12 January 2024

27.கூடாரை வெல்லும்

27.கூடாரை வெல்லும்...

தன்னை அடிபணியாதாரையும்  வெல்லும் கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் அடையும் பரிசாவது என்னவெனில், பலவகை ஆபரணங்களை அணிவோம். பீதாம்பரத்தால் அலங்கரித்துக் கொள்வோம். பால் சோறு நெய்யிட்டு உன்னுடன் கூடி உண்டு மனம் குளிர்வோம்.




இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.



கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்

     பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

     சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே

பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

     ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

     கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்


தன்னை அடிபணியாதவரை வெல்லுகின்ற கல்யாண குணங்களையுடைய கோவிந்தா!

உன்னைப் பாடி, பறையைப் பெற்று, நாங்கள் மேலும் அடையும் பரிசாவது,

 நாடே புகழும்படியாக சூடகங்கள், தோள்வளைகள், தோடுகள், கர்ண புஷ்பங்கள்,பாடகங்கள் போன்ற பலவிதமான ஆபரணங்களையும் நீயும் நப்பின்னைப் பிராட்டியும் எங்களுக்கு அணிவிக்க நாங்கள் நன்றாக அணிவோம். 

உங்களால் அணிவிக்கப்பட்ட ஆடைகளை உடுத்துக்கொள்வோம். 

அதற்குப் பிறகு அக்கார அடிசிலை மூடும்படி நெய்சேர்த்து, முழங்கை வழியாக அந்த நெய் வழியும்படி எல்லோரும் கூடி இருந்து உண்டு குளிரவேண்டும்.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்



அன்புடன்

அனுபிரேம்💗💗💗

1 comment:

  1. பால் சோறு என்பதற்கு அக்கார அடிசில் என்ற பொருள் சரியாக வருமா?(இதுதான் வழக்கம் என்றபோதும்)

    ReplyDelete