19 December 2025

தொண்டரடிப்பொடியாழ்வார் - மார்கழியில் கேட்டை

  தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை





தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும்  செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே..!






பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.











திருமாலை 

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
 

மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடி எம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
  

திருமாலை 

 
   1

காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)

          

   2

பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)



   3
வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகன் அது ஆகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*
 

   4
மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*
இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  


          

   5
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*
தண் துழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி ஆடி,* 
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!

          



 




ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்தினமாலை.

மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன்
தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்










ஓம் நமோ நாராயணாய நமக!!
தொண்டரடிப்பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்🌼🌼🌼

No comments:

Post a Comment