எட்டாம் பாசுரம் - இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுபவளும் அதனால் மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
க்ருஷ்ணனால் விரும்பப்படும் பெண்ணே!
கிழக்குத் திக்கில் ஆகாசம் வெளுத்தது.
எருமைகள் மேய்கைக்காக, சிறிதுநேரம் வெளியில் விடப்பட்டு, உலாவின.
நீராடப் போவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு போகும் மற்ற பெண்கள் அனைவரையும் போகாமல் தடுத்து, உன்னை அழைப்பதற்காக, உன் இல்லத்து வாசலில் வந்து நின்றுள்ளோம்.
எழுந்திரு! குதிரை வடிவில் வந்து கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்தவனும்,
கம்ஸனின் வில் விழாவில் மல்லர்களைக் கொன்றவனும் நித்யஸூரிகளின் தலைவனுமான கண்ணனை நாம் சென்று வணங்கினால்,
அவன் நம் குறைகளை ஆராய்ந்து, மிகவும் வேகமாக நமக்கு அருள் செய்வான்.
மார்கழி மாதம் எட்டாம் நாள்
பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ,
உற்சவர் சாணூரன் முஷ்டிகன் வதம் திருக்கோலத்தில்








வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய எட்டாம் நாள் பாசுரமும் வெகு நேர்த்தியாக உள்ளது. பாசுர பாடலும், அதன் விளக்கமும் மனம் கவர்கின்றன. ஒவ்வொரு பாசுரத்திலும் இறைவனை எவ்வாறு சரணடைவது என்பதனை குறிக்கும் வண்ணம் எழுதிய ஆண்டாள் நாச்சியாரின் புகழை எந்நாளும் பாடுவோம். அவள் பாதம் பணிந்து போற்றி, ஸ்ரீ கிருஷ்ணனை நாமும் தரிசிப்போம்.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்களின் இனிதான குரலில் பாசுரமும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.