05 November 2019

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சித்திரம் (  5.11.2௦19) இன்று..

ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...








பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே

எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே

பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே  !







பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.


வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.

எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.






ஸ்ரீ  பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

அறிந்துஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம் 
செறிந்தமனத்தராய்ச்செவ்வே * - அறிந்துஅவன்தன் 
பேரோதியேத்தும் பெருந்தவத்தோர்காண்பரே * 
காரோதவண்ணன்கழல். 

6 2187


கழலெடுத்துவாய்மடித்துக் கண்சுழன்று * மாற்றார் 
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச * தழலெடுத்த 
போராழியேந்தினான் பொன்மலர்ச்சேவடியை *
ஓராழிநெஞ்சே! உகந்து.

7 2188


உகந்துஉன்னைவாங்கி ஒளிநிறங்கொள்கொங்கை *
அகங்குளிரஉண்ணென்றாளாவி *-உகந்து 
முலையுண்பாய்போலே முனிந்துண்டாய் * நீயும் 
அலைபண்பால் ஆனமையாலன்று. 

8 2189


அன்றதுகண்டஞ்சாத ஆய்ச்சிஉனக்கிரங்கி * 
நின்றுமுலைதந்த இந்நீர்மைக்கு * அன்று 
வரன்முறையால்நீயளந்த மாகடல்சூழ்ஞாலம் * 
பெருமுறையாலெய்துமோபேர்த்து?

9 2190


பேர்த்தனை மாசகடம்பிள்ளையாய் * மண்ணிரந்து 
காத்தனை பல்லுயிரும்காவலனே! * ஏத்திய 
நாவுடையேன்பூவுடையேன் நின்னுள்ளிநின்றமையால் * 
காஅடியேன்பட்டகடை.

10 2191








கடைநின்று அமரர் கழல்தொழுது * நாளும் 
இடைநின்ற இன்பத்தராவர் * -புடைநின்ற 
நீரோதமேனி நெடுமாலே! * நின்னடியை 
யாரோதவல்லாரவர்?

11 2192


அவரிவரென்றில்லை அரவணையான்பாதம் * 
எவர்வணங்கி யேத்தாதாரெண்ணில் * -பவரும் 
செழுங்கதிரோன்ஒண்மலரோன் கண்ணுதலோனன்றே? * 
தொழுந்தகையார் நாளும்தொடர்ந்து. 

12 2193



தொடரெடுத்தமால்யானை சூழ்கயம்புக்கஞ்சிப் * 
படரெடுத்தபைங்கமலங்கொண்டு * -அன்றுஇடரடுக்க 
ஆழியான் பாதம்பணிந்தன்றே? * வானவர்கோன் 
பாழிதான் எய்திற்றுப்பண்டு. 

13 2194


பண்டுஇப்பெரும்பதியையாக்கி * பழிபாவம் 
கொண்டுஇங்குவாழ்வாரைக்கூறாதே * - எண்திசையும் 
பேர்த்தகரம்நான்குடையான் பேரோதிப்பேதைகாள்! * 
தீர்த்தகரராமின்திரிந்து.

14 2195


திரிந்ததுவெஞ்சமத்துத் தேர்கடவி * அன்று 
பிரிந்தது சீதையை மான்பின்போய் * -புரிந்ததுவும் 
கண்பள்ளிகொள்ள, அழகியதே! * நாகத்தின் 
தண்பள்ளிகொள்வான்தனக்கு. 

15 2196








முந்தைய பதிவுகள் ..

பூதத்தாழ்வார் வைபவம்  

 பூதத்தாழ்வார்


பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்

அனுபிரேம்...

3 comments:

  1. சிறப்பான பகிர்வு.

    ஒவ்வொரு ஆழ்வாரின் திருநக்ஷத்திரம் அன்றும் இப்படி பதிவிடுவது சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. பூதத்தாழ்வார் அருளிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தை பாடி மகிழ்ந்தேன்.படங்களும் அருமை. எம்பெருமானை தரிசித்துக் கொண்டேன் ஆழ்வார்களின் பக்தியைப் பற்றிய சிறப்பான விமர்சனம் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஆழ்வார்கள் பிறந்த நட்சத்திரங்களில் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete