11 December 2018

கவியை போற்றுவோம் ....


வாழ்க வளமுடன்.....


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......





 கவி பற்றிய நினைவுகள் சில ...




''அம்மாக்கண்ணு பாட்டு" என்பது அதன் தலைப்பு.

அதில் 'பூட்டைத் திறப்பதுங்கையாலே,
நல்ல மனந்திறப்பது மதியாலே,
பாட்டைத் திறப்பது பண்ணாலே,
 இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே' எனும் வரிகளுடன் தொடங்கும்.

அந்தப் பாடல் தோன்றிய விதம் என்ன தெரியுமா?

ஒரு சமயம் செல்லம்மாவும், சகுந்தலாவும் வெளியே  போயிருந்தார்கள்.

பாரதி புதுவையில் தன் இல்லத்தின் வாயிலை ஒரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தான் வைத்திருந்த பூட்டின் சாவி இல்லாதது கண்டு திகைத்துப் போனார்.

 எங்கெல்லாமோ தேடி அலுத்துப் போய் நின்று கொண்டிருந்த சமயம்,  வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த (சம்பளம் எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூதாட்டி அவர்) அம்மாக்கண்ணு எனும் பெண்மணி தற்செயலாக அந்தப் பக்கம் வந்தவர்,

பாரதியார் பூட்டைத் திறக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து,

அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு தானே கையால் அசைத்து அந்தப் பூட்டைத் திறந்து விட்டாள்.

இதைக் கண்டு மகிழ்ந்து போய் பாரதி அந்த அம்மாக்கண்ணுவின் பெயரால் இந்தப் பாட்டைப் பாடினாராம்.

பூட்டைத் திறப்பது கையாலே நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலேஇன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே. 

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலேஅன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலேஉயிர்
துணி வுறுவது தாயாலே.












வேதாந்தப் பாடல்கள்
பொய்யோ? மெய்யோ?

உலகத்தை நோக்கி வினவுதல்



நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, 
  நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? -- பல
  தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, 
  நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? -- உம்முள் 
  ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, 
  நீங்களெல்லாம்
கானலின் நீரோ? -- வெறுங் 
  காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் 
  புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? -- இந்த 
  ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒருநினைவும் 
  காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? -- அங்குக் 
  குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் 
  தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? -- இதைச் 
  சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் 
  மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -- நித்தம் 
  விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம், 
  காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக் 
  காட்சி நித்தியமாம். 4












வளர்க கவியின் புகழ்.....!



அன்புடன்
அனுபிரேம்



5 comments:

  1. மகாகவிக்குப் புகழஞ்சலி....

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வளர்க கவியின் புகழ்!

    ReplyDelete
  3. காக்கையும் குருவியும் எங்கள் ஜாதின்னு பாடியவன்

    ReplyDelete
  4. நினைவுகூர்ந்த விதம் அருமை.

    ReplyDelete