வையத்து வாழ்வீர்காள்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..
ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நம்முடைய பூவுலகம் தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில் தான் இறைவன் எண்ணற்ற திவ்விய தேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார்.
புனிதமான நதிகள் யாவும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றன.
அது மட்டுமல்ல, எண்ணற்ற மகான்கள் அவதரித்து இந்த மண்ணுக்கு மகிமை சேர்த்திருக்கின்றனர்.
இந்த புண்ணிய பூமியில்தான் பகவான் நாராயணன் ஶ்ரீகிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் எண்ணற்ற லீலைகளைப் புரிந்து யசோதையையும், கோபிகைகளையும் மகிழ்வித்து இருக்கிறான்.
அவன் தான் நம்மையெல்லாம் கடைத்தேற்றக்கூடியவன். அவனே நமக்கு மோட்சம் தரக் கூடியவன். வாருங்கள், அவன் அருளால் அவனை அடைய நாமும் நோன்பு இருப்பதற்குத் தேவையான காரியங்களைச் செய்வோம் என்று அழைக்கிறாள்.
![]() |
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு *
செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி *
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலேநீராடி *
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம் *
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
பகவான் கிருஷ்ணரின் அருளைப் பெற்றிட, மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் நோன்பு இருக்க அழைக்கிறாள்.
கிருஷ்ணரின் அருளைப் பெற நோன்பு இருக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் அவள் விவரித்துக் கூறுகிறாள்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் நீராடிவிட்டு, கண்களுக்கு மை தீட்டியும், கருத்த கூந்தலுக்கு மலர் சூட்டியும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமாம். அலங்காரத்தில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால், பகவானை அடைவதில் ஆர்வம் குறைந்துவிடுமாம்.
மேலும் நெய்யும் பாலும் உண்ணக்கூடாதாம். சுவைகளில் ஆர்வம் ஏற்பட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல, செய்யக்கூடாத எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாதாம்.
மற்றவர்களைப் பற்றி கலக வார்த்தைகளை - அவதூறு வார்த்தைகளை சொல்லக்கூடாதாம்.
அப்படிச் சொல்வது மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் என்பதால், கிருஷ்ணரின் அருளைப் பெற முடியாமல் போய்விடுமாம். இவையெல்லாம் செய்யக்கூடாதவை என்றால், செய்யக்கூடிய ஒரு விஷயத்தையும் ஆண்டாள் சுட்டிக் காட்டுகிறாள்.
'ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி' , அதாவது தர்மம் கேட்டு யாசித்து வருபவர்களுக்கு தன்னால் முடிந்ததைத் தரவேண்டுமாம்.
அப்படி தன்னால் எதுவும் தரமுடியாத நிலை இருந்தால், அப்படி தரக்கூடிய சக்தி படைத்த நபர்களை அடையாளம் காட்டி உதவ வேண்டுமாம். இப்படியான நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நோன்பு இருப்போம் வாருங்கள் என்று ஆண்டாள் தன்னுடைய தோழிகளை அழைக்கிறாள்.
![]() |
உறையூர் - ஸ்ரீ கமலவல்லி தாயார் |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்,
அனுபிரேம்.
திருப்பாசுரமும் அதன் பொருளும் நெஞ்சை குளிர்விக்கின்றன...
ReplyDeleteஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் போற்றி..
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. படங்களும், கண்களை கவர்கின்றன. திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கங்களும் அருமை. நேற்றைய பதிவையும் படித்து மகிழ்வடைந்தேன். தொடரட்டும் உங்கள் மார்கழி பதிவுகள். நானும் இறையருளால் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.