06 January 2022

இருபத்திரண்டாம் பாசுரம் - அங்கண் மா ஞாலத்து


 இருபத்திரண்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமானிடம் தனக்கும் தன் தோழிகளுக்கும் வேறு புகலில்லை என்பதையும், விபீஷணாழ்வான் ஸ்ரீராமனிடம் சரணடைய வந்தாப்போலே தாங்கள் வந்துள்ளதையும் அறிவிக்கிறாள். மேலும் தான் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டதையும் எம்பெருமானின் அருளையே வேண்டுவதையும் அவனுக்கு அறிவிக்கிறாள்.





அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான

     பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

     கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்


அழகியதாய் இடமுடைத்தாய் பெரிதாய் இருக்கும் பூமியில்

 ராஜ்யம் செய்யும் அரசர்கள் தங்களுடைய அஹங்காரம் குலைந்து வந்து

உன் ஸிம்ஹாஸனத்தின் கீழே கூட்டமாகக் கூடி இருப்பதைப்போலே 

நாங்களும் இங்கே வந்து சேர்ந்தோம். 

கிங்கிணியின் (கிலுகிலுப்பை) வாய் போலே பாதி மலர்ந்த தாமரைப் புஷ்பத்தைப் போலே சிவந்திருக்கும் கண்களாலே சிறிது சிறிதாக எங்கள்மேல் உன் கருணைப் பார்வையைச் செலுத்தமாட்டாயோ? 

சூர்யனும் சந்த்ரனும் உதித்தாற்போல் அழகிய இரண்டு கண்களாலும் நீ எங்களை கடாக்ஷித்தால் எங்களிடம் உள்ள துன்பம் அழிந்துவிடும்.


 

நன்றி - Upasana Govindarajan Art


ஸ்ரீ ஆண்டாள், திருவஹீந்திரபுரம் ஸ்ரீ தேவநாதஸ்வாமி திருக்கோவில் 



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பாசுரமும் விளக்கமும் நன்று. ஓவியமும் படங்களும் அழகு.

    ReplyDelete
  2. அனு இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் அர்த்தப்படுத்திக் கொள்வது அன்று மஹாபாரதத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் உதவி கேட்கச் சென்ற போது பாதத்தின் அருகில் நின்று காத்திருந்ததும் துரியோதனன் தலைமாட்டில் காத்திருந்ததும், கிருஷ்ணர் கண் மலர்ந்ததும் அவர் கண்மலர் முதலில் பட்டது அர்ச்சுனன் மீது எனவே அவருக்கு அருளல்.

    அது போல் கண் விழித்து எம்மைப் பார்த்து அந்தக் கடைசி இரு வரிகள்...

    கீதா

    ReplyDelete