26 March 2024

பங்குனி உத்திரம் - ஸ்ரீ நம்பெருமாள், ஶ்ரீ ரங்கநாயகித் தாயார் சேர்த்தி..

  ஸ்ரீ நம்பெருமாள், ஶ்ரீ ரங்கநாயகித் தாயார் சேர்த்தி..






பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)


பங்கயப் பூவிற் பிறந்த பாவை நல்லாள் வாழியே

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே 

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே 

மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே 

எங்கள்  எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே 

இருபத் தஞ்சுட்பொருள் மால் இயம்புமவள் வாழியே 

செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே 

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே 


இன்று பங்குனி உத்திரம்...

பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவரங்கத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும். 
பங்குனி உத்திரத்தன்று காலை பெருமாள் 8  வீதிகள் தங்கப்பல்லக்கில் முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளும் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

நிதானமாக வந்து கொண்டிருந்த பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதியை மின்னல் வேகத்தில் கடந்து தாயார் சன்னதியை அடைவார். விண்ணைப் பிளக்கும் வேகத்தில் தாயார் சன்னதிக்குள் எழுந்தருள முற்படுவார்.

 நம்பெருமாள் வருவது கண்டு தாயார் சன்னதி கதவுகள் மூடப்படும் உறையூர் சென்று வந்த நம்பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படும்.
கதவுகள் மூடப்படுவதை கண்ட நம்பெருமாள் மெல்ல பின்னே செல்வார். 

தாயார் சன்னதி கதவுகள் மீண்டும் திறக்க இரண்டாவது முறையாக நம்பெருமாள் ஓட்டத்தில் வேகமாக உள்ளே எழுந்தருள முற்படுவார். 
இந்த முறையும் கதவுகள் மூடப்படும். மீண்டும் நம்பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுவார்.

மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு நம்பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது. பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுவார்.

தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று நம்பெருமாள் நினைக்க மணியக்காரர் சமயம் சொல்லி அரையரையும் நம்மாழ்வாரையும் சமாதானம் செய்ய வரச் சொல்லுவார்.

நம்பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள். இவை தம்பிரான் படி வியாக்கியானத்தை கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.

*நம்பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:*

தாம் தாயாரை காண வந்தால் தன்னை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்று தன்னை பார்க்காமல், கதவுகளை மூடி, பூக்களை எறிந்து இப்படி செய்வது ஏன்?

*தாயார் அருளிச்செய்த பிரகாரம்-1:*

பெருமாள் எப்போதும்போல் எழுந்தருளியிருப்பது மெய்யானால்:
திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?
கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?
திருவதரம் வெளுத்து இருப்பானேன்?
திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்? தாம் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் என நாச்சியார் அருளிச்செய்வார்.

*நம்பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2*

*திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?*
தாம் “செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!

*கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?*
சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!

*திருவதரம் வெளுத்து இருப்பானேன்?*
அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை பயன்படுத்தியதால், ஆதரம் வெளுத்து இருக்கு!

*திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?*
தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் இருக்கு!
தான் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து தன் பொருட்களை களவாடினார். அவரை திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆகையாலே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொண்டு தன்னை உள்ளே அழைக்கச் சொல்லி பெருமான் அருளிச்செய்வார்.

*தாயார் அருளிச்செய்த பிரகாரம்-2:*

கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. இந்த பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம் என்று நாச்சியார் அருளிச்செய்வார்.

*நம்பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -3*

நாம் உறையூரை கண்ணாலும் கண்டதில்லை காதாலும் கேட்டதில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி தன்னை அவமானம் செய்கிறீர். ஆகவே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்வார்.

*தாயார் அருளிச்செய்த பிரகாரம்-3:*

ஏழாம் திருநாள் அன்று இங்கு எழுந்தருளிய போது நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நாச்சியார் அருளிச்செய்வார்.

*நம்பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:*

இந்த சந்தேகங்கள் தீர தான் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.
கடலில் முழுகுகிறோம்
அக்னிப்பிரவேசம் செய்கிறோம்
பாம்பு குடத்தில் கை இடுகிறோம்
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைக்க சொல்லி நம்பெருமாள் அருளிச்செய்வார்.

*தாயார் அருளிச்செய்த பிரகாரம்-4:*

கடலில் முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!
பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?

அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொல்ல வந்தீரே!!
பிரம்மாவின் வேள்வியில் ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?

பாம்புக் குடத்தில் கைவிடுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!
திருவனந்தஆழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?

இப்படிபட்ட பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும் என்று நாச்சியார் அருளிச்செய்வார்.

*நம்பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:*

நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இறக்கம் வராமல் கோபத்தில் – “கண்கள் சிவந்து இருக்கு!” “திருமுகம் கருத்து இருக்கு!” இப்படி இருந்தால் நமக்கு என்ன கதி இருக்கிறது?

அழகிய மணவாளன் தாயார் சன்னதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் தங்களுக்கே!! எனவே தன்னை அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்வார்.

*தாயார் அருளிச்செய்த பிரகாரம்-5:*

தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம். நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!

பெருமாளை உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம். 

பெருமாளின் மாலை, சந்தனம், சால்வை ஆகியவை தாயாருக்கு சாற்றபடும். தாயாரிடம் அனைவருக்கும், நம்பெருமாளிடம் பண்டாரிக்கும் விண்ணப்பம் செய்ததற்காக மரியாதை வழங்கப்படும்.



*முதல் ஏகாந்தம்:* 

பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும். பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்

இரவு சின்ன பெருமாள் கொள்ளிடத்திற்கு சென்று தீர்த்தவாரி கண்டு, பின்னர் தாயார் பெருமாளுடன் சேர்த்து எழுந்தருளுவார்.

ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய கோஷ்டி
ஸ்வாமி இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம் சரணாகதி அடைந்தார். இதற்காக கத்யத்ரயம் பாராயணம் செய்யப்படும். 

இதன் பின்னர் *இரண்டாவது ஏகாந்தம்* நடைபெறும்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம் நடைபெறும்.

இந்நேரத்தில் வசந்தனுக்கு அருளப்பாடு ஆகும். அதன் பின்னர் 18 முறை பெருமாளுக்கும், தாயாருக்கும் ஈரவாடை மாற்றி திருமஞ்சனம் நடைபெறும்.

 உடையவர் திருக்கோஷ்டியூருக்கு ரகசியங்களை அறிய 18 முறை நடந்ததை எடுத்துக் காட்டுவதற்காக, இந்த திருமணத்தில் 18 முறை ஈரவாடை மாற்றப்படுகிறது.

இதன் பின்னர் *மூன்றாவது ஏகாந்தம்* முடிந்து தாயார் உள்ளே செல்ல நம்பெருமாள் பிரிய மனமில்லாமல், தாயார் சன்னதி வாசலில் சற்று நேரம் நின்று பின்னர் கோரதத்திற்க்கு எழுந்தருளுவார்.
பெருமாள் திருவடிகளே சரணம் !!


ஆதி பிரம்மோத்ஸவம் ஒன்பதாம் திருநாள் காலை 
தாயார் சந்நிதியில்
பிரணயகலகம் சமாதானம் முன்







ஆதி பிரம்மோத்ஸவம்   ஒன்பதாம் திருநாள் காலை 

தாயார் சந்நிதியில் நம்மாழ்வார் மூலம்
சமாதானம் கண்டருளல்




ஒன்பதாம் திருநாள் காலை - நம்பெருமாள்  சேர்த்தி மண்டபம் புறப்பாடு




ஒன்பதாம் திருநாள் பகல் - ஶ்ரீரங்கநாயகி தாயார்
சேர்த்தி மண்டபம் புறப்பாடு







ஸ்ரீ நம்பெருமாள்  - ஶ்ரீரங்கநாயகி தாயார்
சேர்த்தி










ஸ்ரீ நம்பெருமாள்  - ஶ்ரீரங்கநாயகி தாயார்
சேர்த்தி  ஏகாந்த நிறைவு சேவை




2087.   

ஒன்றும் மறந்து அறியேன்*  ஓதநீர் வண்ணனை நான்,* 

இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-

கருஅரங்கத்துள் கிடந்து*  கை தொழுதேன் கண்டேன்*

திருவரங்கம் மேயான் திசை. 6


2260.   

பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-

முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  - சொல் நின்ற-

தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-

நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   



 ஸ்ரீ நம்பெருமாள் ஶ்ரீ ரங்கநாயகித் தாயார்
  திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம்💖💖💖


1 comment:

  1. ஸ்ரீரங்கம் சேத்தி காட்சிகள் காணத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete