ஸ்ரீ நம்மாழ்வார்
இன்று ஸ்வாமி நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள் (வைகாசியில் – விசாகம்) ........
பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
பாசுரங்கள் : 1296
ஆச்சார்ய பரம்பரையில் திருமகள்நாதன், திருமகள், சேனைமுதலியார் ஆகியோர்கள் முதல் மூன்று ஆச்சார்யார்கள்.
சேனைமுதலியாரின் அம்சமாக பிறந்தவர் நம்மாழ்வார். சேனைமுதலியாருக்கு அடுத்த ஆச்சார்யராக புகழப்படுபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார்.
ஆச்சார்ய வரிசையில் முதல் மூவரும் தெய்வ உலகத்தைச் சேர்ந்த நித்யர்களாக இருக்க, அந்த வரிசையில் வரும் முதல் மனிதர் இவர். ஆழ்வார்களில் காலத்தால் நடுவினராக இருந்தாலும் அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான நம்மாழ்வார். மற்ற அனைத்து ஆழ்வார்களும் இவரது அங்கங்களாகக் கருதப்படும் பெருமை உடையவர். ஆழ்வார்கள் வரிசையிலும் ஆச்சார்ய வரிசையிலும் வைத்து போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர். வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர்.
வாழி திருநாமம்
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே !
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே !
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே !
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே !
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே !
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே !
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே !
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே !
விளக்கம்:-
==>வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க.
"மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே".
==>வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார்.
"வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே".
==>குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார்.
"ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே".
==>என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார்.
"அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே".
==>கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார்.
"நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே".
==>வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார்.
"நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே".
==>திருமகள்நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார்.
"மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே".
==>என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார்.
"மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே".
![]() |
ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!
அனுபிரேம் 💕💕💕...
No comments:
Post a Comment