26 August 2024

திட நம்பிக்கை --- ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...

 ஜெய்  ஸ்ரீ  கிருஷ்ணா... 




கண்ணன் கதைகள் – திட நம்பிக்கை

ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், ‘கண்ணன் பெருமை’ என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அப்போது திருடன் ஒருவன் ஊருக்குள் வந்தான். அனைவரும் உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டதால், திருட ரொம்ப சௌகர்யமாகப் போய்விட்டது. ஒவ்வொரு வீடாகத் தேடியும் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. சரி, உபன்யாசத்தில் நிறைய கும்பல் இருக்கும், அதனால் அங்கு சென்றால் பணம் திருடலாம் என்று நினைத்து, கதை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

உபன்யாசகர், கண்ணனுடைய பெருமையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பொன்னில் கோர்த்த ஐம்படைத்தாலி, அழகிய ரத்தினங்களாலும், வைரங்களாலும் ஆன ஆபரணங்கள், ஹாரம், வளை, தங்க அரைஞாண், மாணிக்கமும், முத்தும் கோர்த்து செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கண்ணன் வரும் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்.

திருடனுக்கு ஏக சந்தோஷம். 

அவனுக்குக் கண்ணனைப் பற்றியெல்லாம் தெரியாது. 

சரியான பணக்காரப் பையன் போலிருக்கிறது என்று நினைத்து, கதை முடிந்ததும் அவரிடம் அவனைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.


கதை முடிந்தது, கும்பல் கலைந்தது, உபன்யாசகரிடம் சென்று, “அந்தப் பையன் யார், எங்கிருக்கிறான், சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். 

கண்ணனைப் பற்றிக் கூறியதை உண்மையென்று நினைத்துக் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று, தூரத்தில் தெரிந்த பூஞ்சோலையைக் காட்டி, அங்கேதான் அவன் விளையாட வருவான் என்று சொன்னார்.


திருடனும் அவர் சொன்னது உண்மையென்று நம்பி, அந்தப் பூஞ்சோலைக்குச் சென்று கண்ணனிடம் திருடுவதற்காகக் காத்திருந்தான். 

அவன் நினைவு முழுவதும் கண்ணனைப் பற்றியே இருந்தது. 

சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான். 

உபன்யாசகர் சொன்னபடி எல்லா நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான். சின்னப் பையனாக இருந்ததால், மிரட்டாமல்,”குழந்தையே! உன் நகையெல்லாம் எனக்குத் தருகிறாயா?” எனக் கேட்டான்.

 குழந்தையும் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தது!!!! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உபன்யாசகரை தேடிச் சென்று நன்றி சொன்னான். 

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் பணக்காரப் பையன் ரொம்ப அழகு, கேட்டவுடன் எல்லா நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னான்.


அவரால் நம்ப முடியவில்லை. “உண்மையாகச் சொல்கிறாயா?” என்று கேட்டார். 

“வாருங்கள், காட்டுகிறேன்” என்று கூறி, அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பூஞ்சோலைக்குச் சென்றான்.

 அவரிடம், “அங்கே பாருங்கள்! அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்” என்று காட்டினான். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் சிரிப்பு மட்டும் கேட்டது.


இத்தனை நாள் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் கதையாகச் சொல்லும் எனக்கு அவன் தெரியவில்லையே! இந்தத் திருடனுக்குக் காட்சி அளித்திருக்கிறானே! என்று கண்ணீர் விட்டார். 

வருந்தும் அவரைக் கண்டு கண்ணன் கருணை கொண்டான். 

“அந்தத் திருடனின் கையைப் பிடித்துக்கொள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அவ்விதமே பிடித்துக் கொண்டு நோக்கினார். 

கண்ணன் அவர் கண்களுக்குத் தெரிந்தான். 

உபன்யாசகர், “உன் கதையைச் சொல்லும் எனக்குக் காட்சி தராமல், திருடனுடைய கையைப் பிடித்ததும் காட்சி அளிக்கிறாயே! கண்ணா, இது நியாயமா?” என்று கண்ணனிடம் கேட்டார்.


அப்போது மாயக்கண்ணன்,” நீ இவ்வளவு காலம் என் கதையைக் கூறினாலும், நான் வருவேன் என்று நம்பவில்லை, ஆனால், இந்தத் திருடன் நான் வருவேன் என்று திடமாக நம்பினான். அதனால் அவன்முன் வந்தேன். இறை சிந்தனையில் பற்றுடன், இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால், என்னைத் தரிசிப்பது உறுதி” என்று கூறிவிட்டு மறைந்தான்.  திருடனும், திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு கிருஷ்ண பக்தன் ஆனான்.









முந்தைய பதிவுகள் ---


1. ஆயர்பாடி மாளிகையில்  ..2023

2. கண்ணா.... கருமை நிறக் கண்ணா.. 2023

3. கோகுலாஷ்டமி - கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் 2023

4. ஸ்ரீ கிருஷ்ண  ஜெயந்தி ---   எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்கள் ..... 2023

5. குறையொன்றும் இல்லை கண்ணா....  2023


 மாய கண்ணன்  ---- சாட்சி பூதம்   .... 2022

ராதையின்  கண்ணன் .... 2022

ஸ்ரீ   கிருஷ்ண ஜெயந்தி ... 2022

கோபாலன் ......2022

யசோதையின்  கண்ணன் ....2022

கண்ணன் வருவான் ... 2022


கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே..... 2021

குன்று  குடையாய் எடுத்தாய்... 2021

கண்ணன் வருவான் .. 2021


 கோபாலா ...கோவிந்தா - 2020...


பெரிய திருமொழி  - பத்தாம் பத்து

10 -6 எங்கானும்  ஈது  ஒப்பது 

உயர்வற உயர்ந்த மாயோன் வெண்ணெயுண்ட 

 எளிமையில் ஈடுபடல் 



நீண்டான் குறள் ஆய் நெடு வான்அளவும்*

  அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்,*

தீண்டாமை நினைந்து, இமையோர் அளவும்*

  செல வைத்த பிரான் அது அன்றியும் முன்,*


வேண்டாமை நமன் தமர் என் தமரை*   

வினவப் பெறுவார் அலர் என்று,* உலகு ஏழ்-

ஆண்டான் அவன் காண்மின் இன்று, ஆய்ச்சியரால்*  

அளை,வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே 5

1902



பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப்*

  பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்,*

ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்க வல்ல*  

பெருமான், திருமால், அது அன்றியும் முன்,*

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன்* 

 சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*

அழித்திட்டவன் காண்மின் இன்று, ஆய்ச்சியரால்*

  அளை,வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே 6

1903




ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖



2 comments:

  1. சிறப்பு. அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாமதமான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். குட்டி கிருஷ்ணரின் அழகான படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. கண்களையும், மனதையும் விட்டு அகலாத படங்கள். இந்த கதையும் நன்றாக உள்ளது. எவ்வளவு நம்பிக்கையான பக்த திருடன். அவர் இறைவனிடம் பக்தியை அல்லவா திருடியுள்ளார். இந்தக் கதையை என் பதிவிலும் முன்பு எழுதியுள்ளேன். இப்போது உங்கள் பதிவிலும் படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete