05 February 2018

கூரத்தாழ்வான்

இன்று  (5.2.2018)  கூரத்தாழ்வான்    அவதார தினம் .....

தை – ஹஸ்தம்........


















கூரத்தாழ்வான் வாழி திருநாமம்!


சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!

ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே!

எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!




கூரத்தாழ்வான்..

பிறந்த ஊர் : காஞ்சிக்கு அருகே உள்ள கூரம்

பிறந்த காலம் : கி.பி.1010

நட்சத்திரம் : தை – ஹஸ்தம்

தந்தை : கூரத்தாழ்வார்

தாய் : பெருந்தேவி அம்மாள்


சிறப்பு : பெருமாளின்  திருமார்பில் விளங்கும் திருமறுவின் அம்சமாகப் பிறந்தவர் .





இவரது இயற்பெயர் ஸ்ரீ ஸ்ரீவத்ஸாங்கன். தமிழில் இதன் பொருள் திருமறுமார்பன். ஸ்ரீ வைணவ நெறிகளில் சிறந்து விளங்கியதால், கூரத்துக்கு அரசர் எனப் பொருள்படும் வகையில் கூரேசர் என்ற பெருமைப் பெயரும் பெற்றார்.

இவர் வைணவ சித்தாந்தங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். செல்வச் செழிப்பு மிகுந்த குலத்தில் பிறந்த இவரது சிறு வயதிலேயே, இவரது தாயார் இறந்துவிட்டார்.

தந்தைக்கு மறுமணம் பேசினார்கள். ஆனால் இரண்டாம் தாயின் கட்டுத்திட்டங்களால் கூரேசரின் வைணவப் பற்றில் ஏதேனும் குறை ஏற்பட்டுவிடுமோ என எண்ணி அவரது தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கூரேசர் மட்டுமல்ல, அவரது ஸ்ரீ வைணவக் கொள்கைகளும் வளர்ந்தன.

 செல்வக் குடியில் பிறந்த அவர் தான தர்மங்களைச் செய்தார்.

காஞ்சியில் குடி கொண்ட பேரருளாளப் பெருமாள் திருக்கோவிலில் இரவு நிவேதனம் முடிந்து, கதவைச் சாத்தும்வரை, கூரத்தாழ்வான் இல்லக் கதவும் மூடுவதில்லை.

தொடர்ந்து வந்தோருக்கு இல்லையெனக் கூறாமல் அன்னம் அளித்துவந்தார்.

ஸ்ரீ ராமானுஜரின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்ட, கூரேசர் அவரையே ஆச்சாரியனாகக் கொள்ள வேண்டி, தன் மனைவியுடன் கிளம்பினார்.

கிளம்புவதற்கு முன் தன் சொத்துக்களை எல்லாம் தானமாக வாரி வழங்கினார்.

அவர் வழக்கமாக உணவு உண்ணும் அழகிய தங்கத் தட்டை மட்டும் அவர் மனைவி கையில் எடுத்துக்கொண்டார்.

ஆனால் கூரேசரோ அதனை வாங்கிக் கண் காணாமல் விட்டெ எறிந்தார். செல்வங்களில் அவரது மனம் ஈடுபடவில்லை.


போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்ற க்ரந்தத்தை மீட்டெடுக்க  எம்பெருமானாருடன் இவரும் காஷ்மீரம் சென்றார்.

திரும்பி வரும் வழியில் அந்த க்ரந்தத்தை இழந்த பின்னர், இதைக் கண்டு எம்பெருமானார் வருந்த, அதற்கு கூரத்தாழ்வான் தான் அந்த க்ரந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று எம்பெருமானாருக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு திருவரங்கம் வந்தவுடன், எம்பெருமானாருடைய மிகப் பெரும் க்ரந்தமான “ஸ்ரீ பாஷ்யம்” என்னும் க்ரந்தத்தை எம்பெருமானார் அருளிச்செய்ய அதை இவர் பனை ஓலைகளில் ஏடுபடுத்துவதற்கு உதவி புரிந்தார்.

எம்பெருமானாருக்குப் பதிலாக இவர் சைவ அரசனிடம் சென்று, “ருத்ரன் தான் மிகப் பெரியவன்” என்று அரசன் கூறும் கூற்றை மறுத்து பேசி, “ஸ்ரீமன் நாராயணனே மிகவும் உயர்ந்தவன்” என்று கூறினர். இந்த விவாதத்தின் இறுதியில் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை (சம்பிரதாயம்) காப்பதற்காக தன்னுடைய தர்சனத்தை (கண்கள்) இழந்தார்.


கூரத்தாழ்வான் , திருமாலிருஞ்சோலை திவ்ய தேஸ யாத்திரை செல்லும் பொழுது மூன்று ஸ்தவங்கள் அருளிச் செய்தார்.

மேலும் எம்பெருமானாரின் ஆக்ஞ்சைப்படி “ வரதராஜஸ்தவம் “ அருளினார். பின் ஸ்ரீஸ்தவம் என்ற நூலையும் அருளினார்.

 ஆழ்வாரின் இந்த பஞ்சஸ்தவங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இவை தவிர கூரேச விஜயம் உட்பட் இன்னும் சில நூல்களை இயற்றியுள்ளார்.



கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.வேத வ்யாச பட்டர் ஆவர்கள். இருவருமே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்க காரணமாயிருந்தனர்.



ஓம் நமோ நாராயணாய நம!!
கூரத்தாழ்வான்  திருவடிகளே சரணம்!!





அன்புடன்
அனுபிரேம்.



4 comments:

  1. ஓம் நமோ நாராயணாய நம!!
    கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!!

    அருமையான வரலாறு.
    வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  2. ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே!
    எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!..

    கூரத்தாழ்வார் ஆசிகளினால் கண் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. தகவல்கள் அருமை...மிக்க நன்றி

    ReplyDelete