25 June 2022

13. "ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே"

13. "ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே"





திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊர் . பல முனிவர்கள் வாழ்ந்த இத்தலத்தில் பார்கவ மகாமுனிவர் தவமேற்கொண்டார்.

அப்பொழுது  கனகாங்கியால் அவர் தவம் குலைந்தது. கனகாங்கியின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் அவர்கள் புணர்ந்து ஒரு பிண்டத்தை ஈன்றனர். அந்த பிண்ட வடிவமான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டு விட்டு அகன்று விட்டனர் இருவரும்.

கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் அந்தக் குழந்தையின் மீது கருணை கொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணனாக்கினாள். 

 திருமழிசை என்ற ஊரில் பிறந்ததால் திருமழிசை ஆழ்வார் என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு நாள், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க வந்த போது புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்தக் குழந்தையை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு தன் மனைவி பங்கயச் செல்வியிடம் கொடுத்தான். 

அவள் அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள்.

திருவாளன், பங்கயச் செல்விக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டார்கள். 

திருமழிசை ஆழ்வாரும் கணிகண்ணனும் மிகுந்த அன்புடன் பழகினார்கள்.

திருமழிசை ஆழ்வார் பல சாஸ்திரங்கள் கற்றார். 

உலகில் பல மதங்கள் இருக்கிறன, இந்த உலகத்தைப் படைத்த கடவுள் யார் என்று குழப்பம் ஏற்பட்டது. கடும் தவம் புரிந்தார். பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். 

சிலர் சாக்கிய(பௌத்த) மதம் தான் கடவுளை அடைய வழி என்றார்கள். 

உடனே ஆழ்வார் சாக்கிய மதத்தில் சேர்ந்து அவர்களின் தத்துவ நூல்களைப் படித்தார். 

அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. 

குழப்பம் இன்னும் அதிகமாகியது. 

அந்த மதத்தை விட்டுவிட்டு சமண மதத்துக்குச் சென்றார். அங்கேயும் அதே போல அவருக்குத் தெளிவு ஏற்படவில்லை. 

அலைந்தார். 

பிறகு சைவ மதத்தைத் தழுவினார். சிவவாக்கியர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, சைவ தத்துவ விளக்கங்களை ஆராயத் தொடங்கினார்.

இவர் ஆராய்வதை ஒருவர் கவனித்து வந்தார். 

அவர் பேயாழ்வார். 

இவரின் ஆராய்ச்சி குணத்தைக் கண்ட அவர் இவருக்கு முழுமுதற் கடவுளைப் பற்றிப் புரியவைக்க ஒரு திட்டம் போட்டார்.

 ஒரு நாள் காலை திருமழிசை ஆழ்வார் வரும் வழியில் பேயாழ்வார் செடிகளைத் தலை கீழாக நட்டார். இலைகள் கீழ் பக்கமாகவும், வேர்ப் பகுதி ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்தது. 

ஒரு குடத்தை எடுத்தார் அதில் நிறைய ஓட்டைகளைப் போட்டு, கிணற்றிலிருந்து அதில் நீர் ஒழுக செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முயன்றார். தண்ணீர் இல்லாததால் அவர் மீண்டும் கிணற்றிலிந்து எடுத்தார் மறுபடியும் ஒழுகியது. இந்த விசித்திரமான செயலைப் பார்த்தார். திருமழிசை ஆழ்வார்.

பேயாழ்வார் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை.

 எதையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ளும் குணமுடைய திருமழிசை ஆழ்வாருக்குத் தலைகீழ் செடியும், ஒழுகும் ஒட்டை குடமும் சிரிப்பு வந்தது.

பேயாழ்வார் இதைக் கவனித்து ”உங்களைப் பார்த்தால் மிகுந்த படித்தவராகத் தெரிகிறது. ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்.

“பித்துப் பிடித்தவர் போலத் தலை கீழ் செடிகள்.. ஓட்டை குடம்... ” என்றார் சிரித்துக்கொண்டே.

“பித்துப் பிடித்தவன் நீர் அன்றோ ! பரம்பொருள் யார் அவனை எப்படி அடைய முடியும் என்று தேடித் தேடி பித்துப் பிடித்து அலைந்துகொண்டு இருப்பவர் நீர் தானே !”

திருமழிசை ஆழ்வார் துணுக்குற்று “என்ன சொல்லுகிறீர்கள் ?” என்றார்.

பேயாழ்வார் “என் செயல் கண்டு சிரித்தீர் ஆனால் அதன் உட்பொருளை ஆராய உம்மால் முடியவில்லையே! நீர் எப்படி பரம்பொருளைக் கண்டுபிடிக்க போறீர் ?” என்று கேட்க திருமழிசை ஆழ்வார் திகைத்து நின்றார்.


“நீரே உம் செயலுக்கு விளக்கத்தையும் சொல்லும்” என்றார்

”நீ ஆராய்ந்த மதம், தத்துவம் எல்லாம் இந்த செடிகளைத் தலை கீழாக நடுவதற்குச் சமம். ஓட்டை குடத்தில் தண்ணீர் ஊற்றுவது அந்த மதம் உமக்கு மோட்சம் அளிக்கும் என்று நம்புவதற்குச் சமம்!” என்று கூறிவிட்டு பேயாழ்வார் வேத கருத்துக்களையும் பரம்பொருளைப் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்.

இதைக் கேட்டுக்கொண்டு இருந்த திருமழிசை ஆழ்வார் “இவ்வளவு பேசுகிறீரே அந்த பரம்பொருளை நீர் கண்டீரோ ? “ என்றார்

“கண்டேன், என்னுள் கண்டேன், என் வெளியில் கண்டேன். நிலத்திலும் கண்டேன், நீரிலும் கண்டேன், காற்றிலும் கண்டேன், நெருப்பிலும் கண்டேன், ஆகாசத்திலும் கண்டேன், கோவிந்தா என்ற நாமத்தில் கண்டேன் ஏன் உன் உள்ளும் கண்டேன்!” என்றார்.

“அவன் உருவம் அற்றவன். அவனை எப்படிக் காண முடியும் ? அவனை எனக்குக் காட்டுங்கள்” என்று திருமழிசை ஆழ்வார் கேட்க, அதற்குப் பேயாழ்வார் ”அவன் உருவமற்றவன் என்றாலும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாருடன் நானும் சேர்ந்து திருக்கோவிலூரில் அவன் திருமேனி அழகைக் கண்டு ரசித்தோம். 

திருவரங்கத்தில் கிடக்கிறான், என்னுள் நிற்கிறான்” என்று பேயாழ்வார் திருக்கோவிலூரில் நடந்த கதையைச் சொன்னார்.

இவ்வளவு நாள் உண்மை அறியாது தவித்த திருமழிசை ஆழ்வார் மனம் உருகி பேயாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு திருமாலே பரம்பொருள். 

அவரே மோட்சம் கொடுக்க வல்லவர் என்ற உண்மையை அறிந்துகொண்டார் ....

பின் திருமழிசை ஆழ்வார் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார். 

கணிகண்ணன் ஆழ்வாரையே தன் குருவாகக் கொண்டு ஆசிரமத்தில் ஆழ்வாருக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்துகொண்டு இருந்தான். 

ஆசிரமத்தில் தினமும் ஒரு வயதான மூதாட்டி பெருக்கி மொழுகி, கோலம் போட்டு சுத்தம் செய்யும் பணி செய்து வந்தாள். 

ஒரு நாள் ஆழ்வார் தியானத்தில் இருக்கும் போது இவள் பெருக்கிய சத்தம் கேட்டு கண் திறந்து மூதாட்டி பெருக்குவதைப் பார்த்தார்.

“தினமும் சுத்தம் செய்வது நீங்களா ?” உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்றார். 

அதற்கு அந்த மூதாட்டி “வயதாகிவிட்டது முன்பு போல இப்போது வேலை செய்ய முடிவதில்லை. உங்களுக்கு என்றும் பணி செய்ய வேண்டும் என்பது என் ஆசை” என்றாள். 

ஆழ்வார் “என்றும் இளமை மாறாமல் இருப்பாயாக” என்று ஆசிர்வதித்தார். 

உடனே அந்த மூதாட்டி இளம் பெண்ணாக மாறினாள். 

அந்த நாட்டுப் பல்லவ மன்னன் அவள் மீது ஆசைப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டான். 

வருடங்கள் கடந்தது, அந்தப் பெண் ஆழ்வார் ஆசீர்வாதத்தால் இளமையாக இருக்க மன்னனுக்கு வயோதிகனாகிப் போனான். 

ஒரு நாள் அரசியிடம் எப்படி இளமை மாறாமல் இருக்கிறாய் என்று கேட்க தன் கதையைக் கூறினாள்.

மன்னன் கணிகண்ணனை அழைத்து ஆழ்வாரை அழைத்து வரச் சொன்னான். 

கணிகண்ணன் எதற்கு என்று கேட்க அதற்கு மன்னன் “ஆழ்வாரை அழைத்து என்னைப் பற்றிப் பாடினால் எனக்கு இளமை திரும்பும்” என்று காரணத்தைக் கூறினான்.

 கணிகண்ணன் ஆழ்வார் மானிடர்களைப் பாட மாட்டார் என்று கூற, அப்படி என்றால் நீ பாடு என்று மன்னன் வற்புறுத்தினான். அதற்கு கணிகண்ணன் நானும் என் குருநாதர் மாதிரி மானிடர்களை பாட மாட்டேன் என்று கூற மன்னனுக்குக் கோபம் வந்து என் நாட்டில் உனக்கு இடம் இல்லை கிளம்பு என்றான். 

கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

 என் சீடன் இல்லாத நாடு எனக்கும் தேவை இல்லை என்று புறப்பட்டார். 

போகும் வழியில் திருவெஃகா திவ்ய தேசம் வர பெருமாளைப் பார்த்து, கணிகண்ணன் போகிறான், நானும் அவனைத் தொடர்ந்து போகிறேன், நீயும் கிளம்பு என்று சொல்ல உடனே பெருமாள் தன் ஆதிசேஷனாகிய பாம்பைச் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். 

காஞ்சி மாநகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டது. 

மன்னன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, ஆழ்வார் பெருமாளுடன் ஊர் திரும்பினார்.







“சாமி, திருமழிசை ஆழ்வார் போல நான் எல்லா மதங்களையும் ஆராய்ந்து திருமாலே முழுமுதற் கடவுள் என்ற உண்மைப் பொருளைக் கூறவில்லை, அதனால் நான் கிளம்புகிறேன்” என்றாள்  திருக்கோளூர் பெண்மணி.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய் மொழி -முதற் பத்து

1 - 2. வீடுமின் முற்றவும் 


ஐந்தாம் பாசுரம் - வணங்கப்படும் எம்பெருமான் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.


அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்

செற்றது அது மன் உறில் அற்று  இறை பற்றே

2914


மற்ற விஷயங்களில் பற்று விடப்பட்டவுடனே ஆத்மா கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றதாகும். அந்த எண்ணத்தையும் விட்டு பகவத் விஷயத்தைப் பற்றப் பார்க்கில் மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு ஈச்வரனைப் பற்று.


ஆறாம் பாசுரம் - வணங்கப்படும் எம்பெருமான் எல்லோரிடமும் ஸமமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.


பற்று இலன் ஈசனும், முற்றவும் நின்றனன்

பற்று இலையாய் அவன் முற்றில் அடங்கே

2915


ஸர்வேச்வரனாக இருந்தும் தன் விருப்பத்துக்கு விஷயமானவர்களில் பற்றைவிட்டு நம் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபட்டு நின்றான். நீயும் ஸம்ஸார ஸங்கத்தை விட்டு அவனுடைய எல்லா விஷயங்களிலும் முழுகப்பார்.








            14.  திருநறையூர் (நாச்சியார் கோவில்)

ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீ வஞ்சுளவல்லி ஸமேத ஸ்ரீ நம்பிஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment