10 June 2025

வைகாசி விசாகம் .... முருகா


 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.





வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

"வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். 




திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி

முருகன் மீது தீராத பக்தி கொண்ட அருணகிரிநாதர் அவர் மீது அருளிச்செய்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் 51 விருத்தப்பாக்களால் ஆன சிறந்த பாராயண நூலாகும். பிள்ளையாரின் வணக்கத்துடன் "நெஞ்சக் கனகல்லும்" எனப் இப்பாடல் தொடங்குகிறது. இப்பாடல் முருகப் பெருமானைப் பற்றியும், வாழ்வை உவந்து நிற்கும் மக்களைப் பற்றியும், திருவருள் தோய்வும் பக்குவமும் பெறாத உயிரினங்களைப் பற்றியும் பாடும் பாடலாக அமைகின்றது. 


அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.


அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று "முத்தைத் திரு பத்தித் திருநகை" எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல். அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.



அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர். உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.


கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.







நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.


பொருளுரை‬: 

"சரணம்" என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகக் கடவுளின் அணிகலனாகக் கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பெற்ற கந்தரநுபூதி என்னும் கவிமாலையானது சிறப்பாக அமையும் பொருட்டு ஐந்து கரங்களையுடைய திருவிநாயகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்.




பாடல் எண் : 01

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.


பொருளுரை‬: 
ஆடிவரும் குதிரையைப் போன்ற மயில் வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே! என்று துதிசெய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட்பணியாக இருக்கும்படி அருள்புரிவீராக! "கஜமுகாசுரன்" எனப்படும் ஓர் அசுரன் பெரியதொரு யானையின் முகத்தையுடையவனாகத் தோன்றி விண்ணோர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களைத் தேடிச்சென்றபோது, போர்க்களத்தில் அவனைக் கொன்றழித்த திருவிநாயகப்பெருமானின் சோதரனாகிய கந்தப்பெருமானே!.




பாடல் எண் : 02

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.


பொருளுரை‬: 

திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லாவிதமான பந்தங்களும், "யான்", "எனது" எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!.




பாடல் எண் : 03

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே.


பொருளுரை‬: 

ஆறுமுகக் கடவுளே! "பரம்பொருள்" என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? "நான்" என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? "நீயே நான் - நானே நீ" என்று கூறி அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ?.







முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....




அன்புடன்
அனுபிரேம்  💚💛💚.....


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அழகு. வைகாசி விசாக முருகனை பற்றி படித்தறிந்து பக்தியுடன் வணங்கி கொண்டேன். அருணகிரிநாதர் பாடல்கள், அருமையான பதிவு என பதிவு சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete