடைவர்களை அழைத்து, அந்த அர்த்தத்தை மிகவும் விளக்கமாகக் கூறினார்.

 தமக்கு அளித்த சத்தியத்தை ராமானுஜர் மீறி அர்த்த விசேஷத்தை வெளியிட்டதை திருக்கோட்டியூர் நம்பி கேள்விப்பட்டவுடன், தன்னைச் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார். 

ராமானுஜரும் நம்பி திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜர் செய்ததைக் கேட்டறிந்தார், ராமானுஜரும் அதற்கு நம்பியினுடைய நிய மனத்தை தான் மீறினதாக ஒப்புக்கொண்டார். 

நம்பி “ஊரவர்க்கு உரைத்து உமக்கு என் பெற்றீர்?” என்று கேட்டபோது, ராமானுஜர் “தேவரீருடைய ஆணையை மீறியதால் நரகம் பெற்றேன்’’ என்றார்.

‘‘தெரிந்துமா செய்தீர்?’’ என்று நம்பி கேட்க,

 ‘‘அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு (சரம் ஸ்லோகார்த்தத்தைக் கற்றவர்களுக்கு) மிக உயர்ந்த மோட்சும் (பரம பதம்) கிடைக்குமல்லவா” என்று கூறினார்.

 மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று கிருபையோடு இருக்கும் ராமானுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த மகிழ்ச்சியோடு அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.


காரேய் கருணை ராமானுஜர் 

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பாசுரம் செய்தார் திருவரங்கத்து அமுதனார். அந்த பாசுரம் இது.

“காரேய் கருணை இராமானுச, இக் கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை, அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய், அடியேற்கு இன்று தித்திக்குமே.’’ 25


மேகம் போன்று பலன் எதிர்பாராமல் அனைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட ராமானுஜரே! உம்முடைய கருணையின் அளவை, கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ள யார்தான் முற்றிலுமாக அறிவார்கள்? ஆனால், நான் இதனை உணர்ந்துவிட்டேன். எப்படித் தெரியுமா? அனைத்து விதமான துக்கங்களுக்கு இருப்பிடமாக, நான் இருந்தேன். எனது துன்பங்கள் கண்ட நீர் இந்த உலகில் அவதரித்தீர். நீ வந்து ஆட்கொண்ட பின்னர், உனது பிராணனே எனக்கு பிராணனாக அமைந்துள்ளது. உயர்ந்த உமது திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் தேன், பால், அமுதமுமாக தித்திக்கிறது.


திருமாலை ஆண்டான்


ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். 

இவர் மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். 

ராமானுஜரின் மூன்றாவது ஆச்சாரியாரான இவரிடம் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றார்.

 அப்போது ஒரு சம்பவம் நடந்தது. திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை தாம் ஆளவந்தாரிடம் கற்றுக் கொண்டபடி உபதேசித்தார்.

அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை ராமானுஜர் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை எல்லாம் கூறுகிறார் அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். 

தன் மனத்துக்குத் தோன்றியபடி அர்த்தங்களைக் கூறும் ராமானுஜருக்கு இனி தன் பாடங்கள் தேவையில்லை என்று காலக்ஷேபத்தை நிறுத்திவிட்டார்.


 ஆதிசேஷன் அம்சம்

அதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி உடனே திருக்கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தார்.

 நடந்ததைக் கேட்டறிந்தார். 

“எம் பெருமானார் தொடர்ந்து தன் மனத்துக்குத் தோன்றியபடி, தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புதுப் புது அர்த்தங்களை சொல்லிக் கொண்டு வருவதாக திருமாலை ஆண்டான் கூறினார். திருகோட்டியூர் நம்பி ஒரு பாசுரத்தை பல கோணங்களில் சிந்திக்கலாம், ராமானுஜர் கூறிய அர்த்தத்தை ஆளவந்தாரிடம் தாம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார்.


மேலும், அவர் எம்பெருமான் (கண்ணன்) எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக் கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக் கொள்கிறார் என்றும், மேலும், ஆளவந்தாரின் இதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும், எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும் கூறினார்.


 என்னைவிடச் சிறியவர் யாரும் இல்லை

ராமானுஜரின் இன்னொரு ஆசாரியர் பெரிய திருமலை நம்பிகள். திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் அவதரித்தவர்.

 ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். 

இவருக்கு ஸ்ரீசைலபூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. 

தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாசகங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார். 

ஸ்ரீ ராமானுஜரின் தாய் மாமனான இவர், ராமானுஜருக்கு இளையாழ்வார் என்று பேர் வைத்தவர் பெரிய திருமலை நம்பிகளிடம் சரணாகதி சாத்திரமான ராமாயணத்தின் அர்த்தங்களைத் தெரிந்து கொண்டார் எம்பெருமானார்.


ஒருமுறை எம்பெருமானார். திருமலைக்குச் சென்றார். திருமலை நுழைவு வாயிலில் பெரிய திருமலை நம்பிகள் வந்து அவரை வரவேற்றார். 

தமது முதுமையையும் கருதாது தம்மை வரவேற்ற பெரிய திருமலை நம்பிகளைப் பார்த்து எம்பெருமானார், “அடியேனை வரவேற்க யாரேனும் சிறியவர்கள் (வயதில்) இல்லையோ?” என்று கேட்க, 

அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடச் சிறியவர் யாருமே இல்லை” என்று கூறினார்.


 எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறார்கள்


ஆளவந்தாரின் குமாரனான திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். 

இவரையும் தமது ஆசாரியராக ஏற்றார் ராமானுஜர்.

 திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் நியமனப்படி இராமானுஜருக்கு அருளிச்செயல் சிலவற்றையும் சரமோபாயமும் (ஆசாரிய நிஷ்டை அர்த்தச் சிறப்பு) உபதேசித்தார் இதை சாதாரணமாக கற்றுக் கொள்ளவில்லை. 

அவருக்கு நியம நிஷ்டையாக ஆறு மாத காலம் தொண்டு புரிந்தார். 

அவருக்கு இதமான சூட்டில் பால் அமுது செய்யக் கொடுத்தார். 

அரையருக்குத் தேவையான பொழுது அவருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார்.


அவர் ரங்கநாதர் முன்னால் ஆடிக் களைத்தபோது அவருக்கு இதமாகத் தூக்கம் வர திருமேனியைப் பிடித்து விடுவார். 

ஒருமுறை எம்பெருமானார் அரையருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார். ஆனால், அதில் அரையர் மனம் உகக்காததை அவருடைய முக பாவானையிலேயே கண்டறிந்தார்.

 பின்னர் மறுபடியும் மஞ்சள் அரைத்து ஆசார்யன் மனம் உகக்கும் படி சாற்றி ஆசார்ய கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறான் என்பதனை உணர்த்தினார் (அப்போது ராமானுஜர் வைணவத் தலைமைப் பீடத்தில் இருந்தார் ).


திருக்கச்சி நம்பிகள்

 காஞ்சிபுரம் பெருமாள் தந்த செய்தி ராமானுஜர் தனக்கு நல் விஷயங்களைச் சொல்லுகின்ற ஒவ்வொரு வரையும் தமது குருவாகவே கருதினார்.

 அவர் காஞ்சிபுரத்தில் இருந்த பொழுது வரதராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்ட கைங்கரியம் புரியும் (ஸ்வாமிக்கு விசிறி வீசுதல்) திருக்கச்சி நம்பிகளிடம் சீடராக இருந்தார். 

மணவாழ்க்கையில் விரக்தி அடைந்த சூழலில், தான் அவதரித்த நோக்கத்தின்படி தம் வாழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில், காஞ்சி வரதராஜ பெருமாளின் (பேரருளாளன்) வழிகாட்டுதலை வேண்டினார்.

அப்பொழுது காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். பிரசித்தி பெற்ற அந்த ஆறு வார்த்தைகள் வைணவ நெறிக்கு மிகச்சிறந்த தூண்கள் ஆகும்.


1. நாமே பரம் பொருள்

2. ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு

3. இறைவனாகிய நாராயணனைச் சரணடைவதே மோட்சத்திற்கு வழி

4. சாஸ்திரம் சொல்லுகின்ற சாகும் நேரத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை (அந்திம நிஷ்டை) வைணவனுக்குத் தேவையில்லை.

அதாவது, அவனால் தனது இறப்பு காலத்தில் இறைநாமத்தை உச்சரிக்க முடியாது. அவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் போது செய்த நாமஸ்மரணமே போதும். 

5. பகவானை முழுமையாக நம்பியவர்களுக்கு உலக வாழ்க்கை முடிந்தவுடன் அதாவது நுகர்வினை காரணமாக வந்த இந்த உடல் வாழ்க்கை முடிந்த பிறகு மோட்சம் நிச்சயம்.

6. மகாபூர்ணரான பெரிய நம்பியை குருவாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


 திருப்பாவை ஜீயர்

ஸ்ரீ ராமானுஜருக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. 

துறவிகளுக்கு தலைவர் என்பதால் ‘‘எதிராஜர்’’ என்றும், 

எம்பெருமானைவிட கருணை கொண்டவர் என்பதால், ‘‘எம்பெருமானார்’’ என்றும், 

எல்லா செல்வங்களையும் உடைய என்பதால் ‘‘உடையவர்’’ என்றும், 

வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை வகுத்தவர் என்பதால் ‘‘ஸ்ரீ பாஷ்யக்காரர்’’ என்றும், பல திருநாமங்கள் உண்டு. 

திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றது. 

ஆண்டாள் என்ன மனநிலையில் திருப்பாவை பாசுரத்தைப் பாடினாளோ அதே மனநிலையில் இவரும் உருகி உருகி திருப்பாவையில் ஈடுபட்டதால் இவரை ‘‘திருப்பாவை ஜீயர்’’ என்று அழைத்தார்கள்.


ஆண்டாளுக்கு அண்ணன்

ஒவ்வொரு சொற்களுக்கும் வலிமையும் உயிர்ப்பும் உள்ளது என்பதை செயல் முறையில் காட்டியவர் ஸ்ரீ ராமானுஜர். ஆண்டாள் திருமாலிருஞ்சலை அழகருக்கு 100 தடா வெண்ணையும் 100 தடவை அக்கார அடிச்சிலும் சமர்ப்பித்ததாக ஒரு பாசுரத்தில் வேண்டிக் கொண்டாள்.


“நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!’’


ஸ்ரீ ராமானுஜர் இந்தப் பாசுரத்தைப்பாடுகின்ற பொழுது, ஆண்டாள் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் என்று மனதால் சங்கல்பித்துக் கொண்டாளே, அவளுடைய எண்ணம் நிஜத்தில் பூர்த்தியாக வேண்டுமே என்று நினைத்து 

உடனே திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா வெண்ண்யும் 100 தடா அக்கார அடிசிலும் சமர்ப்பித்து மன நிறைவுகொண்டார். 

அடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளிய, ஒரு தங்கையின் மனக் குறையை அண்ணன் தீர்த்து வைப்பது போல, ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய மனக்குறையை பாசுரத்தில் ஊகித்து தீர்த்து வைத்தாரே, என்பதைக் கருதி, ‘‘அண்ணாவே’’ என்று அழைத்துக் கொண்டு கர்ப்ப கிரகத்தை விட்டு சற்று வெளியே வந்தாள் என்று சொல்வார்கள். 

இந்த வரலாறு வாழித் திருநாமத்தில்

“ஸ்ரீபெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று இருக்கிறது.



 திருவாய்மொழிக்கு முதல் உரைநூல்

ஸ்ரீ ராமானுஜருக்கு நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியின் மீது எல்லை கடந்த ஈடுபாடுதான் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதுகின்ற பொழுது, தெளிவில்லாத சில இடங்களில் திருவாய்மொழியின் பாசுரங்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவார்.

 தம்முடைய சீடர்களுக்கு, திருவாய்மொழியை உலகெங்கும் பரப்ப வேண்டும்; ஒவ்வொரு வைணவனும் திருவாய் மொழியைக் கற்று அதன் படி ஒழுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஸ்ரீ ராமானுஜர் காலத்திற்கு முன்னால் வரை ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு காலட்சேப முறையில் உரை சொல்லி வந்தார்கள். அது எழுத்து வடிவம் பெற வேண்டும் என்று, தம்முடைய அபிமான புத்திர ராகிய திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரை நியமித்தார் அவர் எழுதிய உரைதான் திருவாய்மொழிக்கு முதல் வியாக்கியானம்

(6000 படி வியாக்யானம்)


ஆச்சரியமான சீடர்கள்

 குருமார்கள் ஒரு பக்கமும் சீடர்கள் ஒரு பக்கமும் இருக்க மணிமாலையின் நடுப் பதக்கம் போல ராமானுஜர் இருந்தார் என்று ஒரு ஸ்லோகம் கூறும். 

அவருடைய சீடர்களில் மிகச் சிறந்தவர் கூரத்தாழ்வான் அடுத்து முதலியாண்டான், எம்பார், பிள்ளை உறங்கா வில்லி தாசர், கிடாம்பி ஆச்சான், வடுக நம்பிகள், அருளாளப் பெருமானார் எம்பெருமானார் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இந்த சீடர்கள் ஒவ்வொருவரும் பின்னால் மிகச் சிறந்த குருமார்களாக திகழ்ந்தார்கள்.


தெரியாததைத் தெரியாதது என்று சொல்பவர்

ஸ்ரீ ராமானுஜர் ஒரு விஷயத்தைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளாமல் யாருக்கும் தெரிவிக்க மாட்டார். தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவும் மாட்டார். 

அதற்கு விளக்கமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் திரு மங்கை ஆழ்வார் சீர்காழியில் பாடிய ஒரு பாசுரம். இதில் “தெட்டப்பழம்” என்று ஒரு வார்த்தை வரும். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பது தெரியவில்லை ஏதாவது ஒரு பொருளை ஊகித்துச் சொல்லி இருக்கலாம்.

ஆனால், ராமானுஜர் தம் சீடர்களிடம்,” தனக்குப் பொருள் தெரியவில்லை; தெரிந்தால் கூறுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்.

 ஒருமுறை அவர் சீர்காழி திவ்ய தேசத்தில் யாத்திரை மேற்கொண்ட பொழுது மரத்தில் ஏறி பழங்களை அடித்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தார். 

அதில் ஒரு சிறுவன் ‘‘டேய், நல்ல தெட்ட பழமாகப் போடு’’ என்று சொன்னதைக் கேட்ட ராமானுஜர், அந்தச் சிறுவனை அழைத்து, தெட்ட பழம் என்றால் என்ன? என்று கேட்க, 

சிறுவன்’’ இது தெரியாதா? தெட்ட பழம் என்றால் கனிந்த பழம் என்று பொருள் என்று சொல்ல, அந்தச் சிறுவனிடம் இருந்து ஒரு சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டோமே என்று எண்ணி மகிழ்ந்து தம்முடைய சீடர்களை அழைத்து பாசுரத்தின் அர்த்தத்தை மறுபடியும் சொன்னாராம்.


ராமானுஜர் இயற்றிய நூல்கள்

ஸ்ரீ ராமானுஜர் நவநிதியங்களாக 9 நூல்களை அளித்தார் அதில் பிரதானமானது பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரை. 

இதற்கு ஆதிசங்கரர் விளக்கம் எழுதி இருக்கிறார் அதற்கு “சங்கர பாஷ்யம்’’ என்று பெயர். 

துவைத பரமாக ஸ்ரீ மத்வாச்சாரியார் விளக்கம் அளித்திருக்கிறார்.

 ஆனால், ஸ்ரீ ராமானுஜர் போதாயன விருத்தி உரையை அனுசரித்தும் ஆழ்வார்களின் திருவாக்கின் அடிப்படையிலும் ஒரு பேருரை வரைந்தார் அதற்கு “ஸ்ரீ பாஷ்யம்’’ என்று பெயர் ராமானுஜருக்கும் பாஷ்யகாரர் என்று பெயர்.

ஸ்ரீ சரஸ்வதி தேவியே உச்சிமேல் வைத்து கொண்டாடிய பேருரையாக இந்த உரை அமைந்தது. இது தவிர ராமானுஜர் இயற்றிய நூல்கள் கீதா பாஷ்யம் கத்ய திரையம் எனும் மூன்று நூல்கள் (சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம்) வேதாந்த சங்க்ரஹம் வேதாந்த தீபம், வேதாந்த சாரம், கீதா பாஷ்யம், நிறைவாக பெருமாளுக்கு திருவாராதனம் செய்வது எப்படி என்பதற்காக நித்யம் என்ற கிரந்தத்தையும் அருளிச் செய்தார்.


 ஸ்ரீராமானுஜரைப் பற்றிய நூல்கள்

ராமானுஜரைப் பற்றி அவருடைய சீடர்களும் பல நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். அத்தனையும் ஸ்ரீ ராமானுஜரின் பெருமையை கண்ணாடி போல் எடுத்துக் காட்டும். “ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்’’,

“பெரிய திருமுடி அடைவு’’, 

“ப்ரபந்நாம்ருதம்’’, “ராமானுஜ நூற்றந்தாதி’’, 

வடுகநம்பி இயற்றிய “யதிராஜ வைபவம்’’, “ராமானுஜார்ய திவ்ய சரிதை’’, “யதிராஜ விம்சதி’’, “ராமானுஜ நூற்றந்தாதி’’,

 “யதிராஜ சப்ததி’’, “தாடீபஞ்சகம்’’,

 “ஸ்ரீ ராமானுஜ சது: ஸ்லோகி’’ என நிறைய உண்டு. 


ராமானுஜரின் திருமேனிகள்

ஸ்ரீ ராமானுஜரின் திருமேனிகள் அனேகமாக எல்லா திருமால் ஆலயங்களிலும் நிச்சயமாக இருக்கும். ஆயினும் அவருடைய சிறப்பு பெற்ற திருமேனிகள் மூன்று.


1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)

2. தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்)

3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)


இங்கு சுவாமி  ராமானுஜரின் அடியார்கள், அவரது ஆலோசனைப்படி ஒரு சிலை வடித்தனர்.சுவாமி  ராமானுஜர் அச்சிலையைத் தழுவி, அதில் தன் சக்தியை புகுத்தினார். ராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இது, "தானுகந்த திருமேனி' எனப்பட்டது. இந்த சிலையைச் செய்தபோது ராமானுஜருக்கு வயது 120. அந்த வயதிற்குரிய தோற்றத்திலேயே சுவாமி  ராமானுஜரின் விலா எலும்பு, காதுமடல் ஆகியவை தெரியும்படியாக சிலை தத்ரூபமாக இருக்கும்.


தமது 120 வது வயதில், எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாசுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிசேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார்.




கோவில் அமைப்பு 

ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம்.




 துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு வலம் சென்று யாழி சிற்பங்கள் நிறந்த கவின் பெறும் படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் இளையாழ்வாரின் சன்னதி, சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புத தானுகந்த திருமேனியை தரிசித்தால் நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது. 

இடது பக்கத்தில் தங்க மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்டபத்தில்தான் விசேஷ நாட்களில் ராமானுஜரை கொலுவீற்றிருக்கச் செய்கிறார்கள். குறிப்பாக ராமானுஜர் அவதார உற்சவ திருநாட்களில் அதாவது 2 முதல் 10ம் திருநாள் சாத்துமுறை வரை தினமும் அதிகாலை மஞ்சத்திலிருந்து சுவாமியை புறப்பாடு செய்து இந்த மண்டபத்தில் இருத்தி அன்றன்றைய வைபவத்தைத் துவக்குகிறார்கள்.

இந்த தங்க மண்டபத்துக்கு நேர் எதிரே பூத மண்டபம் உள்ளது. 

ஒரே கல்லினாலான தூண்கள் என்று அதனை பெரியவர்கள் விவரிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அத்தனை நுண்ணிய கலைநயம் மிக்க தூண்கள் அவை. அந்தத் தூண்களை அடுத்து தனி கருவறையில் ராமானுஜர் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார். இந்த அறைக்கு வெள்ளிக் கதவுகள் மேலும் பொலிவூட்டுகின்றன. 


யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஸ்ரீ தேவி, பூதேவித் தாயார்களுடன் நின்ற கோலத்தில் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கி, வலது கீழ் கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரம் தொடையில் தாங்கும் தாங்கும் கோலத்தில் புண்டரீக வல்லி வாசம் செய்யும் திருமார்புடன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் செய்யலாம். 

இடது கரம் தொடையில் வைத்திருப்பது இவரை தரிசனம் செய்பவர்களுக்கு தொடையளவுதான் சம்சார சாகரம் என்பது ஐதீகம்.

மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் இலங்குகின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம்.

இவருக்கு வலதுபுறத்தில் நம்மாழ்வார் மதுரகவிகள், நாதமுனிகளுடன் சேவை சாதிக்கிறார்.


எம்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு வெளிவரும்  எம்பெருமனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அற்புதமான தஞ்சாவூர் ஓவியங்கள்  உள் பிரகாரமெங்கும் உள்ளன.

அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரின் சன்னதி, இங்கு தாயாரின் திருநாமம் இராமனூசரின் நாமத்துடன் விளங்குவது ஒரு சிறப்பு.





 தாயரை வணங்கிவிட்டு மேலும் வலம் வந்தால் வெளிப் பிரகாரத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களின் பெருமாள்களின் திவ்ய கோலங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. 




தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது.



கோவிலை விட்டு வெளியே வந்தால் ,கோயிலுக்கு எதிரே 100 கால் மண்டபம். அதனுள் சென்றால் ராமானுஜர் அவதார இடத்தைக் காணலாம். இந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் கூரத்தாழ்வான் சந்நதி. பக்கத்திலேயே சிறிய கோபுரத்துடன் மணவாள மாமுனிகளுக்குக் கோயில் இருக்கிறது.

அருகிலேயும் திருக்கோவிலைச் சுற்றியும் கூரத்ததாழ்வான், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியர், மண்ணளந்த பெருமாள், மற்றும் விஜய ஆஞ்சனேயர் ஆகிய தனி கோவில்கள் உள்ளன.






 அனந்த சரஸ் திருக்குளம், நீராழி மண்டபத்துடன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. 

ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் சுவாமி  ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள்.









திருவாய்மொழி
இரண்டாம்  பத்து

2.7  – கேசவன்
பன்னிரு நாமப் பாட்டு 


கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன், என் கருமாணிக்கம், என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே. 1

3075

         

நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன், வேத மயன்,* 
காரணம், கிரிசை, கருமம், இவை*  முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   2

3076



மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 
தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.  3

3077

          


கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்*  பாறக் கைத்து, எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே. 4

3078



விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம், கைகள், கண்கள,* 
விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே. 5

3079

          


மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று*  எத்தாலும் கருமம் இன்றி,* 
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட*  நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு, எனைத்தோர் பிறப்பும்*  எனக்கே அருள்கள் செய்ய,* 
விதி சூழ்ந்ததால், எனக்கேல் அம்மான்*  திரிவிக்கிரமனையே.  6

3080


திரிவிக்கிரமன், செந்தாமரைக் கண்*  எம்மான், என் செங்கனி வாய்* 
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளிப் 
பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லை காண் என் வாமனனே 7

3081

          

வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    8

3082

          

சிரீதரன், செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீ இய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 9

3083 

      


இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.  10  

3084


பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     11

3085

          


தாமோதரனை, தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.12

3086


வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
கண்ணனை, நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே.  13

3087









ஸ்ரீ  யதிராஜநாதவல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவப்  பெருமாள் திருவடிகளே சரணம்..




அன்புடன்
அனுபிரேம்💓💓💓


No comments:

Post a Comment