11 December 2025

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று ....... சொல்

 மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று ....... 





சொல் (பாரதியார் கவிதை )


சொல் ஒன்றுவேண்டும், தேவசக்திகளை நம்முன்னே

நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்


1.   "தேவர் வருக" என்று சொல்வதோ ? - ஒரு

செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால்

ஆவல் அறிந்துவரு வீர்கொலோ ? - உம்மை

அன்றி ஒருபுகலும் இல்லையே.

 

2.   ஓம்என்று உரைத்துவிடில் போதுமோ ? - அதில்

உண்மைப் பொருள் அறியல் ஆகுமோ ?

தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ ? - என்றன்

சித்தம் தெளிவுநிலை கூடுமோ ?


3. "உண்மை ஒளிர்க" என்று பாடவோ ? - அதில்

உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ ?

வண்மை உடையதொரு சொல்லினால் - உங்கள்

வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்


4.   "தீயை அகத்தினிடை மூட்டுவோம்" - என்று

செப்பும்  மொழிவலிய தாகுமோ ?

ஈயைக் கருடநிலை ஏற்றுவீர் - எம்மை

என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர்


5.  வான மழைபொழிதல் போலவே - நித்தம்

வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர் ;

கானை அழித்துமனை கட்டுவீர் - துன்பக்

கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்


6.  விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு

வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்

தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல

தீரப் பெருந்தொழில் பூட்டுவீர்


7.   மின்னல் அனையதிறல் ஓங்குமே - உயிர்

வெள்ளம் கரைஅடங்கிப் பாயுமே

தின்னும் பொருள்அமுதம் ஆகுமே - இங்கு

செய்கை அதனில் வெற்றி ஏறுமே


8.  தெய்வக் கனல் விளைந்து காக்குமே - நம்மைச்

சேரும் இருள் அழியத் தாக்குமே

கைவைத் ததுபசும்பொன் ஆகுமே - பின்பு

காலன் பயம் ஒழிந்து போகுமே


9.  "வலிமை, வலிமை" என்று பாடுவோம் - என்றும்

வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்

கலியைப் பிளிந்திடக்கை ஓங்கினோம் - நெஞ்சில்

கவலை இருளனைத்து நீங்கினோம்


10.   "அமிழ்தம், அமிழ்தம்" என்று கூவுவோம் - நித்தம்

அனலைப் பணிந்துமலர் தூவுவோம்

தமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்

தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்


(தேவர் வருக என்று சொல்வதோ)






















வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம் 🍀🍀🍀






No comments:

Post a Comment