09 November 2016

கூடலகரின் சிறப்புகள்.... - திருக்கூடல்,மதுரை ... (2)


கூடலகரின்  சிறப்புகள்....






மூன்று அடுக்குக் கோயில். ....

அஸ்டாங்க  விமானத்தின் கீழ் தளத்தில்  கூடலகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்த்த கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற நாமத்தில்  காட்சி அளிக்கிறார்...







இரண்டாவது தட்டில்  சூரிய நாராயணர்  நின்ற கோலத்தில் ,பிரம்மா, விஷ்ணு, சிவன்  ஆகிய முப்பெரும் தெய்வங்களுடனும்...அஸ்டதிக்  பாலகர்களும் ஓவியமாக காட்சி அளிக்கின்றனர்...எனவே இச்சன்னதி ஓவிய மண்டபம் என அழைக்கப்படுக்கிறது...






இணையத்திலிருந்து




 இத்தளத்திலிருந்து  20 படிகள் ஏறினால்... மூன்றாவது தட்டில் சீராப்தி நாராயணர்  பள்ளி கொண்ட   திருக்கோலத்தில் தாயார்களுடன்   காட்சித் தருகின்றார்.






இணையத்திலிருந்து



 மூன்று அடுக்குகளிலும் உள்ள பெருமாள் சிலைகள்  சுதை  உருவங்களாக  (சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட) இருக்கின்றனர்...சூரிய நாராயணர்  மற்றும் சீராப்தி நாராயணர்
உருவங்கள் வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. கீழே கருவறையில் வழிபாட்டில் உள்ள பெருமாளுக்கு அவ்வப்போது தைலக் காப்பு நடைபெறும்.



பெருமாள்  இக்கோவிலில் மூன்று நிலைகளிலும்  மூன்று கோலங்களில் காணப்படுகிறார்.



  • பெரியாழ்வாரின்  திருப்பல்லாண்டு .....!



 "வல்லபதேவன்" என்ற  மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது "முக்தியளிக்கும் தெய்வம்  எது '. என்று சந்தேகம் கொண்டு....


 தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும்   முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக
பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும்
என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே  அறுந்துவிழும் என்றும்,  இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான்.


இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானிகளும்  தத்தம் மதமே சிறந்ததென்று  வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக  இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே
இருக்கும் பெரியாழ்வாரை விழிமின்....


அவர் வந்து திருமாலே பரம்பொருள்,  வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று  கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு
எழுந்தருளினார்.


    சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள், மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம்  எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது.


இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து  போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து ஊர்வலமாய் அழைத்து வரலானான்.



இணையத்திலிருந்து




இக்காட்சியைக் காண கூடலழகரே  பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார்.








   

வானில் திடீரென்று ஆயிரம் ஆதவன் அவனியில் உதித்தப் பேரொளி தோன்ற, அதன் நடுவே குளிர்ந்த வெண்மேகமாய், கொள்ளை அழகுடன் கூடலழகர் காட்சித் தந்தார்.

        உடனே அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் கூடலழகரைத் தரிசிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட விஷ்ணுசித்தர் சித்தம் சிதறினார். நெஞ்சம் பதறினார். அடியனாய் இருந்த அவர் சிந்தையில் தாய்மை குடியேறியது.

        இறைவன் மேல் கண்ணேறு ஏதாவது பட்டுவிடுமோ? என்று கலங்கி நின்றார். கல்லடியில் தப்பித்தாலும் கண்ணடியில் தப்பிக்க இயலாதே என்று நடுநடுங்கிப் போனார். உடனே அனைவரின் சிந்தையையும் மாற்றும் வண்ணம், கார்முகில் வண்ணன் மேல் திருப்பல்லாண்டு பாடினார். அங்கு கூடியிருந்தோரும் அவருடன் சேர்ந்து பாடினர்.


அந்தப் பாடல்கள்   தான் இந்த திருப்பல்லாண்டு!...




வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்                  கொண்மின்                                                                    

கூழாட்பட்டு நின்றீர் களை எங்கள்    குழுவினில் புகுதலொட்டோம்

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்  இராக்கதர் வாழ் இலங்கை

பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

திருப்பல்லாண்டு - 3





ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து

கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ

நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று

பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.


திருப்பல்லாண்டு  - 4




     இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத்
தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக அமைந்துள்ளது..


இத்தகைய சிறப்பான திருக்கோவிலை நாங்களும் கண்டு....இங்கையும் பகிர்ந்ததில்  மிகவும் மகிழ்ச்சி....



நீங்களும் மகிழ்ந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்...





நன்றி...


அன்புடன்

அனுபிரேம்

5 comments:

  1. மிக அருமையாக கோவில் வ்ரலாற்றை எழுதி இருக்கிறீர்கள் அனுராதா பிரேம்.
    நான் சுருக்கமாய் போட்டு இருந்தேன் என்பதிவில்.
    படங்கள் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் ... தொடர்க

    ReplyDelete
  3. This is a interesting temple. Must visit some time.

    ReplyDelete
  4. பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்த இந்தக் கதை நான் இது வரை க்கேட்டதில்லை ,நன்றி . படங்கள் வெகு அழகு

    ReplyDelete
  5. arumai,sri periyalwar thiruvadigalae saranam

    ReplyDelete