18 January 2026

தை அமாவாசை... அபிராமி அந்தாதி உதித்த நாள் இன்று ...

 தை அமாவாசை...




ஆத்தாளை எங்கள் அபிராம 

  வல்லியை அண்டமெல்லாம்

பூத்தாளை மாதுளம்பூ 

  நிறத்தாளைப் புவியடங்கக்

காத்தாளை ஐங்கணைப் 

  பாசாங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை முக்கண்ணியைத் 

 தொழுவார்க்கொரு தீங்கில்லையே..


அபிராமி அந்தாதி வரலாறு:

   மாயூரத்தினின்றும் காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வழியில் காலனைக் காலால் கடிந்த எம்பெருமான் நெஞ்சுகந்து கோயில் கொண்டிருக்கும் திருத்தலமாகிய திருக்கடவூர் இயற்கை எழிலும் தெய்வத் திருவருட் பெருக்கமும் பெற்று விளங்குகின்றது.

அவ்வூரின்கண் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் பரந்த அறிவும் சிறந்த ஆற்றலும் கனிந்த பக்தியும் பொருந்திய அந்தணர் மரபில் ஞானக்கொழுந்தே போல் தோன்றினார் அபிராமி பட்டர். 

இவருக்குக் குழந்தைப் பருவத்தில் பெற்றோர் இட்ட பெயர் இன்னதெனத் தெரியவில்லை. ஆயினும், கருவிலே திருவுடையராய்த் தலைமுறைத் தலைமுறையாக வந்த இசைக் கலையிலே வல்லவராய் அம்பிகையின் அருளானந்தக் கடலில் மூழ்கிச் சக்தி வணக்கத்தில் கருத்தொன்றி நின்ற இவரை அத்திருத்தலத்தில் வாழ் அம்பிகையின் திருநாமத்தைச் சேர்த்து அபிராமிபட்டர் என வழங்கியது சாலப் பொருந்துவதாகும்.

 ஸ்ரீ அபிராமி அம்மையின் மீது இவர் கீர்த்தனம் ஒன்றும் பதிகம் ஒன்றும் பாடியிருப்பதாகத் தெரியவருகிறது.

     இப்பெரியார் சக்தி பூஜையும் யோக நெறியும் செவ்வனே பயின்று வந்தார். அதனால் யோக சித்தி எய்தி என்றும் சிதா காசத்தே அம்பிகையை ஒளிவடிவமாகக் கண்டு பேரின்பத்து ஆழ்ந்திருந்தார். இவ்வாறு பக்தி  நிறைந்து முத்தி நெறியில் பித்தர் போலவும் பேதையர் போலவும் உலகப் பற்றற்று அனுபூதிச் செல்வராய் விளங்கிய பட்டரை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏதோ ஒரு துர்த்தேவதையை ஆராதித்து வாமாசாரத்தைக் கைக்கொண்டு மனம் பேதலித்து அலைபவர் என்றே அவர்கள் எண்ணினார்கள்; தூற்றவும் செய்தார்கள்.

     சத்தியமான நித்தியத்தில் நிலைத்த மனமுடையார் மற்றவர் ஏச்சையும் பேச்சையும் ஒரு பொருளாகக் கருதுவரோ? ஆகையால் பட்டரும் உண்மை என்னதென்று உணராத மக்களை மாக்கள் என்றே எண்ணி  வாழ்ந்திருந்தார்.

     அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் மஹாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர்; தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்திலே நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் உள்ளகிடக்கையை நிறைவு செய்துகொண்டார்.

மீண்டும் திரும்புங்கால் ஸ்ரீ அமுத கடேசரையும் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவா மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார். பின்னர், அரசர் தமது நித்தியானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார்.

     அப்போது அபிராமி பட்டர் அம்பிகையின் ஆலயத்துச் சந்நிதியில் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவரது பரையற்ற தோற்றமும் புத்தொளி வீசும் முக நலமும் தியான நிலையில் சிறிதே முகிழ்ந்திருந்த இரு விழிகளும் அரசர் பெருமானின் அகத்தைக் கவர்ந்தன.

 சரபோஜி மன்னர் பக்தியிற் சிறந்தவராதலின் பட்டரின் தன்மையை ஒருவாறு உணர்ந்து அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று வினவினார்.

     அப்போது அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்;

வேத விருத்தமான வாமாசாரங்களில் ஈடுபடுபவர்; ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அரசர் ஒன்றும் கூறாது உட்சென்று அம்பிகையைத் தரிசனம் செய்தார். 

ஆனால், அரசருடைய மனத்தில் பட்டருடைய தோற்றம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகையால் திரும்பி வரும்போது அரசர் பட்டரோடு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக்கொண்டு பேச வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் அவரை நோக்கி, “பட்டரே, இன்று என்ன திதி?” என்று கேட்டார்.

     காலத்தொடு கற்பனை கடந்து துவாதசாந்தப் பெருவெளியில் துரியாதீதமாய்ப் மூலத்தலத்திலே  முளைத்தெழுந்த முழுமதியாக அம்பிகையைக் கண்டு அக்காட்சிக் களியிலே மதர்ந்து நின்ற அபிராமி பட்டருடைய செவியில் அரசர் சொன்ன சொற்கள் அரைகுரையாக விழுந்தன; 

முழுமதியின் ஒளி வட்டத்திடையே அம்பிகையின் அருள்தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்று விடையிறுத்தார்.

     அருகிலிருந்த பெரியார்கள் இது கேட்டு ஒன்றும் தோன்றாது நின்றனர். பட்டரைப்பற்றி இல்லனவும் பொல்லனவும் சொல்லி வந்தவர்கள் அரசரே பட்டரின் உன்மத்த நிலையை உணர்ந்து கொண்டார் என எண்ணி இறுமாந்தனர்.

 அரசரும் ‘அவர்கள் கூறியது உண்மையே போலும்’ என எண்ணித் தம் இருப்பிடத்திற்கு ஏகினார்.

     அரசரும் அவருடைய பரிவாரமும் அகன்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். 

தம்மை இதுகாறும் ஏசியும் பேசியும் பல்லாற்றானும் இடையூறு புரிந்தும் வந்த மாந்தரை விலங்கென்று எண்ணி மாதவம் செய்து வந்த அம்பிகை அடியார், பொய்யரின் மொழிகள் மெய்யெனத் தோன்றுமாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை எண்ணி மறுகினார். 

உடனே பட்டர், தமக்கென்று ஒன்றேனும் இன்றி யாவற்றையும் அம்பிகைக்கே அர்ப்பணம் செய்துவிட்ட வைராக்யம் உடையவர் ஆதலின், அம்மையே அப்பழியினின்றும் தம்மை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டார். 

அம்பிகையின் சந்நிதியில் ஆழ்ந்தவொரு குழி வெட்டி அதில்  பெருநெருப்பு மூட்டி அதன் மேலே ஒரு விட்டத்தினின்றும் நூறு ஆரம் கொண்ட ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டார். 





பிறகு அதன் மீதேறி அமர்ந்து அம்பிகையை மனத்தால் நினைத்துத் தலையால் வணங்கி,“சோர்வினால் வந்த மாபெரும் பழியைத் துடைத்துத் தாரணி போற்றும் தலைமையைத் தாராளெனின் என் உடலை இவ்வெரிக்கு இட்டு உயிர் துறப்பேன்” எனக்கடுஞ்சூள் உரைத்து,

“உதிக்கின்ற” எனத் தொடங்கும் இந்த அந்தாதியைப் பாடத் தொடங்கினார். 

1

''உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.''

ஒவ்வொரு பாடலும் முடிந்த உடனே உறியின் ஒவ்வொரு கயிற்றை அரிந்து கொண்டே வந்தார். 

இவ்வாறாகக் கதிரவனும் மேலைக் கடலை நண்ணினான். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

79. கட்டுகளில் இருந்து விடுபட

'' விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. ''


என்ற பாடல் முடிந்தது, உடனே ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்! தன் தாடங்கம் ஒன்றைத் தனியே எடுத்து வான வீதியில் தவழ விட்டாள்.



அத்தாடங்கம் வட்ட மதியின் உருவாய்ப் பலகோடி நிலவின் ஒளிபொழிந்து நீலவானக் கடலிலே மின்வண்ண அன்னம் போல ஊர்ந்து வந்தது. ஆனந்த சொரூபிணியாய் ஞானப் பிழம்பாய்க் காட்சியளித்த அப்பிராட்டி பட்டரை நோக்கி,

“வாய் சோர்ந்து மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிறுவினோம்; தொடங்கிய அவ்வந்தாதியைத் தொடர்ந்து முடிப்பாயாக

 என ஆணையிட்டு மறைந்தாள்.

     'சொல்லும் பொருளும்' என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியாகிய அம்பிகையின் தரிசனத்தாலும் அமுத மாரியென அவள் கூறிய மொழியாலும் பரவசமுற்று,

80. ஆனந்தக் களிப்பு

'' கூட்டியவா, என்னைத் தன் அடியாரில், கொடியவினை

ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்

காட்டியவா, கண்டகண்ணும் மனமும் களிக்கின்றவா

ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே! ''


எனத் தம் அனுபவ நிலையைத் தெளிவுறப் பாடினார், மேலும் இருபது செந்தமிழ்ச் செய்யுட்களை இயற்றி அந்தாதியை முடித்தருளினார்.

     திருத்தாடங்கத் திகழொளி புவனமெங்கும் விளங்கி நிற்க அந்த அதிசயத்தைக் கண்ட யாவரும் “அற்புதம்! அற்புதம்!” என ஆரவாரம் செய்தார்கள். சரபோஜி மன்னரும் அது கண்டு வியந்து அம்பிகையின் அடியாரைப் பிழைத்த செயலுக்கு வருந்தி அவரடி பணிந்து தாம் செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டினர்.

நீர்கிழிய எய்த வடுப்போலச் சான்றோர் கொண்ட சினம் மாறுமன்றோ? அதனால் பட்டரும் உவந்திருந்தார்.

அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

     அடியார் அறியாதிழைத்தது தவறாயினும் தாமே வருந்தித் தன் சரணே  அரணென்று புகுவாராயின் அடியார்க்குப் பழிவராது அருள் புரியும் பெருந்தகைமை எம்பிராட்டி அபிராமிக்கே உளதாகும்.

 இவ்வந்தாதியை முழுவதும் இடை விடாது ஓதி வருபவர் இம்மையில் எல்லா நலன்களும் பெற்று மறுமையில் முக்திப் பேறும் அடைவர் என்பது திண்ணம்.




 95. எனது எல்லாம் உனதே!

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் ;அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே!

இமயமலை அரசனின் திருமகளான கோமளவல்லித் தாயே! என்றும் அழியாத குணக் குன்றே! அருட்கடலே! நன்மை வந்த போதிலும், தீமை வந்த போதிலும் அவற்றைப் பற்றி நான் வருந்துவது இல்லை. அவை எல்லாம் உன்னையே சாரும். என்னுடைய எல்லாவற்றையும் உன்னுடையது என்று என்றோ நான் உனக்குக் காணிக்கை ஆக்கிவிட்டேனே !


100. நெஞ்சில் நிலவும்!

குழையத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கை வல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொரு கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

குழையும்படித் தழுவிய சிவபெருமானுடைய கொன்றை மலர் மாலையின் மணம் கமழும் ஸ்தனங்களை உடைய அபிராம வல்லியின் மூங்கிலை வெல்லும் நீண்ட தோள்களும், கரும்பு வில்லும், அழகிய மலர்க்கணைகளும், வெண் புன்னகையும் மானின் விழிகளை வெல்லும் கண்களும் என் உள்ளத்தில் தோன்றுகின்றன.


101. நூற் பயன்.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே.

அண்டம் எல்லாவற்றிலும் பூத்து இருப்பவளை, மாதுளம் பூ நிறத்தினளை, அனைத்து உலகங்களையும் காக்கின்றவளை, அங்குச பாசமும் அழகிய வில்லையும் ஏந்திய கரங்களை உடையவளை, மூன்று கண்களை உடையவளை, அபிராமி அன்னையைத் தொழுபவர்களுக்கு என்றும், எங்கும், எப்போதும் எந்தத் தீங்கும் நேராது!  நேராது! நேராது!





அபிராமி அன்னையின் திருவடிகளே சரணம் ...


அன்புடன் 
அனுபிரேம்💞💞


No comments:

Post a Comment