10 October 2020

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர்


வைஷ்ணவ திவ்ய தேசங்களான நூற்றி எட்டில் இரண்டாவது திவ்ய தேசம் உறையூர். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் உறையூர்.  இங்கு அர்ச்சாவதாரமாக பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் அழகிய மணவாளன் ,தாயார் கமலவல்லி நாச்சியார்.


 


மூலவர்: அழகிய மணவாளர்

தாயார்:கமலவல்லி நாச்சியார் 

தீர்த்தம்: கமல புஷ்காரணி

ஆகமம்: பாஞ்சராத்ரம்

பழமை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது

புராண பெயர்: திருகோழியூர்

இன்றைய பெயர்: உறையூர்


ஒரு முறை சோழ நாட்டு அரண்மனை யானை ஒன்று இங்கு வந்த போது அங்கிருந்த கோழி ஒன்று யானையை தாக்கி ஓட செய்ததால் உறையூருக்கு புராண பெயர் திருக்கோழி என்று அழைக்கப்பட்டது.






தல வரலாறு:

ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. 

ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். 

தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். 

மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி" (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். 

அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். 

நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். 

அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். 

பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லி தாயாருக்கு கோயில் எழுப்பினான்.





பிரகாரம் 

நந்தவனம் 


தல பெருமை:


மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.
 ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர்.

 திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. 

இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். 

இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 
மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. 









பரமபதவாசல் கடக்கும் தாயார்:
 பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. 

பங்குனி திருவிழா: 

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். 

கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.

எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. 

அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். 

அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். 

கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.





திருக்குளம் 




 தல சிறப்பு:

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். தினமும் மிக அழகான அலங்காரத்தில் தரிசனம் தருகிறார் .

பிரகாரத்தில் விஷ்வக்சேனர் , நம்மாழ்வார்,  ராமானுஜருக்கு தனி   தனி சன்னதிகள் உள்ளன.  

மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.





மிக அமைதியான , அற்புத திருக்கோவில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் திவ்ய தரிசனம் தருகிறார்...காண காண மனதிற்கு நிறைவு தரும் மிக சிறப்பான திருக்கோவில்.












பெரிய திருமொழி - ஒன்பதாம் பத்து

இரண்டாம் திருமொழி – பொன்னிவர்மேனி - 5


1762

கோழியும்கூடலும்கோயில்கொண்ட 

கோவலரேஒப்பர், குன்றமன்ன *

பாழியந்தோளும் ஓர்நான்குடையர் 

பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *

வாழியரோஇவர்வண்ணம்எண்ணில் 

மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *

ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி 

அச்சோஒருவரழகியவா! 


  பெருமாள் திருவடிகளே சரணம்...

தாயார் திருவடிகளே சரணம்...

அன்புடன்

அனுபிரேம்


5 comments:

  1. புரட்டாசி சனிக்கிழமையதுவுமாக தெய்வீக தரிசனம்...

    ஹரி ஓம் நமோ நாராயணாய..

    ReplyDelete
  2. புகைப்படங்களும் கோவில் பற்றிய அனைத்து விபரங்களும் மிகவும் அழகு!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசனம் சிறப்பாக கண்டு மகிழ்ச்சியடைந்தேன் உறையூர் பெருமாள் கோவிலும், படங்களும், தாங்கள் கோவிலைப்பற்றி அளித்த விபரங்களும், மிகவும் அழகாக இருந்தன. தல வரலாறு, தல பெருமை அறிந்து கொண்டேன். இந்தக் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. மங்களாசாசனம் பெற்ற பல தலங்கள் பலவற்றிக்குச் சென்றபோதிலும் இங்கு சென்றதில்லை. அங்கு செல்லவும் தாயாரின் அருளைப் பெறவும் ஆவலோடு உள்ளேன்.

    ReplyDelete
  5. மிகவும் அழகான கோவில் - அமைதியானதும் கூட. சில முறை சென்றிருக்கிறேன். உங்கள் பதிவு வழி இன்று இன்னுமொருமுறை தரிசனம். நன்றி.

    ReplyDelete