21 February 2021

உலக தாய்மொழி தினம்...

வாழ்க வளமுடன்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் சிற்றிலக்கியங்கள்  பற்றிய சில தகவல்களை வாசிக்கலாம்...





பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டே பொதுவாக இலக்கியங்கள் வகைமைப் படுத்தப்பட்டன.

     வெண்பா இலக்கியங்கள்,விருத்தப்பா இலக்கியங்கள் என்று யாப்பு வகை கொண்டும் இலக்கியங்கள் வகைப்படுத்தப்பட்டன.

     முற்காலத்தில் பெரும்காப்பியம், சிறுகாப்பியம் எனும் இலக்கிய வகைமைகள் இருந்தனவேயன்றி, கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கியம் என்ற சொல்லாட்சி தமிழில் இல்லை.

     முற்கால     உரையாசிரியர்களான  இளம்பூரணர்,  நச்சினார்க்கினியர் போன்றோர் பிள்ளைத் தமிழ், கலம்பகம், தூது போன்ற இலக்கிய வடிவங்களைத்  தம் உரைகளில்  குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அவற்றைச் சிற்றிலக்கியம் அல்லது பிரபந்தம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதே காலத்தில் தண்டியலங்காரம் - பெரும்காப்பியம், காப்பியம்
என வகைமைப்பாடு செய்திருந்தது. ஆக,சிற்றிலக்கிய வகைப்பாடு பிற்காலத்தில் தோன்றியது என உணரலாம்.

     ஒருவரோ பலரோ பாடிய பல பாடல்களைத் தொகுத்து ஒரே நூலாகக் கட்டப்பட்ட இலக்கியங்களைப் பேரிலக்கியம் என்று வகைமைப்படுத்தினர்.

     அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பெற்ற தொடர்நிலைச் செய்யுள்களாலான நூல்களைக் கொண்டு பெருங்காப்பியம் என்ற வகைப்பாட்டினை உருவாக்கினர்.

    குறைந்த பாடல் எண்ணிக்கையோடு தனித்தனி இலக்கிய வகைமைகளாய் இருந்த தூது, உலா, கலம்பகம் முதலானவற்றைப் பேரிலக்கியங்களிலிருந்து வேறுபடுத்த, பிரபந்தங்கள் என அழைக்கத் தொடங்கினர்.


சிற்றிலக்கியங்கள் -

சிற்றிலக்கியங்கள் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது ஆகும் .

அகப்பொருள் மற்றும் புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையை பற்றியதாக  அமையும்.(கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும்  உண்டு)

பாடப்பெறும் மன்னன் அல்லது கடவுள் அல்லது வள்ளல் ஆகியோரின்  வாழ்வின் ஒரு சிறு கூடு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும்.

 எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் - தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியங்கள் ஆகும்.

இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அமைந்து.

நூல்களின் அமைப்பு

அளவில் சிறிதாகச் சிற்றிலக்கியங்கள்ள மைகின்றன. பல துறையை சார்ந்த பெரிய நூல்கள்   போல அமையாமல், ஒரு சில துறைகளைப் பற்றிய ஆழமான பார்வை  உடையவாக அவை அமைகின்றன.

அளவு சுருக்கமானதாக அமைவதால், குறைந்த காலத்தில் படிக்கும் எளிமையான நூலாக   அமைகின்றன.

வட்டாரச் சார்புடையனைவாக இவைகள்  திகழ்கின்றன. 

தெய்வத்தை, மன்னனை, வள்ளலைப் புகழ்வதற்காக எழுதப்பட்டன.

இவற்றுள் பல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த கருத்துக்களுடன் அமைகின்றன. பக்தி சார்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமாய் உள்ளன. 

சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே கருதப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்ற சொல் "கட்டப்பட்டது"என்று பொருள்படும்.


சிற்றிலக்கியங்கள் வகைகள் -

சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என  கூறப்படுகிறது. 

இந்த 96 வகைகளையும் தாண்டி பல வகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் 96 என எண்ணிக்கை கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும், 417 என அதிகபட்சமாக வும் கூறப்படுகிறது.

     13 பாட்டியல் நூல்களுள் பிரபந்த மரபியல் (96), முத்துவீரியம் (96),தொன்னூல் விளக்கம் (93),பிரபந்த தீபிகை (98), பிரபந்த தீபம் (95), பிரபந்தத் திரட்டு (119) எனும் ஆறு  நூல்கள் தொண்ணூற்றுக்கு மேலாக இலக்கிய வகைகளை முன்வைத்த நூல்கள்.


     தமிழறிஞர் ச.வே.சு. 201 இலக்கிய வகைகளை முன்வைக்கிறார். அறிஞர் ந.வீ.ஜெயராமன் தமது சிற்றிலக்கியத் திறனாய்வு எனும் நூலில் 331 சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

     பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படும் சிற்றிலக்கியங்கள் 96 என நிலைபெற்று விட்டது.


இலக்கிய வகை - பொருள்


1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.

2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.

3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.

4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.

5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.

6. அலங்கார பஞ்சகம் - -

7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.

8. இணைமணி மாலை - -

9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.

10. இரட்டை மணிமாலை - -

11. இருபா இருபஃது - -

12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.

13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.

14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.

15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.

16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.

17. ஊசல் - வாழ்த்துதல்.

18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.

19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.

20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.

21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.

22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.

23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.

24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.

25. ஒலியல் அந்தாதி - -

26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.

27. கடைநிலை -

28. கண்படை நிலை -

29. கலம்பகம் - 18 உறுப்புகள்.

30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.

31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.

32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.

33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.

34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.

35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.

36. கைக்கிளை - ஒரு தலைக்காமம்.

37. கையறுநிலை - உற்றார் இறந்த பொழுது வருந்துவது.

38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.

39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.

40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து.

41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.

42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.

43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள்

44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள்

45. தண்டக மாலை --

46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.

47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.

48. தானை மாலை - கொடிப்படை.

49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது.

50. துயிலெடைநிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.

51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.

52. தொகைநிலைச் செய்யுள் - -

53. நயனப்பத்து - கண்.

54. நவமணி மாலை - -

55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல்.

56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.

57. நான்மணி மாலை --

58. நூற்றந்தாதி - -

59. நொச்சிமாலை - மதில் காத்தல்.

60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.

61. பதிற்றந்தாதி - -

62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.

63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.

64. பல்சந்த மாலை --

65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.

66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள்.

67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.

68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள்.

69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு.

70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.

71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க.

72. பெயர் நேரிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.

73. பெயர் இன்னிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.

74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.

75. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.

76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து.

77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.

78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண்.

79. மணிமாலை - -

80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.

81. மும்மணிக்கோவை --

82. மும்மணிமாலை - -

83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.

84. வசந்த மாலை - தென்றல் வருணனை.

85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு.

86. வருக்கக் கோவை --

87. வருக்க மாலை --

88. வளமடல் - மடலேறுதல்.

89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல்.

90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம்.

91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.

92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.

93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது.

94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.

95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல்.

96. வேனில் மாலை - இளவேனில், முது வேனில் வருணனை.




வாழ்க தமிழ்... 
வளர்க தமிழ்.....





முந்தைய பதிவுகள் .. 






அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. தாய் மொழி நாள் வாழ்த்துகள்.

    தகவல்கள் நன்று.

    ReplyDelete