மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று ...
பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. 1
சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 2
கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா. 3
பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4
வண்டி இழுக்கும்நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு !
அண்டிப் பிழைக்கும் நம்மை, ஆடு -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! 5
காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா. 6
பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா. 7
பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. 8
துன்பம் நெருங்கி வந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா. 9
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா. 10
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா. 11
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா. 12
வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா. 13
வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா. 14
சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்த மதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். 15
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா. 16
No comments:
Post a Comment