29 October 2017

பூதத்தாழ்வார்



 பூதத்தாழ்வாரின் அவதார தினம்( 29.1௦.2017) இன்று..

ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...


பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது.

அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.


பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், (பூதம் + ஆழ்வார்)  பூதத்தாழ்வார்.






  பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே

எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே

பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே  !




முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் ... பூதத்தாழ்வார்



திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதாயுதத்தின்  அம்சமாக


சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமி  திதியில்,, புதன் கிழமை அவிட்ட நட்சத்திர நாளில்


கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே,


மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் (குருக்கத்தி மலர்)  ஒன்றில்  தோன்றினார்.



பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது.


 திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார். ...











 இவர் அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார்.


எம்பெருமானையே அல்லும், பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார்.


திருமகள் இவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள்.


செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார்.


எப்போதும் பரமன் புகழ் பாடும் இவரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.


இவரின் 100 பாடல்களின் தொகுப்பும் இரண்டாம் திருவந்தாதி என அழைக்கப் படுகிறது...


இது நூறு வெண்பாக்களால் ஆனது.





இவர் 'நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து, உலகத்தாரையும் உணரச் செய்தார்.


உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிழ்ந்தார்.


 இவர் உலகப்பற்றை அறவே நீத்தவர்.


கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு ..


தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது...


சுற்றிருக்கும் திவ்ய தேசங்களுக்கு  தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார்...


உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் பிரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார்...


திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர்.


அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு,

 இரவு தங்குவதற்கு இடம் தேடினர்.


அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே ..

அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்....



தரிசனம் தொடரும்...


2182

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.


2280

இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்

முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல

சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்

மாவடிவில் மண்கொண்டான் மால்.


2281

மாலே. நெடியானே.கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா.வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு.






பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்...!


பூதத்தாழ்வார் அவதரித்த கடல்மல்லை  - ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோவில்....மாமல்லபுரம் 
  


பொய்கையாழ்வர்  தரிசனம்...




அன்புடன்

அனுபிரேம்

7 comments:


  1. பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!..

    பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே..
    பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே!..

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  3. பூதத்தாழ்வார் பற்றிய சில செய்திகளை அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் நன்று.

    ReplyDelete
  5. படங்கள் அழகு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. தகவல்களும் படங்களும் அருமை.

    ReplyDelete
  7. தகவல்கள் அறிந்தோம் சகோ/அனு

    ReplyDelete