20 November 2021

திருப்பாணாழ்வார்

 இன்று திருப்பாணாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ....  கார்த்திகையில் ரோஹிணி..







திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!


உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே

உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே

வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே

மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே

அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே

அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே

செம்பொனடி அடிமுடியளவும் சேவிப்போன் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!







திருப்பாணாழ்வார்- 
பிறந்த இடம்    : உறையூர் (திருச்சி)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.

நட்சத்திரம்     : கார்த்திகை ரோகிணி

கிழமை            : புதன்

எழுதிய நூல்  : அமலனாதிபிரான்

பாடிய பாடல் : 10

சிறப்பு             : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்.

எம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார்.  பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார். தாழ்ந்த குலமாகிய பாணர் குலத்தில் பிறந்ததால் பூலோகவைகுண்டமாம் திருவரங்கத்தைத் தம் கால்களாலும் தீண்டக் கூடாதென்று காவிரியின் தென்கரையிலிருந்தபடி யாழ்மீட்டிப் பெரிய பெருமாள் அரங்கநாதனைத் துதித்து வந்தார்.


தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை,

பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் ரசித்து  பாடி , பரவசமடைந்து, அமலனாதிபிரானை இயற்றினார் திருப்பாணாழ்வார்.....



திருப்பாணாழ்வார் கடைசிப் பாசுரத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே, அனைவரும் காணும் படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார்....




அமலனாதிபிரான்

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள் மதில் அரங்கத்து அம்மான் * 
திருக் கமலபாதம் வந்து என்கண்ணின் உள்ளன ஒக்கின்றதே. (2)

1 927


உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டம்  உற *
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்  *
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான்  * 
அரைச் சிவந்த ஆடையின்மேல், சென்றது ஆம் என சிந்தனையே.

2 928



மந்தி பாய் வட வேங்கட மா மலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்  அணையான் *
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் *
உந்திமேல் அது அன்றோ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2)

3 929


சதுர மா மதில்  சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி * ஓர் வெங்கணை உய்த்தவன் ஒதவண்ணன் *
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்து அம்மான் * திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

4 930



பாரம் ஆய பழவினை பற்று அறுத்து * என்னைத் தன்
வாரம் ஆக்கிவைத்தான், வைத்தது அன்றி என்னுள் புகுந்தான் *
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் * 
திரு ஆரமார்வு  அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

5     931








துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் *
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை * 
முற்றும் உண்டகண்டம், கண்டீர்! அடியேனை உய்யக் கொண்டதே.

6 932


கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் * நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார் * 
அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார் *
செய்ய வாய் ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

7 933


பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்  *
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி * நீண்ட அப்பெரிய
ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!

8 934


ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் *
ஞாலம்ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் *
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் *
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே! (2)

9 935


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் * என் உள்ளம் கவர்ந்தானை *
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் *மற்று ஒன்றினைக் காணாவே. (2)

10       








ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!



 அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment