29 February 2016

மேல்கோட்டை பயணம் 3 ...செல்ல பிள்ளை - வைரமுடி சேவை

செல்வ நாராயண சுவாமி திருக்கோவில் மூலவரை  தரிசித்தோம் ....இன்று ஊற்சவரின் பெருமைகள் ....






செல்ல பிள்ளை  ...


          சில காலம்  முன்பு  முகம்மதிய படையெடுப்பின் போது  டில்லி   சுல்தான்   கோயிலை   இடித்து விக்ரகங்களையும்,  பொன்   பொருள் எல்லாவற்றையும்   கொள்ளையடித்துச்   சென்றான் என்றும், திருநாராயணனின்   உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்   தான்   இருக்கிறதென்றும்   அவ்வூர் மக்கள்   மூலம்   அறிந்தார்  இராமானுஜர்  .   
                 
              
              எனவே .. இராமானுஜர்     சில சீடர்களை உடன்   அழைத்துக்   கொண்டு   டில்லி   சுல்தானை   நேரில்  கண்டு   உற்சவ   மூர்த்தியைத்   திரும்பத்   தருமாறு  கேட்டுக்   கொண்டார்.   சுல்தானுக்கு இராமானுஜரைக்    கண்டு   வியப்பும்   ஆச்சரியமும் ஏற்பட்டது.   அவரைப்   பற்றி   முன்னரே கேள்விப்பட்டிருந்தான்.   தன்   மகள்   ஆசைப்பட்டாள்   என்பதற்காக   அந்த   விக்ரகத்தை அவளுக்கு  விளையாடக்   கொடுத்திருந்தான். எனவே அதைத்   திரும்பப்   பெறுவதென்பது   அவ்வளவு எளிதல்ல.   அதனால்   ஒரு   நிபந்தனையுடன் அ தை எடுத்துச் செல்லலாம் என்றான். 

            நிபந்தனை   இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை   அழைக்க   வேண்டும்   விக்ரகம் தானாகவே   அவரிடம்   வந்து   சேரவேண்டும் என்றான். 
           உடனே    இராமானுஜர்    ஒரு     குழந்தையை அழைப்பதுபோல்      '' என் செல்லப் பிள்ளாய் வருக ''   என்று குழைவாக அழைத்தார். 

         ஆச்சரியம் ............!   

                      சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன்   விக்ரகம்    ஒரு   குழந்தை வடிவில்  மாறி   சலங்கை  சல்  சல்  என்று  ஒலிக்க   அனைவரும்   வியந்து நோக்க   நடந்து   வந்து   அவர்    மடியில்   அமர்ந்து கொண்டு   மீண்டும்   சிலையாயிற்று.  


               சுல்தான்       மலைத்துப்     போனான். நிபந்தனைப்படியே     உற்சவ      மூர்த்தியை எடுத்துப்போக     அனுமதித்து    அத்துடன்   பொன்னும் பொருளும்    தந்து   அனுப்பி   வைத்தான்.   எனவே     மேல்கோட்டை        உற்சவமூர்த்தி    'செல்லப்பிள்ளை'   என்றும் "யதிராஜ சம்பத்குமாரன்"    என்றும் அழைக்கப்படுகின்றார்.  

              செல்வப்பிள்ளை   திருநாராயணபுரம்  வந்த நாளான  மாசி   கேட்டை "டில்லி உத்சவம்" என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.


             சுல்தானின்     மகள்   சிலையைப்   பிரிந்திருக்க   முடியாமல்   மேல்கோட்டையைத் தேடி   ஓடி    வந்து     உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக்   கொண்டாள்.    அடுத்த    நிமிடம்   அந்த சிலையுடன்    ஐக்கியமாகி   விட்டாள். அவள் அன்பைப்     பாராட்டி   அவளைப்   போலவே   ஒரு சிலை  செய்த    'பீபீ நாச்சியார்'         என்ற பெயரில் நாராயணனுக்கருகில்   அமர்த்தி விட்டார் இராமானுஜர்.









         டில்லி       சுல்தானிடமிருந்து       சிலையைக் கொண்டு     வரும்      வழியில்      வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்    அவரை          எதிர்த்து சிலையையும்,  சுல்தான்   கொடுத்த   பொன் பொருள்    ஆகியவற்றையும்   கவர்ந்து   கொள்ள முயன்ற   போது   ...உடன்   வந்தவர்கள்   அலற, இராமானுஜர்  '' அவனைக்   காப்பாற்றிக்   கொள்ள அவனுக்குத்   தெரியும் '' என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.     அருகிலிருந்த   சேரிமக்கள் இவர்கள்  அலறல்   கேட்டு   திரளாக   ஓடிவந்து கொள்ளைக்காரர்களை   விரட்டி, இராமானுஜரையும்   மற்றவர்களையும்  ஊரின் எல்லை   வரைக்கும்   கொண்டு   வந்து   சேர்த்தனர். 

                 அவர்கள்  கோயிலுக்குள்   நுழைய   தங்களுக்கு அனுமதியில்லை என்று   சொல்லி   விடை பெற்றுக்கொள்ள   முயன்ற   போது,   இராமானுஜர் இறைவனைக்   காப்பாற்றிய   அவர்களுக்குத்தான்  உண்மையிலேயே   அதிக   உரிமை   உண்டு   என்று சொல்லி   அவர்களையும்   கோயிலுக்குள் அழைத்துச்   சென்றார். 

                 ஆயிரம்   ஆண்டுகளுக்கு  முன்னரே   சேரி மக்கள்   என்று   தாழ்த்தப்பட்ட   நிலையில்   ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை   ஆலயப்   பிரவேசம் செய்து   இராமானுர்   அக்காலத்திலேயே   ஒரு புரட்சியை   செய்துள்ளார்.


'வைரமுடி கருட சேவை'


        மேல்கோட்டை நாராயணபுரத்தில்   பங்குனி மாதத்தில்   நடைபெறும்   கருடன்   கொண்டு வந்த 'வைரமுடி சேவை'   விழா   தனிச்சிறப்புடையது. இராமானுஜர்   சந்நிதிக்கு  முன்னாள்   உற்சவ மூர்த்தியை    நாச்சியாருடன்   எழுந்தருளச்   செய்து வைரமுடி   அணிவித்து  விழா கொண்டாடுகின்றனர். 




           இராமன்   முடிசூட்டு  விழாவைக்   காண தசரதருக்குக்   கிடைக்காத   பேறு   இராமானுஜருக்கு   கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி  மாதம்   புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.   பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.



               முதலில்    கருடாழ்வார்   கோயிலைச்    சுற்றி   வலம்   வருகின்றார்.  பிறகு வைரமுடி   என்று   அழைக்கப்படும்   கிரீடம்  பல்லக்கில்   ஏற்றப்பட்டு கோயிலைச்  சுற்றி  வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம்   பதிக்கப்பட்ட   கிரீடத்தை        மாண்டயா      கஜானாவிலிருந்து   சகல    மரியாதையுடன்   கலெக்டர்   கொண்டு  வருவார்.       வருடத்துக்கு     ஒரு   முறை  மட்டுமே இந்த   கிரீடம்   பெருமாளுக்கு   அணிவிக்கப்படுகிறது.

            கருடன்   கொண்டு   வந்த  அற்புத   வைரமுடியை  அணிந்து கொண்டு   பல்லக்கில்   வெளியே  வருகிறார்   சம்பத  குமாரர்.   தாயார்களுடன் பெருமாள்   கருட   சேவை   சாதிப்பது   இங்கு   ஒரு   தனி சிறப்பு.


           எல்லாத்  திசைகளிலும்   பெருமாளை   அழைத்து    செல்லுகிறார்கள்.  விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு ... பிறகு ராஜ முடி அணிந்து  சேவை   சாதிக்கின்றார்   செல்லப்பிள்ளை.












இராஜமுடி (கிருஷ்ணராஜ முடி) சேவை

       மைசூர் அரச        பரம்பரையில்   வந்த   மன்னர்களில்   கிருஷ்ணராஜ  உடையார்   வைரமுடியைப்   போலவே    மற்றொரு   கிரீடத்தை  அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்றும்   அழைக்கிறார்கள் .       ராஜ முடி     அணிந்துக்கொண்டு   நிஜமாகவே அவர் இளவரசன்    போல  நடந்து   செல்கிறார்    டெல்லியிலிருந்து       இராமானுர் கூப்பிடக்குரலுக்காக    ஒடி   வந்த   இராமப்பிரியர்.

         நம்மாழ்வார் சொன்ன "கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்" என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.



வருகிற மார்ச் மாதம் 19 ம் தேதி இங்கு வைர முடி  கருட சேவை நடை பெறள்ளது ...


   (அனைத்து படங்களும் இணையத்தில் கிடைத்தவை ....பகிர்ந்த பக்தர்களுக்கு மிகவும் நன்றி )                        



         எண்பெருக் கந்நலத்து - ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன் - திண்கழல் சேரே.



- நம்மாழ்வார்

அன்புடன்

அனுபிரேம் 

2 comments:

  1. அருமையான படங்கள்..... சிறப்பான தகவல்கள்.....

    இனி தொடர்ந்து வருவேன்....

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. ஏற்கெனவே அறிந்த கதை என்றாலும் சுவாரஸ்யம். அருகே வா என்று அழைத்ததும், குழந்தையாக மாறி ராமாநுஜரிடம் வந்த அரங்கன் ஒரு ஆச்சர்யம்.

    ReplyDelete