27 January 2026

இன்று மத்வ நவமி

 இன்று மத்வ நவமி..

மாத்வ சம்பிரதாயத்தை தோற்றுவித்த மஹான் ஸ்ரீ மத்வாச்சாரியார் பத்ரிகாச்ரமம் பிரவேசித்த தினம்.





இதே நாள் 1317 ஆம் ஆண்டு ஆசார்ய மத்வர்  உடுப்பியில் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகே  உள்ள அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு ஐத்ரேய உபநிடதம்   கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த போது   திடீரென்று அவர்மேல் பூமழை பெய்து அவரை மூடியது. அவரை அதற்குமேல் யாரும் அங்கு  காண முடியவில்லை. அப்போது அவருக்கு வயது 79. ஆனால் அவர் இன்றும்  இமாலயத்தில் உள்ள பத்ரிகாசிரமத்தில் வாழ்ந்து  மஹாவிஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ வேதவ்யாசருக்கு சேவை செய்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

அத்வைத சித்தாந்தத்தை ஆசார்ய ஆதி சங்கரரும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஆசார்ய ஸ்ரீ ராமானுஜரும் நிறுவினார்கள்.   

ஆசார்ய மத்வருக்கு  "பூர்ண பிரக்ஞர்" மற்றும் "ஆனந்ததீர்த்தர்"என்ற பெயரும் உண்டு.

இவர் வாயு பகவானின் மூன்றாவது அவதாரமாக கருதப்படுகிறார். 


திரேதா யுகத்தில் அனுமனும்,  துவாபர யுகத்தில்  பீமனும் முதல் இரண்டு அவதாரங்கள். ஆசார்ய மத்வர் ஒரே நேரத்தில் அனுமனாக ராமருக்கும், பீமனாக கிருஷ்ணனுக்கும், மத்வராக வேதவியாஸருக்கும் பூஜை செய்ததைப் பார்த்த இவருடைய சிஷ்யர் த்ரிவிக்ரிம பண்டிதாசாரியார் அந்த க்ஷணத்தில்  இயற்றியதே “ஹரி வாயுஸ்துதி”. இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்தால் துன்பம், நோய், பிரச்சனைகள் நீங்கி சகல நன்மைகள் கிட்டும்.



இவருடைய தத்துவம் 

பரமாத்மா ஸ்ரீ ஹரி  மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கிறார். 

ஸ்ரீ ஹரி  ஒருவரே சுதந்திரமானவர். உலகில் வாழும் மற்ற உயிர்களும் ஜடப்பொருள்களும் ஸ்ரீ ஹரியை சார்ந்தே அவர் கட்டுப்பாட்டில்  இருக்கும்.

முக்தி என்பது பகவான் ஸ்ரீ ஹரியின்  திருவடிகளை அடைவதே.  

தூய பக்தித் தொண்டினால் மட்டுமே அந்த முக்தி சாத்தியமாகும். பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.

மத்வசித்தாந்தத்தின்படி  இந்த உலகம் மாயை அல்ல. உண்மையானது.

ஸ்ரீ ஹரி  அதாவது பரமாத்மா வேறு  மற்ற நம்மைப் போன்ற ஜீவாத்மா வேறு. இதுதான் த்வைதம் என்பது. த்வைதம் என்றால் இரண்டு என்று பொருள்.   

அவர் தன் கொள்கைகளுக்கு ”தத்வ வாத” என்று பெயர் சூட்டினார்.

ஆசார்ய மத்வர் கூறிய ஐந்து பேதங்கள் 

1.ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.

2. ஒரு ஜீவன் மற்ற ஜீவனிடமிருந்து வேறுபட்டது. ஜீவன்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டு.ஜீவன்கள்  படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முக்தி நோக்கி செல்கின்றன

3.ஜீவாத்மா மற்ற ஜடப் பொருள்களிலிருந்து  வேறு பட்டது

4.ஜடப்பொருள் பரமாத்மாவிடமிருந்து வேறுபட்டது

5.ஒரு ஜடப்பொருள் மற்ற ஜடப்பொருளிலிருந்து வேறு பட்டது

மகாவிஷ்ணுவை அடைய ஒரே மார்க்கம் பக்தி மார்க்கம் மட்டுமே.


ஆசார்ய மத்வர் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பிக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பாஜகக்ஷேத்திரம்  என்ற இடத்தில் மத்யகேஹ பட்டருக்கும் வேதவதிக்கும் 1238 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று 32 இலட்சணங்கள் கொண்ட   மகனாய் அவதரித்தார்.

தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன்.

தாய்மொழி துளு. பதினாறு வயதில் சந்நியாசம் பெற்றார்.ஆசார்ய மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம், நீராடிய குளம் ஆகிய எல்லாவற்றையும்  இன்றும் பார்க்கலாம்.

இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.பாரததேசம் முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டார்.

 ஸ்ரீவேதவ்யாசரிடம் பாடம் பயின்று, அவருடைய  அருளினால் ப்ரம்ம சூத்ர பாஷ்யம் உட்பட 37 கிரந்தங்களை இயற்றினார். இவை சர்வ மூல க்ரந்தம் எனப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார். முப்பத்தி இரண்டு  அத்தியாயங்கள் கொண்ட மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்ற கிரந்தம்  மகாபாரதத்தின் உட்கருத்துக்களை யெல்லாம் எடுத்துச்சொல்வது.

மத்வ சம்பரதாயத்தில்  முதன்மையாக ஸ்ரீ ஹரியை வழிபட்டாலும், ருத்ர வழிபாடுகளையும் மேற்கொண்டு மத்வ யதிகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும்  உணர்த்திய பெருமை ஆசார்ய மத்வரையே சாரும்.

உலகப் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலை நிர்மாணித்து கிருஷ்ண விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவர்  இவரே



இன்றும் உடுப்பியில்  அவர் ஏற்படுத்திய எட்டு  மடங்களின்.( கிருஷ்ணாபூர் , சிரூர்,காணியூர், சோதே,பாலிமார், அதமார், பெஜாவர், புத்திகே) பீடாதிபதிகள் அங்குள்ள கிருஷ்ணர் விக்கிரகத்திற்குப் பூஜை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மடத்தின் பீடாதிபதியும் ஆசார்ய மத்வர் ஏற்படுத்திய  " பர்யாய" முறைப்படி  இரண்டு வருடங்கள் பூஜை செய்யலாம். ஒவ்வொரு மடத்தின் இரண்டு வருட காலம் தொடங்கும்போது விறகுகளை  கோயிலுக்கு வெளியே தேர் போல அடுக்கி வைத்து  அந்த விறகுகளை  தினமும் சமையல் செய்ய உபயோகித்து  தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது. இரண்டு வருடம் முடியும்போது விறகு  தீர்ந்து விடும். 

ஆசார்ய மத்வரின்  வாழ்க்கையில் நடந்த  பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய "சுமத்வவிஜயம்" என்ற நூலில் உள்ளன. 


உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் திவ்ய சேவை 











பெரியாழ்வார் திருமொழி

ஐந்தாம் பத்து 

5 -1. முதல் திருமொழி - வாக்குத்  தூய்மை 

தன் தாழ்ச்சி நிலையை அறிவித்தல்

432

வாக்குத் தூய்மை இலாமையினாலே,

      மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னை அல்லால் அறியாது;

      நான் அது அஞ்சுவன், என்வசம் அன்று

மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று

      முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்

      காரணா! கருளக் கொடியானே!    (1)



மாதவனே! என் பேச்சில் பரிசுத்தம் துளியும் இல்லை..

இதன் காரணமாய் நின்னைப் போற்றும் தகுதி

அடியேனுக்குக் கிடையாது!..

ஆனாலும்

அடியேனின் நாக்கானது உன்னைத் தவிர வேறாென்றை பாட அறியாது!..

அந்த நாவினை அடியேனால் அடக்க முடியாதது கண்டு

அச்சம் கொள்கிறேன் நான்..

என்னடா இவன்..

முட்டாள்தனமாய் பேசுகிறான்.. என

நீங்கள் கோபித்தாலும் சரி..

நாக்கு எனது கட்டுப்பாட்டினை மீறுகிறது என்பதே நிஜம்..

உலகக் காரணனே! கருடக் கொடியானே!

செத்த எலியினை கொத்தித் தின்பது காக்கை..

ஆனால் அந்தக் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என

அது அறிவிப்பதாய் இங்குளோர் மகிழ்வார்கள்..

அது எதில் உட்கார்ந்தது?

அது எதனை உண்டது?

இதையெல்லாம் யாரும்

துளியும் நினைக்காமல்..

அதன் வாய்ச்சொல்லை சத்தியமாய் ஏற்பார்கள்..

அதுபோல் அடியேனின் பாமாலையையும்

நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..



ஸ்ரீ  கிருஷ்ணா உன் திருவடிகளே சரண்.. 


அன்புடன்

அனுபிரேம்💞💞💞



No comments:

Post a Comment