10 February 2020

திருமழிசைப்பிரான் வைபவம்

இன்று   திருமழிசையாழ்வார்    அவதார திருநட்சத்திரம் .....

தையில் மகம்........








திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!

இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!

எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!

நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!

நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!





திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்

திருமழிசையாழ்வார் வைபவம்  இங்கே...

திருமழிசையாழ்வார் வைபவம் -- சொன்னவண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி)






திருமழிசை ஆழ்வார் வைபவம் - 

திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் பேரருளோடு ஒரு நாள் திருவேங்கட கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள திருவல்லிக்கேணி என்னும் திருநகரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து தினமும் அல்லிக்குளத்தில் நீராடி மூலமூர்த்தியான பார்த்தசாரதியையும் சேவித்து சிந்தை மகிழ்ந்தார்.

 அதன் பிறகு அங்கேயே அவர் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.


ஒரு நாள் ருஷப வாகனத்தில் பார்வதியும் சிவனும் ஆகாய மார்கமாக வந்து கொண்டு இருந்தார்கள்.

பார்வதி இவருடைய தேஜசைப் கண்டு வியப்புற்று, "இவர் யார்" என வினவ, சிவபிரான்,

"இம்மஹானுபாவர் நம் அடிமையாய் இருந்து இப்போது நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருப்பவர்" என்று சொன்னவுடன் உமாதேவி, "அத்தகைய பெரியவருக்கு நாமும் காட்சி தந்து ஏதாவது வரம் அளித்து விட்டு செல்வோம்" என்று கூற,

அவள் விருப்பப்படி திருமழிசைப்பிரான் முன் தோன்றினார்.





ஆனால் திருமழிசை ஆழ்வார் அவரை பார்க்காதது போல் ஒரு கந்தைத் துணியைத் தைத்து கொண்டிருந்தார். இருப்பினும் தன் வரவு வீணாகக் கூடாது என்றெண்ணிய சிவபிரான், "நீ விரும்பிய வரத்தை பெற்று வாழ்வாய்" என்று நிர்ப்பந்தமாக கேட்க,

அது கேட்ட ஆழ்வார், "மோக்ஷலோகமான பரமபதத்தை அருளவல்லீராகில் அருள்வீர்" என்றார்.

அதற்கு மஹாதேவர், "அது நம்மால் இயலாது, அதை தரவல்லவன் முகுந்தன் ஒருவனே. அது தவிர வேறு வரம் கேள்" என்று கூற,

திருமழிசை ஆழ்வார் புன்முறுவல் செய்து,

"அந்த முக்தியை பெறுவதற்கு ஸாதனங்களை அனுஷ்டிப்பதற்கு உறுப்பாக நீண்ட ஆயுளையேனும் எனக்கு தரவேண்டும்"  என்று கேட்க அதற்கு கைலாசநாதர்,

 " அது கர்மானுக் குணமாக ஏற்கனவே வரம்புக் கட்டப்பட்டுவிட்டது. அதை வளரச் செய்ய என்னால் ஆகாது. வேறு வரம் வேண்டுவாய்" என்று வினவ திருமழிசைபிரான் இகழ்ச்சி தோன்ற நகைத்தார்.

அது கண்ட சிவபிரான் சினம்கொண்டு, "செருக்குடைய உன்னை இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்" என்று கூறி நெற்றிக்கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஊழிக்கால நெருப்புப் போலே அக்னி கிளர்ந்து எழுந்தது.

அது கண்ட திருமழிசை பிரான், "இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்" என்று சொல்லித் தமது வலத்திருவடியில் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்து விட,

அதிலிருந்து ஒரு பெரும் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பலமடங்கு பெரியதாகி,

நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பாய் அடக்கி,

முக்கண்ணனையும் சுடத் தொடங்கிற்று.

அது கண்ட சிவபிரான் அதிலிருந்து தப்பிக்க தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் காலத்திற்போலே மழை பொழியும் படி நியமித்தார்.

அவ்வண்ணமே அம்மேகங்களும் மழை பொழிந்ததனால் பெருவெள்ளம் ஏற்படவும், பரம பாகவதரான திருமழிசை ஆழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை த்யானித்துக் கொண்டு வீற்றிருந்தார். அதை கண்டு சிவபிரான் ஆழ்வாருக்கு, "பக்திஸாரர்" என்று நாமம் சூட்டி அவரை மிகக் கொண்டாடி கைலாயம் சேர்ந்தார்.


அதற்குப்பின் ஆழ்வார் முன்போலவே யோகத்தில் எழுந்திருக்கையில், அஷ்டமாசித்தி பெற்ற சுத்திஹாரன் என்னும் சித்தன் புலி மீது அமர்ந்து விண்வழியே வந்து கொண்டு இருந்தான்.

நிஷ்டையிலிருந்த திருமழிசை ஆழ்வாருக்கு மேற்கு புறமாக அந்த சித்தன் சென்ற போது புலியின் வேகம் தடைப்பட்டது. ஒன்றும் புரியாது திகைத்துப்போய் கீழே பார்த்தான் அந்த சித்தன்.

அல்லிக்குளத்தருகே பெரும் ஜோதி ஒன்று தெரிய பூமிக்கு இறங்கினான் சித்தன். ஞானத்தவமிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் நிஷ்டாகினியின் ஒளியே அந்த ஜோதி என்பதையும் அதுவே தனது புலியின் ஓட்டத்தை தடுத்தது என்பதையும் புரிந்துக் கொண்டான்.

 கந்தல் ஆடையுடன் தவத்திலிருந்த ஆழ்வாரிடம் ஒரு பட்டுத்துணியை வரவழைத்து, "இதோ இந்த பட்டாடையை உடுத்திக் கொண்டு உம் கந்தலாடையை தூக்கி எறியும்" என்றான் அவன்.

அவனுடைய சித்த வேலைகளை புரிந்து கொண்ட ஆழ்வார் தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே மாணிக்கமயமானதொரு கவசத்தை உண்டாக்கி அவனிடம் கட்டினார்.

சூரியன் போல ஒளிவீசும் அதைக்கண்டு வெட்கம் அடைந்த புலிவாஹனன்,

தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து "இதனை ஜபமாலையாக தரித்துக் கொள்ளும்" என்று கொடுக்க முற்பட,

மழிசைப்பிரான் தம் கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணிமாலைகளையும் எடுத்துக் கட்டினார்.

அவை மிகச் சிறந்த நவரத்தின மாலைகளாக விளங்கக் கண்ட புலிவாஹனன்  வெட்கப்பட்டு "எல்லா சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உம்மைக்காட்டிலும் சிறப்புடைய ஸித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை" என்று சொல்லி துதித்து நமஸ்காரம் செய்து வேறு வழியாக சென்றுவிட்டான்.





 நின்றியங்கும்ஒன்றலா உருக்கள் தோறும்ஆவியாய் * 
ஒன்றிஉள்கலந்துநின்ற நின்னதன்மைஇன்னதென்று * 
என்றும்யார்க்கும்எண்ணிறந்த ஆதியாய்! நின்னுந்திவாய் * 
அன்றுநான்முகற்பயந்த ஆதிதேவனல்லையே?

5 756

நாகமேந்துமேருவெற்பை நாகமேந்துமண்ணினை * 
நாகமேந்துமாகமாகம் மாகமேந்துவார்புனல் * 
மாகமேந்துமங்குல்தீ ஓர் வாயுவைந்தமைந்துகாத்து * 
ஏகமேந்திநின்றநீர்மை நின்கணேஇயன்றதே.

6 757

ஒன்றிரண்டுமூர்த்தியாய் உறக்கமோடுஉணர்ச்சியாய் * 
ஒன்றிரண்டுகாலமாகி வேலைஞாலமாயினாய் * 
ஒன்றிரண்டுதீயுமாகி ஆயனாயமாயனே! * 
ஒன்றிரண்டுகண்ணினானும் உன்னைஏத்தவல்லனே? 

7 758


ஆதியானவானவர்க்கும் அண்டமாயஅப்புறத்து * 
ஆதியானவானவர்க்கும் ஆதியானஆதிநீ * 
ஆதியானவானவாணர் அந்தகாலம் நீஉரைத்தி * 
ஆதியானகாலம்நின்னை யாவர்காணவல்லரே? 

8 759


தாதுலாவுகொன்றைமாலை துன்னுசெஞ்சடைச்சிவன் * 
நீதியால்வணங்குபாத நின்மலா! நிலாயசீர் * 
வேதவாணர்கீதவேள்வி நீதியானகேள்வியார் * 
நீதியால்வணங்குகின்றநீர்மை நின்கண்நின்றதே.

9 760


தன்னுளேதிரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல் * 
தன்னுளேதிரைத்தெழுந்து அடங்குகின்றதன்மைபோல் * 
நின்னுளேபிறந்திறந்து நிற்பவும்திரிபவும் * 
நின்னுளேயடங்குகின்ற நீர்மைநின்கண்நின்றதே.

10 761






ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம்...



8 comments:

  1. மிக எளிமை அருமை. அவர் இன்னும் ஜீவ சமாதியில் இருப்ப்து போல
    ஒரு செய்தி வந்தது. உண்மையா அனு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லிம்மா. கும்பகோணம் சாத்தாரப்பன் தெருவில் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. நான் சில முறை தரிசித்திருக்கிறேன். அதற்கு அருகில்தான் கும்பகோணத்தின் ஆதி ஆலயமான வராஹர் கோவிலும் இருக்கிறது.

      Delete
  2. ரொம்ப நல்லா வந்திருக்கு இடுகை. பொதுவா தெரியாத இரு சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கீங்க.

    திருச்சந்த விருத்தம் என் மனதுக்கு மிகவும் இனிமையானது.

    ReplyDelete


  3. ஆமா மா அவரின் திருவரசு கும்பகோணம் அருகில் உள்ளது...அவரின் ஜீவ சமாதி என்றும் கூறுவர்..

    தங்களின் வருகைக்கு நன்றி மா

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  5. படங்களும் வரலாறும் அருமை.

    ஓம் நமோ நாராயணாய நம!!
    திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  6. அனு ப்ரேம் அவர்களே, காலம் தாழ்ந்து உங்கள் திருமழிசையாழ்வார் கட்டுரையை படித்து உரையாடுவதற்கு மன்னிக்கவும். வேலை அழுத்தால் முடியவில்லை. ஆனால், better late than never. மிக அருமையான கட்டுரை. தெள்ளத் தெளிவாய் எழுதியுள்ளீர்கள். யாவருக்கும் புரியும் வகையில் அழகாக சித்தரித்திருக்கின்றீர்கள். நன்றி. நானும் என் ப்லாகில் (http://manakottai.blogspot.com) நம்மாழ்வார் சேர்க்கை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். சென்னையில் லக்ஷ்மீபுரத்தில் ஒரு கோவிலில் மிக நேர்த்தியாக வடித்து காண்பித்தார்கள். நான் அதை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளேன். படித்து கருத்து கூறுங்கள்.

    ReplyDelete