29 November 2023

பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார் ...

 திருவாலி திருநகரி திருமங்கை ஆழ்வார் அவதார உற்சவம் ---

 பரகால நாயகி திருக்கோலத்தில்  திருமங்கை ஆழ்வார் 




ஆழ்வார் ஞானம் கனிந்து பெண் தன்மையில், பரகால நாயகியாகத் தன்னை பாவித்துப் பதிகம் பாடினார்.

திருமங்கையாழ்வார் தெய்வக் காதல் பற்றிய பாடல்களில், தம்மை நாயகியாகவும் (பரகால நாயகி) , பெருமாளை  நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில்,  காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சியை நாயகி மேற்கொள்வதாக அமைத்து, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாடல்களைப் பாடியுள்ளார்.


தான் ஒரு ஆண் என்றதால்,  தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார். ஆனால்  ‘உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே உரியது’ என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே. இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.

பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக எண்ணி  திருமால் மீது காதல் கொண்ட பெண்  அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடுகிறார்.

 கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார். ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

 சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும், பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார்.















பெரிய திருமொழி -  மூன்றாம் பத்து 

3- 7  கள்வன் சொல் 
 திருவாலி 3


ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 

1211



தாய் எனை என்று இரங்காள்*  தடந்தோளி தனக்கு அமைந்த* 
மாயனை, மாதவனை*  மதித்து, என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!

1212

          

என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    

1213










ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!



அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻

2 comments:

  1. திருமங்கையாழ்வார் மடலூர்வேன் என்று சொல்கிறார். மடல் எடுக்கவில்லை என்று சொல்வார்கள். அதாவது மடலெடுப்பேன் என்று சொல்கிறாரே தவிர மடலூரவில்லை. இதனையே பெரிய திருமடலில், ஆழ்வாரே,
    'மானோக்கின்
    அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,* 38
    மன்னு மடலூரார்' என்பதோர் வாசகமும்,*
    தென்னுரையில் கேட்டறிவதுண்டு,*(22)-அதனையாம்தெளியோம்;-, 39
    மன்னும் வடநெறியே வேண்டினோம்*

    பெண்கள் ஆடவர்மேல் மடலூரக்கூடாது என்பது தமிழ் இலக்கணம். ஆனால் அதனை நாம் ஏற்காமல், வடநெறியையே வேண்டினோம் என்றும் குறிப்பிடுகிறார்.

    நம்மாழ்வாரும் இரு பதிகங்களில் நாயகி பாவத்தில் மடலூர்வேன் என்று சொல்கிறார் (நாயகனை பயமுறுத்துகிறார். ஆனால் மடலேறவில்லை) - ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
    கோணைகள் செய்து* குதிரியாய் மடலூர்துமே*. (5ம் பத்து 3ம் பதிகம், 9ம் பாசுரம்) , யாம் மடலூர்ந்தும் என் ஆழியங்கை பிரானுடை (10ம் பாசுரம்)

    உங்க பதிவுகள் விவரமாக எழுதறீங்க. பாராட்டுகள். படங்களும் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ...

      இப்படங்களை காணும் பொழுது இங்கு பகிரும் ஆசை தானாகவே வருகிறது ...எத்தனை அழகான குறிப்புகளும் பாடல்களும்

      Delete