09 June 2025

ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

  ஸ்ரீ நம்மாழ்வார்

இன்று   ஸ்வாமி  நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள்  (வைகாசியில் – விசாகம்) ........






பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்)

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12

நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)

கிழமை : வெள்ளி

தந்தை : காரி

தாய் : உடையநங்கை

எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி

பாசுரங்கள் : 1296

ஆச்சார்ய பரம்பரையில் திருமகள்நாதன், திருமகள், சேனைமுதலியார் ஆகியோர்கள் முதல் மூன்று ஆச்சார்யார்கள். 

சேனைமுதலியாரின் அம்சமாக பிறந்தவர் நம்மாழ்வார். சேனைமுதலியாருக்கு அடுத்த ஆச்சார்யராக புகழப்படுபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். 

ஆச்சார்ய வரிசையில் முதல் மூவரும் தெய்வ உலகத்தைச் சேர்ந்த நித்யர்களாக இருக்க, அந்த வரிசையில் வரும் முதல் மனிதர் இவர். ஆழ்வார்களில் காலத்தால் நடுவினராக இருந்தாலும் அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான நம்மாழ்வார். மற்ற அனைத்து ஆழ்வார்களும் இவரது அங்கங்களாகக் கருதப்படும் பெருமை உடையவர். ஆழ்வார்கள் வரிசையிலும் ஆச்சார்ய வரிசையிலும் வைத்து போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர். வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர்.




வாழி திருநாமம்


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே !

வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே !

ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே !

அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே !

நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே !

நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே !

மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே !

மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே !



விளக்கம்:-

==>வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க. 

"மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே".

==>வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார். 

"வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே". 

==>குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார். 

"ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே".

==>என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார். 

"அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே".

==>கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார்.

 "நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே".

==>வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார்.

"நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே".

==>திருமகள்நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார். 

"மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே".

==>என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். 

"மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே". 






நம்மாழ்வார் அருளிச்  செய்த 

பெரிய திருவந்தாதி

         

   11

நாழால் அமர் முயன்ற*  வல் அரக்கன், இன் உயிரை,* 
வாழாவகை வலிதல் நின் வலியே,*  -ஆழாத-
பாரும் நீ, வானும் நீ*  காலும் நீ, தீயும் நீ,* 
நீரும் நீ, ஆய் நின்ற நீ.

2595 
          

   12

நீ அன்றே ஆழ் துயரில்*  வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?*
போய் ஒன்று சொல்லி என்? போ,நெஞ்சே,* -நீ என்றும்-
காழ்த்து உபதேசம் தரினும்*  கைக் கொள்ளாய்,* கண்ணன் தாள்- 
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 

2596 

         

   13

வழக்கொடு மாறுகோள் அன்று* அடியார் வேண்ட,* 
இழக்கவும் காண்டும் இறைவ!-இழப்பு உண்டே,*
எம் ஆட் கொண்டு ஆகிலும்*  யான் வேண்ட, என் கண்கள்* 
தம்மால் காட்டுஉன் மேனிச் சாய்? 

2597  

          

   14

சாயால் கரியானை*  உள்அறியாராய், நெஞ்சே,* 
பேயார் முலைகொடுத்தார் பேயர்ஆய்,*-நீயார்போய்த்-
தேம்புஊண் சுவைத்து*  ஊன் அறிந்து அறிந்தும்,*  தீவினை ஆம்- 
பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து.   

2598 

          

   15

பார்த்து ஓர் எதிரிதா, நெஞ்சே,*  படுதுயரம்- 
பேர்த்து ஓதப்*  பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை,*  -ஆர்த்து ஓதம்-
தம் மேனித்*  தாள் தடவ தாம் கிடந்து,*  தம்முடைய- 
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.   

2599

          

   16

சீரால் பிறந்து*  சிறப்பால் வளராது,* 
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா,*-மார்புஆரப்-
புல்கி, நீ உண்டு உமிழ்ந்த*  பூமி நீர் ஏற்புஅரிதே?* 
சொல்லு நீ, யாம் அறிய சூழ்ந்து.

2600



மகிழ்மாலை மார்பர்-- திருவரங்கம்


14   

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்

விளக்கம்
***********
சீர்மை பொருந்திய வைகாசி விசாகத்தின் பெருமையை இவ்வுலகத்தவர்களுக்கு நன்றாக அறியும்படிச் சொல்லுகிறேன். சீர்மை பொருந்திய வேதத்தின் அர்த்தங்களை அழகிய தமிழ் மொழியில் அருளிச்செய்த உண்மையாளரான அழகிய திருக்குருகூரின் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த நாள்.



15   

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்


விளக்கம்
***********
வைகாசி விசாகத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ, என்றால் இல்லை!
நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ, என்றால் இல்லை!
இவர் அருளிய திருவாய்மொழிக்கு ஈடான பிரபந்தம் உண்டோ, என்றால் இல்லை!
இப்பூமண்டலத்தில் நம்மாழ்வார் அவதரித்த திருநகரிக்கு இணையான ஒரு திவ்யதேசம் உண்டோ, என்றால் இல்லை!


(உபதேசரத்தினமாலை)





ஸ்வாமி நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💕💕💕...



No comments:

Post a Comment