09 July 2017

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம்...




கடந்த   ஜுலை 7ம்தேதி (2017)  நம்பெருமாளின் ஜ்யேஷ்டாபிஷேகம்
(பெரிய திருமஞ்சனம்) ...



"ஜேஷ்டா" என்றசமஸ்கிரத  சொல்லுக்கு  "பெரிய '" என்று பொருள்....  ஜ்யேஷ்டா"  நக்ஷத்திரம் (கேட்டை )  என்றால் பெரிய நக்ஷத்திரம் என்றும் பொருள் கொள்ளலாம் ...

அரங்கனுக்கு வருடாவருடம் ,....

ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை ) நக்ஷத்திரத்தன்று ,விசேஷமாக  திருமஞ்சனம் நடைபெறும் ....

இந்த ஆனி மாதத்தில், ஜ்யேஷ்டா நக்ஷத்திரத்தில் ,

"பெரிய நதியான"   தென்  திருக்காவிரிலிருந்து ,

"பெரிய கோபுரமான "  ராஜ கோபுரத்தின் வழியே ,

தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,

விசேஷமாக ,"பெரிய கோயிலான"  அரங்கன் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளிக் கொண்டிருக்கும்   அரங்கனுக்கு ,

பெரிய திருமஞ்சனம் (அபிஷேகம்)  செய்யப்படும் ....



பெரிய நட்சத்திரத்தில் ,

பெரிய நதியில் இருந்து ,

பெரிய கோபுரத்தின் வழியே ,

பெரிய அளவில் (28 குடங்களில் ),

பெரிய கோயிலில் உள்ள ,

பெரிய பெருமாளுக்கு ,

பெரிய அளவில் ,

வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று பெயர்.....

வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் .....

ஆனால் இந்த "பெரிய திருமஞ்சனத்திற்கு "  மட்டும்   வழக்கம்போல், கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல்,   ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்- அம்மா மண்டபத்தின்                           காவிரியிலிருந்து   தீர்த்தம்  எடுத்து வருவார்கள்...




( ஆனால் இந்த வருடம் அம்மா மண்டபத்தில் நீர் இல்லாதலால் ..கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்தார்கள்..)












ஆண்டாள் "யானையின் " மீது தங்கக் குடத்திலும், வெள்ளிக் குடங்களிலும்,  காவிரித் தீர்த்தத்தை வேத கோஷங்கள்,  பாசுரங்கள் பாடி பெருமாளின் திருமஞ்சனத்துக்காக, ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.



அரங்கத்தில் பள்ளிகொண்டு அருளும் ,மூலவரான பெரிய பெருமாளுக்கு (ஸ்ரீரங்கநாதருக்கு ),


"தைலக்காப்பு",    அகில் கட்டை ,   சந்தனக்கட்டை ,   சாம்பிராணி,  வெட்டிவேர் ,    நல்லெண்ணெய்   மற்றும் புனுகு ,பச்சைகற்பூரம் கொண்டு ,

மண்பாத்திரத்தில் விறகு அடுப்பில் ,

ஒரு சோதனைக்குழாய் போன்ற அமைப்பில் ,

பானைகளைக் கொண்டு ,

பரிசுத்தமாக காய்ச்சிய தைலம்,

பாராம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு,

தைலம் தயாரிக்கப்படுகிறது

இந்த பெரிய திருமஞ்சனத்தன்று மட்டுமே ,

பெரிய பெருமாளுக்கு தலை முதல் பாதம் வரை ,(ஆதிஷேசனுக்கும்), சாற்றப்படும் ....இதை "புனுகு சட்டம் " என்றும் சொல்லுவர் ...



அரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ,  மூலவர் ஸ்ரீரங்கநாதர் ,
கல்லினாலோ அல்லது   மரத்தினாலோ செய்யப்பட" விக்ரஹம்" அல்ல ....

முழுக்க முழுக்க "சுதையினால் " ஆனது அதாவது ,

சாளக்ராமங்கள் மற்றும் சுண்ணாம்பு ,

இன்னும் பிற படிமங்களைக் கொண்ட ,(சுண்ணாம்புக் காரை)  கலைவைகளால் ஆன   திருமேனி .... இதனால், மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்)   செய்யும் வழக்கம் இல்லை.

திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் மட்டுமே சாத்தப்படும். பூ, மாலைகள் சாத்தப்படுவதில்லை.


 இப்படிப்பட்ட பெருமை மிகுந்த,

பெரிய பெருமாளின் திருமேனியை பாதுகாக்கும் பொருட்டு,  மேற்சொன்ன "'தைலக்காப்பு " ...நமது முன்னோர்களினால்,  காலங்காலமாக , தொன்று தொட்டு,வெகு நேர்த்தியாக ,பக்தியுடன் ,இந்த ஆனிமாதம் ,கேட்டை (ஜ்யேஷ்டா)  நட்சத்திரத்தன்று சாற்றப்படுகின்றது ...



 பிரம்மனைபடைத்த ,  பிரம்மாமுதல் நாரதர் , சூரியன் , அவரின் குலத்தின் வழி  வந்த இக்ஷுவாகு,  தசரதன் ,  அவரின் மகனாக ராமன்,  அவரின் பின்பு விபீஷணன் மற்றும் பன்னிரு ஆழ்வார்களாலும் , பலப்பல ஆச்சார்யர்கள் முதலானோர்களால் பூஜிக்கப்பட்ட,  இன்னும் பல கோடி ஆண்டுகள் பூஜிக்கப்போகின்ற அழிவில்லாத ,அலாதியான, "பெரிய பெருமாளான " மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் சரீரத்தினை பாதுகாக்கும் பொருட்டு , இந்த தைலமானது ,ஸ்ரீ ரங்கநாதரின் திருமேனியில் உள்ள, வஸ்திரங்களையும்,ஆபரணங்களையும் களைந்து சாற்றப்படும் ....

இந்த "தைலக்காப்பு " சாற்றப் பட்டு ,

ஒரு மண்டல காலத்திற்கு அரங்கனின் திருமேனி  திரையிடப் பட்டு(பாதம் திரையிடப்பட்டு இருக்கும்) ,

திருமுக தரிசனம் மட்டும் சேவையாகும் ...



ஒரு மண்டல காலத்தில் தைலக் காப்பு உலர்ந்த பின் மீண்டும்                 ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து,மூலவர் ஸ்ரீ  ரங்கநாதரின்  திருவடிமுதல் திருமுடி வரை ,மீண்டும் சேவை ஆகும் .....








அதைப்போலவே உற்சவரான  நம்பெருமாளுக்கும் ,  உபய நாய்ச்சிமார்களான ,  ஸ்ரீ தேவி  மற்றும் பூ தேவி தாயார்களுக்கும்,  அவர்களின்  திருமேனியை காக்கும் பொருட்டு ,அரங்கனின் முதல் பிராகாரமான "திருவெண்ணாழி",

(திரு+வெண்+ஆழி ="திருவெண்ணாழி",திரு +பால்+கடல் =அதாவது திருப்பாற்கடலில்)

திருச்சுற்றில்,   ஏழு திரையிடப்பட்டு ,  நம்பெருமாள் மற்றும் உபயனாய்ச்சிமார்களுக்கு,   அவர்களின் திருமேனியின் மேல், வருடம் முழுவதும் ,   சாற்றப்பட்டு இருக்கும் ,  தங்க கவசத்தினை களைந்து   நேரிடையாக "திருமேனியில் " ,

பால்,  தயிர்,  பஞ்சாமிர்தம் கொண்டு  திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்விக்கப்படும் ...

இந்த திருமஞ்சனத்தை ,அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சேவிக்க முடியாது ,   இது  "பெரிய ஏகாந்த திருமஞ்சனம் "  என்று சொல்லப்படுகிறது ....

உற்சவர்களின் திருமேனியில்  சாற்றப்பட்டு உள்ள ,
தங்க கவசத்தின் உள்ளே ,

பச்சைக் கற்பூரம் ஒரு பாதுகாப்பு கவசம் போல்,

மெல்லிய துணிகளைக் கொண்டு ,

திருமேனிமுழுவதும் சாற்றப் பட்டு இருக்கும்... .

அந்த பச்சைக் கற்பூரக் கவசமானது,

உற்சவரின் திருமேனியை  ஆண்டு முழுவதும்   பாதுகாக்கும் பொருட்டு சாற்றப் படுகிறது ...

பொதுவாக பச்சைக்கற்பூரம் கொண்டு, பாதுகாக்கும் எந்த பொருட்களும்  நீண்ட நாட்கள் பாதுகாப்பாக  இருக்கும் ...அதோடு புழு , பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் வரவிடாமல் தடுக்கும் ...இதற்காகவே  நம்பெருமாளுக்கும் ,உபய நாய்ச்சிமார்களுக்கும்,  இத்தகைய சிறப்பு மிக்க ,

பச்சைக் கற்பூரம் கொண்டு  ஒரு கவசமும் ,  அதன்மீதே  தங்க கவசமும் , ஆபரணங்களும் ,  வைர ,  வைடூரிய ,  மாணிக்கங்களும் , பூமாலைகளும்   சாற்றப் படுகின்றது ...













அரங்கன் ஆலயத்தில்இந்த "பெரிய திருமஞ்சனம் "தவிர மற்ற எந்த காலங்களிலும்,  நம்பெருமாளுக்கோ,   உபய நாய்ச்சிமார்களுக்கோ ,  பால் ,  தயிர் ,  பஞ்சாமிர்தம் கொண்டு  திருமஞ்சனம்  செய்வது கிடையாது ....

வருடம் முழுவதும் நடக்கும் ,திருமஞ்சனங்களில் காவிரித்தீர்த்தத்தில் (வெந்நீர் கூட உண்டு ) ,  சந்தனம்  மற்றும் குங்குமப்பூ கலந்தே திருமஞ்சனம் நடக்கும் ...

திருமஞ்சனத்துக்கு அடுத்த நாள் ‘பெரிய திருப்பாவாடைத் தளிகை’ பெரிய பெருமாள், சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை,  வாழைப்பழம், மாங்காய்,  தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன்                      சிறிதளவு உப்பும் சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நிவேத்தியம் செய்த பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இதற்கு "பெரிய திருப்பாவாடை " என்று பெயர் ...பெரிய திருப்பாவாடைத் தளிகை. ...நாள்தோறும் பெருமாளுக்கு நடைபெறும் நிவேதனங்களில், ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால்,                           அதற்குப் பிராயச்சித்தமாக, இந்தப் "பெரிய தளிகை" அமுது செய்விக்கப்படுவதாக ஐதீகம்!....



இந்த  ஒருநாள் மட்டுமே (பெரிய திருமஞ்சனத்தன்று )   அரங்கனின் மூலஸ்தானத்தில்,  உள்ள சுவர்களில் ,   சந்தனம் பூசப்படும் ..

வருடம் முழுவதும் செய்யப்படும் ,  ஆரத்தி ,  வருடம் முழுவதும் அணையாமல் ,சுடர்கின்ற தீப ஒளியின் ,படிமங்கள் அரங்கனின் மூலஸ்தானத்தில்,படர்ந்து இருக்கும் ,,அதை இன்று ஒருநாள் மட்டுமே சுத்தம் செய்து ,சுவர்களின் சந்தனத்தால் ,பூச்சு பூசப்படும் ...

அதோடு மட்டும் அல்லாமல் ,

அரங்கனின் திருமேனியில் வருடம் முழுவதும் ,

சாற்றப்பட்டு இருந்த   தங்க கவசங்களும் ,  வைர ,  வைடூரிய ,மாணிக்க மகுடங்களும் ,அவனின் பாதுகைகளும் ,

இந்த "பெரிய திருமஞ்சனத்தின் "போது மட்டுமே ,

பொதுமக்களின் முன்பு பார்வைக்கு வைக்கப் பட்டு ,

தங்க நகைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி துவங்கும்.

 மாலை 4.30 மணிக்கு சுத்தம் செய்யப்பட்ட அங்கிகள், தங்க நகைகள் பழுது பார்த்து, எடைகள் சரிபார்க்கப்பட்டு,  மீண்டும் அரங்கனின் திருமேனியிலும்,  உபய நாய்ச்சிமார்களின் திருமேனியில் சாற்றப்படும்.



இன்று களையப்பட்ட நம்பெருமாள் தங்க அங்கிகளின்  பாதம் மட்டும் பக்தர்கள் தங்கள் தலையில் வைத்து கொள்ள அனுமதி உண்டு....






பதிவிட்ட இணைய பக்தர்களுக்கும்...
அழகிய படங்களை எடுத்து அனைவரும் காண அருளிய

திரு. விஜயராகவன்  கிருஷ்ணன்  அவர்களுக்கும் மிகவும் நன்றி...




கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

அமலனாதிபிரான்
(936)





அன்புடன்

அனுபிரேம்...

6 comments:

  1. பாதத்தை தலையில் வைத்துக் கொண்டேன்.
    அழகிய புகைப்படங்க்கள் தந்த திரு. விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.
    நேரில் தரிசனம் செய்த உணர்வு ஏறபட்டது.

    ReplyDelete
  2. அழகான படங்கள் மற்றும் தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

  3. ​உங்கள் தயவில் தரிசனம். தரிசித்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  4. செம தகவல்கள் அனு! விவரங்கள்! தரிசனம். எல்லாம் கிடைத்தது. படங்கள் அழகு! பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. படங்கள் கொடுத்த திரு விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி...அருமை அனு!!!

    கீதா

    ReplyDelete
  5. Nalla thagaval intha thagavalai padikkum pothe angu aranganuku nadantha thirumanjanam en manak kannil odiyathu nandri

    ReplyDelete
  6. பதிவிற்கு நன்றி

    ReplyDelete