13 August 2025

2. கிருஷ்ண நாமம்....

  ஜெய்  ஸ்ரீ  கிருஷ்ணா... 





ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால் தர்க்கம் செய்வான். படித்திருந்தும், வேலைக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான். 

ஒரு சமயம் அந்த ஊர்க்கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. இடைவிடாத ‘கிருஷ்ண நாம ஜபம்’ என்று ஒரு நாள் ஏற்பாடாகி இருந்தது. “கிருஷ்ண நாம ஜபத்தில்” தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இந்த இளைஞனோ, ” இந்த கிருஷ்ண நாமத்தில் அப்படி என்னதான் இருக்கிறதோ?” என்று நினைத்தான்.

 அருகிலிருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டான். 

அவரும், “அது மிகவும் உன்னதமான நாமம்” என்று கூறினார். 

அந்த இளைஞன், ” இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை, உங்கள் கிருஷ்ணனால் என் பசிக்குச் சோறு தர முடியுமா?” என்று கேட்டான்.

 பெரியவரும், ” கிருஷ்ண நாமம் சோறு மட்டுமல்ல, வேண்டிய அனைத்தையும் கொடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த நாமத்தை ஜபித்துப் பார்” என்று கூறினார்.


அவனுக்கு அதில் துளியும் நம்பிக்கையில்லை.

 இருப்பினும், அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்று, ஒரு மரத்தடியில் தனியே அமர்ந்து, “கிருஷ்ண, கிருஷ்ண” என்று ஜபிக்க ஆரம்பித்தான்.

 அப்போது ஏதோ சத்தம் வரவே, சிங்கம், புலி என்று பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்டு மீண்டும் “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லத் தொடங்கினான்.

ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்து, மரத்தடியில் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டு சாதத்தைத் தின்று விட்டு, இளைப்பாறிவிட்டுச் சென்றான். 

கீழே இறங்கி வந்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. 

அந்த வழிப்போக்கன் இன்னொரு கட்டு சாதத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான்.

 கிருஷ்ண நாம மகிமையால் தான் பசிக்குச் சோறு கிடைத்தது என்று மகிழ்ந்து, அதை உண்ணப் போனான்.

 அவனது தர்க்கஅறிவு அப்போது எட்டிப் பார்த்தது. 

உண்மையிலேயே கிருஷ்ண நாமத்திற்கு மகிமை உண்டென்றால், இந்த சாதத்தை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படட்டும், அது வரை சாப்பிடக் கூடாது, பசித்தாலும் பரவாயில்லை என்று எண்ணினான். அப்போது மீண்டும் ஏதோ சத்தம் வரவே, சாதத்தைக் கீழே வைத்துவிட்டு அவசர அவசரமாக மரத்தின் மீது ஏறி மீண்டும், ‘கிருஷ்ண, கிருஷ்ண’ என்று ஜபிக்கத் தொடங்கினான்.


இப்போது அங்கே ஒரு கொள்ளைக்கூட்டம் வந்தது. 

மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களைக் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். 

பின்னர் மரத்தின்மேல் பார்த்தனர். அங்கே இந்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கீழே இறக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.

பசியுடன் இருந்த ஒரு கொள்ளையன், அங்கு இருந்த கட்டுசாதத்தைப் பார்த்து, எடுத்து அதைத் தின்னப் போனான்.

 மறவர்கள் தடுத்து, “தின்னாதே! நம்மை வேவு பார்க்க வந்த இவன்தான் இதை வைத்திருப்பான். இதில் ஏதாவது விஷம் கலந்திருப்பான். அதை முதலில் அவன் சாப்பிடட்டும்” என்று கூறி வலுக்கட்டாயமாக அதை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் சாப்பிட்டான். 

அதற்குள் தூரத்தில் குளம்புச் சத்தம் கேட்டது.

 கொள்ளையர்கள், அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவசரத்தில் சிறிது தங்கக் காசுகள் கீழே சிதறின.

நம்பிக்கையில்லாமல் “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலனா!! என்று ஆச்சர்யமடைந்த அந்த சோம்பேறி இளைஞன், இனிமேல் உழைக்க வேண்டும், தர்க்கம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.

 ஊருக்குத் திரும்பிச் சென்று, உண்மையான செல்வம் கிருஷ்ண நாமம் தான் என்பதை உணர்ந்து, கோவில் உண்டியலில் அந்தத் தங்கக் காசுகளைப் போட்டான். 

இனிமேல் பக்தியுடன் இருப்பேன், உழைத்து சாப்பிடுவேன் என்று கிருஷ்ணன் முன் பிரதிக்ஞை செய்தான். வாழ்க்கையில் நன்கு முன்னேறி, நல்ல நிலைமையையும் அடைந்தான்.







முந்தைய பதிவுகள் ---

கண்ணன் தரிசனம் -2025





 பெரியாழ்வார் திருமொழி

இரண்டாம்  பத்து

2-3 .மூன்றாம்  திருமொழி - போய்ப்பாடு 

காதுகுத்துதல்  - பன்னிருநாமப் பாடல் 


142

வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  

வார்காது தாழப் பெருக்கிக்* 

குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்* 

 கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்* 

 இனிய பலாப்பழம் தந்து* 

சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்* 

 சோத்தம் பிரான்! இங்கே வாராய்   4


143

சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  

சுரிகுழலாரொடு நீ போய்க்* 

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  

குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  

பிரானே! திரியிட ஒட்டில்* 

வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  

விட்டுவே! நீ இங்கே வாராய்  5


144

விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில்

 விரும்பி அதனை நான் நோக்கி* 

மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*

 மதுசூதனே என்று இருந்தேன்*

புண் ஏதும் இல்லை, உன் காது மறியும்* 

 பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 

கண்ணா! என் கார்முகிலே! 

கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   6


கண்ணா  உன் திருவடிகளே சரணம் !!!!

கேசவா உன் திருவடிகளே சரணம் !!!!





அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖



No comments:

Post a Comment