02 November 2023

நாமக்கல் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ..

நேற்று நடைபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா காட்சிகள் இன்று ..








நாமக்கல் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ---

 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.







ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் அனுமன் . பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.

 அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். 

ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.









இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

.





ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)



மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட

குருநாதனே துணை வருவாய்

வாயுபுத்ரனே வணங்கினேன்

ஆற்றலும் ஞானமும் வரமும் தர

வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே



ஜயஹனுமானே..ஞானகடலே,

உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,

அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹா வீரனே..மாருதி தீரனே..

ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)

தங்க மேனியில் குண்டலம் மின்ன,

பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,

இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..

உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,

ராம சேவையே..சுவாசமானவா.. (7)

உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,

ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)


ராம லக்ஷ்மண..ஜானகி..,

ஸ்ரீராம தூதனே மாருதி



உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,

கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,

ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,

லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,

பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,

அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.

நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..

உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,

ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)


ராம லக்ஷ்மண..ஜானகி..,

ஸ்ரீராம தூதனே மாருதி



இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்

உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

கதிரவனை கண்ட கவி வேந்தனே

கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,

கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

உன்னருளால் முடியாதது உண்டோ

மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,

ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,

கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

உனது வல்லமை சொல்லத் தகுமோ,

மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

உன் திருநாமம் ஒன்றே போதும்

தீய சக்திகள் பறந்தே போகும். (24)


ராம லக்ஷ்மண..ஜானகி..,

ஸ்ரீராம தூதனே மாருதி



ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே

துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே

உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,

ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,

இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்

உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்

ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே

அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம பக்தியின் சாரம் நீயே

எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)


ராம லக்ஷ்மண..ஜானகி..,

ஸ்ரீராம தூதனே மாருதி



ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்

பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

ராம நாமமே வாழ்வில் உறுதுணை

அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே

உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்

துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே

ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட

பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

சிவபெருமானும் அருள் மழை பொழிவான்

இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே

துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)


*ராம லக்ஷ்மண..ஜானகி..,*

*ஸ்ரீராம தூதனே மாருதி*


ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே

ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே...



அன்புடன்

அனுபிரேம் 💚💙💚

2 comments:

  1. நாமக்கல் ஆஞ்சநேயரைப் பலமுறை தரிசித்திருக்கிறேன். எனக்கென்னவோ ஒரிஜினல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலுக்குச் சற்று வெளியே, இந்த பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது என்று எண்ணம்.

    முதன் முறையாக ஹனுமான் சாலிசா தமிழில் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஹை அனு! மை ஆஞ்சு!!! படங்கள் பார்த்து ரசித்தேன். தமிழ் ஹ்னுமான் சாலிஸா சூப்பரா இருக்கு. பாடிப் பார்த்தேன். பொருந்தி வருகிறது சில இடங்களில் மtuௌம் கொஞ்சம் டக்கென்று பொருத்திப் பாட வேண்டி வந்தாலும் ஒரிஜினல் சாலிஸா போலவே பாட வருகிறது.

    நானும் தமிழில் ஒரு பிட் நோட்டிஸ் போல...அது மிஸ் ஆகிவிட்டது.

    மிக்க நன்றி அனு

    கீகீதா

    ReplyDelete