19 September 2020

திருக்கரம்பனூர், அருள்மிகு உத்தமர் திருக்கோயில்- திருச்சி

திருச்சியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் சாலையில் டோல் கேட் அருகில் உள்ளது இத்திருக்கோவில் .பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.






  மூலவர் : புருஷோத்தமன்

  உற்சவர் : புருஷோதமன்

  அம்மன்/தாயார் : பூர்ணவல்லி,  அம்பாள்: சவுந்தர்ய பார்வதி

  தல விருட்சம்  : கதலி (வாழை)மரம்

  தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்

  ஆகமம்/பூஜை : வைகானஸம்

  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்



சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், 

மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. 






தலபெருமை-

பிரம்மன் சன்னதி: 

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். 

பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். 

இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். 

அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, "நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். 

பிரம்மாவும் இங்கேயே தங்கினார். 

பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.

பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறார். 

இவர்  கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. 

பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. 

குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.














மும்மூர்த்திகள் தலம்: 

பெருமாளின் பெயர் புருஷோத்தமன். 

ஆதிசேஷன் மீது சயனித்தபடி கிழக்கு நோக்கிய முகமண்டலத்துடன் கிடந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார் மூலவர். அவர் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா உதித்து மேலே நிற்கிறார்.

 உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.  

பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருள் புரிகிறார். 

இவர்  என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவர். 

அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. 

பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். 

இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். 

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். 







கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.





சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்தகுரு தலம்' எனப்படுகிறது.







தல வரலாறு:

     

  சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். 


இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. 


அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. 

பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

மண்டை ஓட்டில் பிட்சை எடுத்து  அது நிரம்பினால்தான் அது கையை விட்டு நீங்கும் என்ற நிலையில் சிவபெருமான் பிச்சை எடுத்ததால் அவர் பிட்சாண்டார் (பிட்சாடனர்) என்று பெயர் பெற்றார்.

 அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.













கொடிமரம் 





பெருமாள் சந்நிதிக்குப் பின்புறம் பிட்சாடனர்  சந்நிதி.  லிங்க ரூபத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். அருகில் சௌந்தர்ய பார்வதி, தக்ஷிணாமூர்த்தி, விநாயகர்,முருகன், துர்க்கை, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. 


தசரத லிங்கம்,நடராஜர், சண்டீஸ்வரர் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.

பிரகாரத்தில் லக்ஷ்மணர், சீதை ஹநுமானுடன் கூடிய ராமர், பாமா ருக்மிணி சமேத வேணுகோபாலன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

பிரகாரத்தின் வடக்குப் புறம் விஷ்ணுகுரு வரதராஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார்,குலசேகர ஆழ்வார், சேனை முதலியார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

போன வருடம் இங்கு சென்ற பொழுது எடுத்த காட்சிகள் ..அப்பொழுது தான் கும்பாபிஷேகம் நடந்து இருந்ததால் கோபுரங்கள் எல்லாம் மிக பொலிவுடன் மின்னின .. 

கோவிலும் சுத்தமாக மனதிற்கு இதம் தரும் வகையில் அற்புதமாக இருந்தது ...







இணையத்திலிருந்து ....













பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து 
ஆறாம் திருமொழி – கைம்மானம் - 2

1399



பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா 
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு 
காரார்த்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் * 
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)


ஓம் நமோ நாராயணாய நம

அன்புடன் 
அனுபிரேம் 

4 comments:

  1. புரட்டாசி சனிக்கிழமையன்று தெய்வீக தரிசனம்...
    அழகான படங்களும் விவரமான செய்திகளும் அருமை..

    ஹரி ஓம் நமோ நாராயணாய..

    ReplyDelete
  2. இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.

    ReplyDelete
  3. அழகான கோவில். அமைதியான சூழலில் இருக்கும் கோவில். சில முறை சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  4. கோவிலும் அழகு. நீங்கள் எடுத்த படங்களும் அழகு.
    முகநூல் படங்களும் அழகு.
    இணையத்தில் எடுத்த படங்களும் அழகு.

    ReplyDelete