ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
![]() |
கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.
திருவிளையாடற் சுருக்கம் :
இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான்.
அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன், சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கருங்குருவியாகப் பிறந்தான்.
அக்கருங்குருவியினைக் காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கருங்குருவிக்குத் தலையில் காயங்கள் உண்டானது. கருங்குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை.
எனவே கருங்குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கருங்குருவி அமர்ந்திருந்தது.
அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்தார்.
சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி “தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார்.” என்று மதுரையின் சிறப்பையும், சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.
சிவபக்தர் கூறியதைக் கேட்ட கருங்குருவிக்குச் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.
சொக்கநாதர் கருங்குருவிக்கு அருளியது -
அக்கருங்குருவி மதுரை நோக்கிப் பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.
பின்னர் அங்கயற்கண் அம்மையையும், சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கருங்குருவி இறைவழிபாடு செய்தது.
கருங்குருவியின் செயலினைக் கண்டதும் அங்கையற்கண் அம்மை இறைவனாரிடம் “ஐயனே, இக்கருங்குருவி வழிபடும் காரணம் என்ன?” என்று கேட்டார்.
இறைவனார் கருங்குருவியின் முற்பிறவியும், இப்பிறவியில் இறைவனைக் கேட்டறிந்த விதத்தையும் எடுத்துரைத்தார்.
பின்னர் கருங்குருவிக்கு ஆயுள்பலத்தையும், பிறவித்துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கருங்குருவியானது இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டது.
பின்னர் இறைவனாரிடம் “ஐயனே, எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னைத் துன்புறுத்துகின்றன.” என்றது.
அதனைக் கேட்ட இறைவனார் “அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலியன் ஆவாய்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
உடனே கருங்குருவி “வலியன் என்பது அடியேன் மரபில் உள்ள பறவைகளுக்கு எல்லாம் விளங்க வேண்டும். தேவரீர் அடியேனுக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளும் ஓதி உய்தல் வேண்டும்.” என்று வேண்டியது.
சொக்கநாதர் “அவ்வாறே ஆகுக” என்று கூறியருளினார். உடனே அக்குருவியும், அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து வலியவனாகின.
அதனால் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கருங்குருவி சிவப்பரம்பொருள் திருவடிநீழலை அடைந்தது.
கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம் கூறும் கருத்து:
இறைவனார் எல்லார் இடத்திலும் அன்பு கொண்டவர். நம்முடைய நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும் என்பது இப்படலம் கூறும் கருத்தாகும்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி
திருமுறை : மூன்றாம் திருமுறை 51 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
சித்தனே திருஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக. ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment