10 May 2018

பானகம்..

பானகம்...  கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி,

 பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.












பானகம்


இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம்,

கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி,

அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தும்.

இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது.

மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.


பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார்கள்.







பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம்.

 ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது.

'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள்.

ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று.

அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும்.

 அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும்.

இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும்.

 இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.

எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.

இதன் மகத்துவம் தெரிந்தால் தான், நம் முன்னோர்கள் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்கும் வழக்கத்தை உண்டாக்கினர்.


ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன.

ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் நம்மிடையே பிரபலமாக உள்ளது.





எலுமிச்சை பானகம்



தேவையானவை

எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்

வெல்லம்- 1/3 கப்

தண்ணீர் - 5 டம்ளர்

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை


செய்முறை:

வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்  கொள்ளவும்.

அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

இதனுடன் சிறிது துளசி இலைகளையும் சேர்க்கலாம்..


எளிய சுவையான பானகம் தயார்...




எலுமிச்சைக்கு பதில் புளி சேர்த்தும் செய்யலாம்..



மருத்துவப் பயன்கள்:

பசியின்மை, உடல் சோர்வை போக்கும்.

தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.

(தகவல்கள் இணையத்திலிருந்து)



அன்புடன்
அனுபிரேம்



10 comments:

  1. மிக அருமையான பதிவு. பானகம் என் போன்றோரால் சாப்பிட முடியுமா தெரியவில்லை.
    ஆனால் எனக்கு மிகப் பிடித்த பானம். நன்றி மா.

    ReplyDelete
  2. அனு மிகவும் பிடித்த பானம்...உங்க வீட்டுக்கு வந்து குடிச்சாச்சு...சூப்பரா இருக்கு அனு!!

    இங்கயும் செய்யறோம்..வெயிலாச்சே...அதனாலா வாரத்துல ஒரு நாள்.

    கீதா...

    ReplyDelete
  3. சிறுவயதில் கோயில் திருவிழாக்களில் பானகம் அருந்தி மகிழ்ந்த நினைவு வருகிறது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. அண்மையில்கூட கும்பகோணத்திற்கு கோயில் விழாவிற்குச் சென்றபோது பானகம் குடித்தேன்.

    ReplyDelete
  5. அருமை..

    நமது பாரம்பர்யம்..
    வெயிலுக்கும் உடல் நலத்துக்கும் ஏற்றது!..

    ReplyDelete
  6. முதன் முதலில் இதை நாகப்பட்டினம் திருவிழாவில் ருசித்தேன். பிடித்த பான(க)ம்.

    ReplyDelete
  7. சளி பிடிக்காம இருக்க துளி உப்பை சேர்ப்பது அம்மாவின் வழக்கம்

    ReplyDelete
  8. எங்க வீட்டில் இப்பலாம் பெப்சி கோக் இல்ல.. பானகமும், நன்னாரி சர்பத்தும், எலுமிச்சை ஜூசும்தான் இருக்கு.

    ReplyDelete
  9. திருவிழாவுக்காக கோவிலுக்கு போனால குடிக்க தவறமாட்டேன். அருமையான பானம்.

    ReplyDelete