29 July 2022

ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை

அருள்மிகு முற்றிலா முலையம்மை சமேத கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை.

இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மீ  தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மீ  தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மீ  தொலைவிலும் இருக்கிறது.



இறைவர் திருப்பெயர் : கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள்

தல மரம் : - கடம்ப மரம்

தீர்த்தம் : -  காவிரி, பிரம்மதீர்த்தம்

வழிபட்டோர் : சப்தகன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன்  , பிரம்மா, மகாவிஷ்ணு

தேவாரப் பாடல்கள் :-திருநாவுக்கரசர்





தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 2வது தலம்.

கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. 


 “”காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (ரத்தினகிரி), மாலை ஈங்கோய்நாதர் (ஈங்கோய்மலை)” என்ற வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். 

அதன்படி, இவரை காலை வேளையில் வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு “ தக்ஷிணகாசி’ என்றொரு பெயரும் உண்டு.


பொன்னியின் குளிர்ந்த அலைகள் கரையை மோதி நீர்த்திவிலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. 

அதனால் இந்த இடத்திற்கு குளிர்தண்அலை என்றும், குழித்த சோலைகளை உடையதால் குழித்தண்டலை என்றும், கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை, கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.








தல வரலாறு:

தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். 

அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான்.

அங்கு காத்யாவன  மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரன்  ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். 

இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. 

அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். 

அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர்.

சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். 

அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். 

சிவபெருமானும் அசுரனை அழித்தார். 

இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.

ராகுகால வேளையில் இவர்களுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

 கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது.

சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். 

எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். 

இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம்.







அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர். அம்பாள் முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள். இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். 

இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். 


தலபெருமை:

கருவறையில் சப்தகன்னிகள்:

கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். 

சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை அழித்தால் தோஷம் பிடிக்குமே! என அஞ்சி, அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. 

எனவே, அசுரனை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர்.

 சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, அசுரனையும் அழித்தார்.

 இவர் இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். 

இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர்.

 எனவே, துர்க்கைக்கு சன்னதி இல்லை. 

பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம்.


முருகன் : 

சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார்.

இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். 

இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். 

இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.





கோவில் அமைப்பு:

வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால்  ஒரு நீண்ட மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். 

இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. 

சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. 

இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன.

 கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். 














இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். கோஷ்டத்தின் பின்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருக்கிறார். வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர்.

பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.





எட்டாம் திருமுறை


மாணிக்கவாசக சுவாமிகள்  அருளிய  திருவாசகம்

1. சிவபுராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை)

திருப்பெருந்துறையில் அருளியது

(கலிவெண்பா)


திருச்சிற்றம்பலம்


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி 15


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான். 20



திருச்சிற்றம்பலம்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!


அன்புடன்,
அனுபிரேம் 💜💜💜

No comments:

Post a Comment