மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று .......
![]() |
![]() |
சொல் (பாரதியார் கவிதை )
சொல் ஒன்றுவேண்டும், தேவசக்திகளை நம்முன்னே
நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்
1. "தேவர் வருக" என்று சொல்வதோ ? - ஒரு
செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால்
ஆவல் அறிந்துவரு வீர்கொலோ ? - உம்மை
அன்றி ஒருபுகலும் இல்லையே.
2. ஓம்என்று உரைத்துவிடில் போதுமோ ? - அதில்
உண்மைப் பொருள் அறியல் ஆகுமோ ?
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ ? - என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ ?
3. "உண்மை ஒளிர்க" என்று பாடவோ ? - அதில்
உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ ?
வண்மை உடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்
4. "தீயை அகத்தினிடை மூட்டுவோம்" - என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ ?
ஈயைக் கருடநிலை ஏற்றுவீர் - எம்மை
என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர்
5. வான மழைபொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் ;
கானை அழித்துமனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்
6. விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந்தொழில் பூட்டுவீர்
7. மின்னல் அனையதிறல் ஓங்குமே - உயிர்
வெள்ளம் கரைஅடங்கிப் பாயுமே
தின்னும் பொருள்அமுதம் ஆகுமே - இங்கு
செய்கை அதனில் வெற்றி ஏறுமே
8. தெய்வக் கனல் விளைந்து காக்குமே - நம்மைச்
சேரும் இருள் அழியத் தாக்குமே
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே - பின்பு
காலன் பயம் ஒழிந்து போகுமே
9. "வலிமை, வலிமை" என்று பாடுவோம் - என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்
கலியைப் பிளிந்திடக்கை ஓங்கினோம் - நெஞ்சில்
கவலை இருளனைத்து நீங்கினோம்
10. "அமிழ்தம், அமிழ்தம்" என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்
தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்
(தேவர் வருக என்று சொல்வதோ)





No comments:
Post a Comment