29 August 2021

கண்ணன் வருவான் ...

 













பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி

கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம் குழந்தைகள் இரு கைகளையும் 
சேர்த்து கொட்டி விளையாடும் விளையாட்டை சப்பாணி என்று அழைப்பார்கள். குழந்தைகளின்  அந்த வயதை சப்பாணிப் பருவம் என்றும்
அழைப்பது வழக்கம். 
கீழ்கண்ட பாசுரங்களில்  யசோதை பாவத்திலிருந்த ஆழ்வார், கண்ணனை
சப்பாணி கொட்டி விளையாட அழைக்கிறார்.


மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் *
ஆணிப் பொன்னால் செய்த ஆய்பொன் உடை மணி *
பேணி, பவளவாய் முத்து இலங்க * பண்டு 
காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2) 

1 75

திருக்கால்களில் மாணிக்கக் கற்களை வைத்துக் கட்டப்பட்ட சதங்கைகள் எழுப்பும் ஒலியுடனும்,
சுத்தமான, தேர்ந்தெடுத்த பொன்னால் செய்த இடுப்பிலணிந்த பொன்மணிக்கோவையுடனும்,
பவழ வாயில் பற்கள் முத்துப் போல் தெரியும் படியும், முன்பொருசமயம் மகாபலி சக்ரவர்த்தியிடம் பூமியை பெற்றுக்கொண்ட அத்திருக் கைகளை சேர்த்துக் கொட்ட வேண்டும். கரு நிற கூந்தலுடைய பிள்ளாய் நீ கைகளைக் கொட்டி
விளையாட வேண்டும்!










பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி *
தன் அரை ஆடத் தனிச் சுட்டி தாழ்ந்து ஆட *
என் அரை மேல் நின்று  இழிந்து உங்கள் ஆயர் தம் *
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி மாயவனே! கொட்டாய் சப்பாணி.

2 76


இடுப்பில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட அரைநாண் கயிற்றோடும் , 
மாணிக்கங்கள் வைத்துக் கட்டிய சதங்கைகள் அழகான ஒலியெழுப்ப, 
நிகரற்ற நெற்றிச்சுட்டி கீழே தொங்கியபடி அசைய, 
என் மடியில் இதுவரை அமர்ந்திருந்த கண்ணனே எழுந்து போய்
ஆயர்களின் தலைவனான உன் தந்தை நந்தகோபரின் மடியில்
 உட்கார்ந்து கொண்டு கைகளைக் கொட்டு. திருமாலே !
நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும் !

குறிப்பு: கண்ணனின் அழகை முழுமையாக அனுபவிப்பதின் பொருட்டே,
 தன் எதிரில் நந்தகோபர் அமர்ந்திருப்பதாக பாவித்து,கண்ணனை 
அவர் மடியில் அமரும்படி ஆழ்வார் முறையிட்டதாக வியாக்யானம்.










பல்  மணி முத்து இன் பவளம் பதித்தன்ன *
என் மணிவண்ணன்! இலங்கு பொன் தோட்டின் மேல் *
நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மை தன் *
அம் மணிமேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே! சப்பாணி. 

3 77

விதவிதமான மணிகளும், முத்துக்களும், பவளங்களும் பொருத்திச் செய்யப்பட்ட
 நீ அணிந்திருக்கும் பொன் காதணிகளின் அழகையும் 
மிஞ்சும்படியாக இருக்கும் முத்துக்கள் போல் பிரகாசிக்கும் உன் பற்கள், 
உன் திருப்பவள வாய்ச் சிரிப்பின்போது, 
தெரியும்படி உன் தாயின் இடுப்பிலமர்ந்து கைகளைக் கொட்டு, 
என் நீலமணி போன்ற நிறமுடையவனே! திருச்
சக்கரத்தை அழகிய கையில் ஏந்தியவனே!
அத்திருக் கைகளைக் கொட்டி விளையாட வேண்டும்!








தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட *
வான் நிலாஅம்புலீ! சந்திரா! வா என்று *
நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர் தம் *
கோ நிலாவ, கொட்டாய் சப்பாணி, குடந்தைக் கிடந்தானே! சப்பாணி. 

4 78

வெண்மையான நிலா காயும் முற்றத்தில் இருந்துகொண்டு 
வானில் உலாவும் சந்திரனை 
உன்னுடன் விளையாட அழைப்பதை இடையர்களின் தலைவரான நந்தகோபர்
பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் கண்ணா! 
அவர் மனம் குளிரக் கைககளைக்
கொட்ட வேண்டும்.  திருக்குடந்தையில் பள்ளி
கொண்டவனே! கைகளைக் கொட்டவும்!








புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து *
அட்டி அமுக்கி அகம் புக்கு, அறியாமே *
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் *
பட்டிக்கன்றே! கொட்டாய் சப்பாணி, பற்பநாபா! கொட்டாய்சப்பாணி. 

5 79

விளையாடுவதால் ஏற்பட்ட, உடம்பிலேறிய சேறும், மண் புழுதியும் என்மேல் அப்பிவிட்டு,
எனக்குத் தெரியாமல் தப்பி உள்ளே சென்று
சட்டியிலுள்ள தயிரையும், 
பானையிலுள்ள வெண்ணையையும் உண்டு மாட்டுத்
தொழுவத்தில் மேயும் கன்னுகுட்டியைப் போன்றவனே, கைகளைக் கொட்டவும்.
தாமிரைப்பூவை நாபியிலுடையவனே (பற்பநாபா),
உன் திருக்கைகளைக் கொட்டவேண்டும்.








தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது *
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்  *
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு * அன்று 
தேர் உய்த்த கைகளால் சப்பாணி, தேவகி சிங்கமே! சப்பாணி. 

6 80

தந்தையாகிய உன் சொல் கேளாமல் ராஜ்யத்தை தாங்களே ஆளும் 
பேராசையினால் பஞ்ச பாண்டவர்களின் மீது 
போர்தொடுத்து வந்த நூற்றுக்கணக்கான துர்யோதன
மன்னர்களை மாய்த்து, இது விஷயமாக
பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தேரை ஒட்டிய 
அத் திருக்கைகளால் சப்பாணி கொட்ட வேண்டும். 
தேவகியிடமிருந்து தோன்றிய சிங்கக் குட்டியைப் போன்றவனே,
நீ சப்பாணி கொட்ட வேண்டும்!










பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை *
இரந்திட்ட கைம்மேல் எறி திரை மோத *
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க *
சரந்தொட்ட கைகளால் சப்பாணி, சார்ங்க விற் கையனே! சப்பாணி. 

7 81

அன்று, ராமாவதாரத்தின் போது, 
ராமனாக அவதரித்திருந்த நீ,  இலங்கை செல்வதற்காக
கடலை வழி ஏற்படுத்துமாறு கேட்க,
கடலோ அலட்சியமாக, 
கேட்ட உன் கைகளின் மேல் அலையை மோதச்செய்ய,  
அதனால் நீ மிகவும் கோபமடைந்தவனாய் அம்புகளை தொடுத்து
 கடலின் மீது செலுத்திய அத்திருக்
கைகளால் சப்பாணி கொட்டவும்.
சார்ங்கமென்னும் தனுஸ்ஸை ஏந்தியவனே,
சப்பாணி கொட்டவேண்டும்!





குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை *
நெருக்கி அணைகட்டி  நீள் நீர் இலங்கை *
அரக்கர் அவிய அடு கணையாலே *
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே! சப்பாணி.

8 82

அலை மோதிய கடலை அடங்கவைத்து, 
வானர சேனையைக் கொண்டு இலங்கை வரை நீண்ட பாலம் அமைத்து,  
கடலால் சூழப்பட்ட இலங்கையை அடைந்து அங்குள்ள
ராக்ஷஸர்களுடன் சரமாரியாக அம்புகளை எய்து
கடுமையாகப் போர் செய்து, அவர்களை அழித்த அந்த ஸாகஸக் கைகளாலே 
சப்பாணி கொட்ட வேண்டும். சக்ராயுதம் ஏந்திய திருக்
கைகளாலே சப்பாணி கொட்டவேண்டும்!








அளந்து இட்ட தூணை அவன் தட்ட * ஆங்கே 
வளர்ந்திட்டு வாள் உதிர்ச் சிங்க உருவாய் *
உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம் * 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி, பேய்முலை உண்டானே! சப்பாணி.

9 83

பகவான் இருக்கிறானா என பரிசோதிப்பதின் பொருட்டு, 
ஹிரண்யகசிபு அவன் கட்டின தூணையே தகர்க்க, 
 அத்தூணிலிருந்து பெரிய வடிவாய் கூரிய நகங்களுடன் சிங்க
வடிவில் திருவவதரித்து, அவன் மனம்
ஒருவேளை மாறுமோ என நிதானித்து,
அப்படி மாறாததால், ஒளிபொருந்திய அவனுடைய அகன்ற மார்பை கிழித்த கைகளால் சப்பாணி கொட்டவும்! பூதனையின் விஷப்பாலை
சுவைத்தவனே! சப்பாணி கொட்டவும்!





அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை *
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி *
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாக *
கடைந்திட்ட கைகளால் சப்பாணி, கார்முகில் வண்ணனே! சப்பாணி. 

10 84

தேவர்கள் உன்னைச் சரணமடைந்ததை உத்தேசித்து, 
ஆழமான க்ஷீராப்தி ஸாகரத்தை நெருங்கி, 
மந்தார மலையை மத்தாக எடுத்து நிறுத்தி, 
வாசுகியென்னும் பாம்பை கயிறாக மத்தில் (மலையில்) கட்டி, 
பாற்கடல் கடைந்த அத்திருக் கைகளால் சப்பாணி
கொட்டவும்! மேகம்போன்ற நிறமுடையவனே,
சப்பாணி கொட்டவும் !









ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை *
நாட் கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன் *
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் *
வேட்கையினால் சொல்லுவார் வினைபோமே. (2)

11 85


இடையர்களுக்குத் தலைவனும்,
அடியார்களுக்காக அவதரித்தவனுமான திருக்கண்ணபிரான்
 சப்பாணி கொட்டி அநுக்கிரகம் செய்ததை, நாள்தோறும்
மணம் கமழும் பூக்களால் திகழும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் 
சேர்ந்த பெரியாழ்வார் ஆசையினால் அருளிச் செய்த இப்பத்து
சப்பாணி பாசுரங்களை அன்போடு
சொல்லுபர்வகளின் பாபங்கள் விலகும்.





பலன் நோக்காத பக்தி

பஞ்சபாண்டவர்களில்  அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். 

அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான்.

பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை.

அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே?

கண்ணன் புன்னகைத்தான். "அர்ஜுனா! என்னைப் பூஜித்ததால் அதுவும் வண்டி அளவு பூக்களைப் போட்டுப் பூஜித்ததால் நீயே மிகவும் பக்தி கொண்டவன் என்று எண்ணிக்கொண்டாயல்லவா?" என்று கூறியபோது அர்ஜுனன் திகைத்தான்.

"ஆம் கண்ணா! அதிலென்ன சந்தேகம்? எண்ணற்ற மலர்களைக் கொண்டு உன்னைப் பூஜித்தவனல்லவா நான்?"

"அப்படியானால் உ ன்னிலும் அதிக மலர்களைக் கொண்டு என்னைப் பூஜித்தவனை உன்னை விட அதிக பக்தியுள்ளவன் என்று கூறலாமல்லவா?"

"அப்படிப் பூஜித்தவன் உள்ளானா கிருஷ்ணா?"

"ஆம். அவன்தான் பீமன்" அர்ஜுனன் திகைத்தான்.
"கண்ணா! பீமன் ஒருநாள் கூட உன்னைப் பூஜித்து நான் பார்க்கவில்லையே? "

"உண்மைதான். பீமன் பூஜித்தது யாருக்கும் தெரியாது. எனக்கும் பீமனுக்கும் மட்டுமே தெரியும்."

அர்ஜுனன் துக்கத்தில் ஆழ்ந்தான்.
 அவன் உள்ளம் துயரத்தில் மூழ்கியது.
கண்ணனைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்.

"அர்ஜுனா! துயரப்படாதே. உன் உள்ளத்தில் நீயே பக்திமான் என்றும் உனக்கே நான் உரிமையானவன் என்றும் நீ கர்வம் கொண்டிருந்தாய்.

அது சரியல்லவென்பதை அறிவிக்கவே இந்நிகழ்ச்சி நடந்தது.

"பீமன் யாரும் அறியாதவாறு எவ்வாறு பூஜை செய்தான்?"

"அர்ஜுனா! நீங்கள் வனவாசத்தின் போதும் அக்ஞாத வாசத்தின் போதும் காடுகளிலும் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தீர்கள் அல்லவா?

அப்போது பீமன் தன் கண்ணில் கண்ட மலர்கள் அத்தனையையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்கு அர்ச்சித்து விடுவான்.

 நானும் அவனது உள்ளத்தின் அன்பைப் புரிந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். அப்படி அவன் அர்ச்சித்த மலர்கள்தன்ன் அதோ பார். மலைபோல் குவிந்துள்ளது. 

நீ அர்ச்சித்தவை இதோ இச்சிறு குன்று போல் உள்ளது. 
உள்ளத்தின் தன்னலமில்லாத அன்பே உண்மையான பக்தி. நீ மலர் பறித்து பூஜை செய்ததை விட மனதளவில் பூஜித்த பீமனின் பக்தியே சிறந்தது. ஒப்புக்கொள்கிறாயா?"

அர்ஜுனனின் கண்கள் திறந்தன. அவனது கர்வம் அகன்றது. பரிசுத்தமான மனதோடு கண்ணனை தியானித்தான். தூய்மையான அர்ஜுனனை இப்போது கண்ணன் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அனைவரும் வைகுண்டம் சேர்ந்தனர்







ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 



1 comment:

  1. சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete