11 September 2025

மகாகவி பாரதியாரின் பாப்பா பாட்டு ...

  மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று ...







 கவியின் நினைவுகள் சில ...


ஒரு நாள் காலை பாரதி வெள்ளாளர் வீதியிலிருந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை வீட்டில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது மாடியின் தளத்தில் அவரது பெண் குழந்தை தடதடவென்று ஓடியது. இந்த சத்தம் கேட்டதும் கிருஷ்ணசாமி பிள்ளை சிறிது அதிர்ச்சியடைந்து, 'ஓடாதே பாப்பா, விழுந்திடுவே' என்று குரல் கொடுத்தார்.

 'காக்கா ஆப்பத்தைப் பிடுங்குது' என்றது குழந்தை. 

உடனே பாரதி, "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா" என்று
 சொல்லிவிட்டு பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்தாராம்.

பாப்பாப் பாட்டு


ஓடி விளையாடு பாப்பா, -- நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, -- ஒரு

குழந்தையை வையாதே பாப்பா. 1


சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ

திரிந்து பறந்து வா பாப்பா,

வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 2


கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்

கூட்டி விளையாடு பாப்பா,

எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா. 3


பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா!

வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!  4


வண்டி இழுக்கும்நல்ல குதிரை, - நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு !

அண்டிப் பிழைக்கும் நம்மை, ஆடு -- இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா! 5


காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு -- என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா. 6


பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா. 7


பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. 8


துன்பம் நெருங்கி வந்த போதும் -- நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா. 9


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ

திடங்கொண்டு போராடு பாப்பா. 10


தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற -- எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா,

அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா. 11


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, -- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா;

செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா. 12


வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா,

கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா. 13


வேத முடையதிந்த நாடு, -- நல்ல

வீரர் பிறந்ததிந்த நாடு,

சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா. 14


சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்த மதி, கல்வி -- அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர். 15


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது

வாழும் முறைமையடி பாப்பா. 16



சிறுவர்களைக் கண்டால் பாரதிக்கு இளைய பாரதம் எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் துடிக்குமாம். புதுவை ஈஸ்வரன் கோயில் தெருவில் அவர் குடியிருந்த வீட்டுக்கு வெளி குறட்டில் ஒரு நாள் அவர் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் வளைந்து குனிந்து நடந்து போவதைப் பார்த்தார். 

உடனே அவனை அழைத்தார். 

அவன் முதுகை நிமிர்த்தி வைத்து, அருகில் குப்பை மேட்டில் நின்றிருந்த சேவலைக் காட்டி, "அதோ பார்! அந்தச் சேவலைப் போல் நீ நிமிர்ந்து நட!" என்றார்.





















வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம் 🍀🍀🍀

No comments:

Post a Comment