31 October 2017

திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....



பொய்கையாழ்வர்  தரிசனம்...


பூதத்தாழ்வார்  தரிசனம்.......


பேயாழ்வார்  தரிசனம்....



இம்மூவரும்   'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.



இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.



 இதுவரை இவர்களை  தனி தனியே தரிசித்தோம்....அதன் தொடர்ச்சியாக....










  ஆசிரமத்திற்குள் கண் அயர்ந்தார் பொய்கை ஆழ்வார்  என கண்டோம்....





 அப்போது படபடவென  கதவை தட்டும் சத்தம் ...


 அவர் கதவை திறந்து வந்து  பார்த்தார்...


கொட்டும் மழையில் நனைந்தபடி அடியார் போல யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்....

"ஸ்வாமி! இந்த இருட்டில் இப்படி கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு இக்குடிசைக்கு வந்துள்ள அடியார் தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்று கேட்டார் பொய்கை ஆழ்வார்.


 "இந்த எளியவனை உள்ளே ஏற்று கொள்வீரோ?" என்று அவர் பணிவோடு கேட்டார்.


 "தாராளமாக வாருங்கள்.


இந்த உள்நடையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்..


தேவரீர் தாங்கள் உள்ளே வந்து எம்மோடு அமருங்கள் என்றார்..


.""அடியேன் பூதத்தான்" என்று உள்ளே வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் ..


"அடியேன் பொய்கையான்" என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்...



ஆழ்வார்  இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டதும் பேரானந்தம் அடைந்தனர்...


 

பரந்தாமனின் லீலா வினோதங்களில் லயித்துப் போய் நெடுநேரம் பேசிக் கொண்டே இருந்தனர். 


நள்ளிரவு ஆகியும் இருவரும் தூங்கவில்லை.


எம்பெருமானின் சுகானுபவத்தில், பேச்சில் திளைத்துக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஆசிரமத்து கதவை தட்டும் சத்தம் கேட்டது.


பொய்கை ஆழ்வார் கதவை திறந்து எட்டி பார்த்தபோது அடியவர் ஒருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டார்.



 "தாங்கள் அடியவர் போலிருக்கிறீர். யாரென்று அறிந்துக் கொள்ளலாமா" என்றார் பொய்கை ஆழ்வார்.


"அடியேன் பெயர் பேயன். உமது ஆசிரமத்தில் எமக்கு இந்த இரவு மட்டும் தங்க இடம் தரவேண்டும்."


அதற்கென்ன உள்ளே வாருங்கள்.


 நான் பொய்கையன், உள்ளே பூதத்தார் இருக்கிறார்.



இக்குடிலின் ரேழியில்   ஒருவர் படுக்கலாம்,


இருவர் அமரலாம்,


மூவர் நிற்கலாம்....


 வாருங்கள் உள்ளே   என்று கூறி பேயாழ்வாரை உள்ளே அழைத்துச் சென்றார் பொய்கை ஆழ்வார். 



சிறிய இடம் காரணமாக மூவரும் எழுந்து நின்றபடியே க்ஷேமலாபங்களை பேசினர்.


அப்பொழுது





இருளில் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர்ந்தாரகள்.

 இவர்களோடு நெருக்கத்தை உணர்ந்த பகவான், இவர்களை நெருக்கத் தொடங்கினார். ....


அந்த சிறிய இடத்தில் அவர் வந்து அவரும் நெருக்க ஆரம்பித்ததும்,

 யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி அவர்கள் மனத்தில்

எழுந்தது.

 இரவு நேரம்.

சுத்தமாக வெளிச்சம் இல்லை.

எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளைத் தொட்டு உணர முடியவில்லை.



அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பேரொளி தோன்றியது.


அங்கே திரிவிக்கிரம சுவாமி அவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். நாலாவதாக வந்தவர் அவர்தான்!

மறுநாள்தான் தரிசனம் காண முடியும் என்று நினைத்திருந்த பெருமாள் இப்போது அவர்கள் கேளாமலேயே அவர்கள் முன் நின்றிருந்தார்!







அப்போது முதலில் வந்த பொய்கையாழ்வார் அந்தாதி தொடங்குகிறார் .........



வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று   (பொய்கையார்)





      எல்லாமுமாக இருக்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை அவர்.

இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார்.

எனவே இவ்வுலகத்தையே அகல்விளக்காகவும், அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார்.

அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார்.

அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் நினைக்கும் ஆத்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது அவர் நம்பினார்.


       பொய்கையாழ்வார் இறைவனை ஐம்புலன்களாலும் காண்கிறார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும், அழிவற்ற மெய்ஞ்ஞானமாகவும், ஞானமுடையார் செய்யும் வேள்வியாகவும், அறமாகவும் கண்டு மகிழ்கின்றார்.

இவர் இயற்றிய 100 வெண்பாக்கள் முதல் திருவந்தாதி என்று பெயர்பெற்றன. அதற்கான் முதல் பாடலே வையம் தகளியா.


       

      அடுத்து பூதத்தாழ்வார் அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்     


 அன்பு, ஆர்வம், இன்பு என்றவை எல்லாம் இறைவன் பால் ஏற்படும் ஈர்ப்பில் நமக்குண்டான சிறப்பு நிலைகளாகும்.

 உலகில் பொருள்கள் பிரகாசிப்பதற்கு விளக்கு ஏற்றுவர்.

இவரும் நம் இயல்பும் பெருமாளின் இயல்பும் பிரகாசிப்பதற்காக ஞானச் சுடர் விளக்கை ஏற்றினார்.


     இவ்விருவர் ஏற்றிய விளக்கில் பேயாழ்வார் இலட்சுமி நாராயணனைக் கண்டார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்

என்ஆழி வண்ணன்பால் இன்று


 

பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன்.

அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன்.

 சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன்.

போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்’ என்கிறார் பேயாழ்வார்.

பொன்னின் நிறம் போன்ற திருமகளின் நித்ய சேர்க்கையாலே அப்படியே பொன்னிறத்தைப் பெற்றது பெருமானின் கரிய திருமேனியும்.


     இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.

மூவரும் உலகுய்ய திவ்யபிரபந்தங்களை அருளிச் செய்து பெருமாளின் கல்யாண குணங்களையும் விரிவாக  அனுபவித்து பிறரையும் அனுபவிக்கச் செய்தனர்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்ற கூற்றை பொய்யாக்கி அவர்கள் இறைவனைக் கண்டு அதனை நம்முடன் பகிர்ந்ததே அவர்களின் அளப்பறியா அன்புக்குச் சான்று.



பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும்,


பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும்,


பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும்

 நிகழ்த்திக் காட்டினர்.

இவர்கள் மூவரின் பிரபந்தமும் ஒன்றாக இணைந்து 'இயற்பா' என்று அழைக்கப்படுகிறது.

 பின்  முதலாழ்வார்கள், பல திவ்யதேச யாத்திரை செய்து யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து ...பிறகு மறுபடியும் திருக்கோவலூரையே அடைந்து அங்கேயே திருநாட்டுக்கு எழுந்தருளினர்.






ஓம் நமோ நாராயணாய நம!!
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!



(1138)

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்

வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில்

கண்வளர்ந்த ஈசன் றன்னை,

துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்

தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

  -திருமங்கையாழ்வார் ||




அன்புடன்
அனுபிரேம்..

   





9 comments:

  1. பொய்கையாழ்வர் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என மூன்று ஆழ்வார்களது வரலாறு அறிந்துகொண்டேன். ஆழ்வார் பற்றி இவ்வளவு விபரமாக அழகான படங்களுடன் அறிய தந்தமைக்கு நன்றி அனு.

    ReplyDelete
  2. ஓம் நமோ நாராயணாய நம!!
    பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
    பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!

    இவர்கள் பாடல்கள் பள்ளியில் மனபாடபகுதி.

    அழகான பதிவு. அருமையான விளக்கம்.
    நன்றி.

    ReplyDelete
  3. இனிய பதிவு..
    ஆழ்வார் திருவடிகளே சரணம்!..

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  5. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  6. ஆழ்வாரின் அந்த டயலாக்ஸ் ரொம்ப ஃபேமஸ்! ஏற்கனவே அறிந்தவை என்றாலும் மீண்டும் வாசிக்க ஆனந்தம். ரசித்தோம். நாங்கள் பள்ளி, கல்லூரியில் படித்த போது எங்கள் கஸின்ஸ் இடையில் சொல்லிக் கொள்வோம். ஒரு அறையில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு கூடுதலாக யாரேனும் வந்தால் இடம் கொடுப்பது பற்றி இப்படிச் சொல்லுவோம் என்ன நம்பர் மட்டும் மாறும்...

    கீதா

    ReplyDelete
  7. ஹாய் தோழி ,
    ஆழ்வார்கள் பற்றி விளக்கத்துடன் படித்து ரசித்தேன் அனு ரைடர்ஸ் எல்லோருடைய சைட்டையும் பகிர்ந்து இருக்கீங்க நீங்க மெம்பரா எல்லவற்றிலும் .....

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி அக்கா...

      உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி...

      ஆமாம் ...நான் பின் தொடர்பவர்களின் தளங்கள் அனைத்தையுமே பகிர்ந்தது இருக்கேன்...

      அதனால் எனக்கும் படிப்பதற்கு எளிது..

      புதிதாக காண்பவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்..

      Delete
    2. ரொம்ப நல்ல இருக்கு அனு நானும் மெம்பர் இன் MM ,ஹமீதா ,மதுரா போன்றவற்றில்

      Delete