05 September 2025

ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை

  ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்றம்  

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...

 ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை

ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை

எட்டாம்  நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை 

ஒன்பதாம்  நாள் -  புட்டுக்கு மண் சுமந்த லீலை 





திருவிளையாடற் சுருக்கம் :

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவன் வைகையில் வெள்ளப்பெருக்கினை உண்டாக்கினார். வைகையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது. இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான்.

அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர்.

 மக்களும் வைக்கோல், பசுந்தளை, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும், கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர். 

அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள்.  அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள்.

 வந்தி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வந்தியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள்.

கூலியாள் கிடைக்காததால் வந்தி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் “ஐயனே, நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை. ஆதலால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று வேண்டினாள்.

 இந்நிலையில் இறைவனார் வந்திக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும், திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வந்தியின் இடத்தினை அடைந்தார்.

 கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ என கூவிக்கொண்டு வந்தியை நெருங்கினார். உடனே வந்தி இறைவனாரிடம் என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா என்று கேட்டாள்.

சரி அப்படியே செய்கிறேன். 

எனக்கு கொடுக்கும் கூலி யாது என்று கேட்டாள்.

 நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன் என்று கூறினாள்.

 இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். 

பின்னர் வந்தியிடம் நான் தற்போது பசியால் மிகவும் களைப்புற்றுள்ளேன். ஆதலால் நீ எனக்கு உதிர்ந்த பிட்டை எல்லாம் தற்போது தருவாயாக. நான் அதனை உண்டு பசியாறிய பிறகு கரையை அடைக்கிறேன்.” என்று கூறினார்.

 வந்தியும் அதற்கு சம்மதித்து பிட்டினைத் தந்தாள். 

இறைவனார் அதனை உண்டு சற்று களைப்பாறிவிட்டு கரையினை அடைக்கச் சென்றார். 

வைகையின் கரையினை அடைந்து நான் வந்தியின் கூலியாள் என பதிவேட்டில் குறித்துக் கொள்ளச் சொன்னார். பின்னர் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும், மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வந்தியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார்.

 அரசாங்க காவலர்கள் வந்தியின் பங்கு அடைப்படாமல் இருப்பதைக் கண்டனர். வந்தியின் கூலியாளான இறைவனாரிடம் ஏன் வந்தியின் பங்கு இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். அச்சமயத்தில் வைகையின் கரை அடைப்பட்டிருப்பதைக் காண அவ்விடத்திற்கு அரிமர்த்தன பாண்டியன் வந்தான். நடந்தவைகளைக் கேட்டறிந்தான். உடனே கோபம் கொண்டு பிரம்பால் இறைவனாரை அடித்தான்.

இறைவனார் உடனே மண்ணினை உடைப்பில் கொட்டிவிட்டு மறைந்தருளினார். பாண்டியன் இறைவனை அடித்ததும் அடியானது அங்கிருந்த பாண்டியன் உட்பட எல்லோரின் முதுகிலும் விழுந்தது.

 எல்லோரும் திடுக்கிட்டனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

அப்போது “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.

ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். 

பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வைகையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வந்தியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூறினார். 

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.

 மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லைஅம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக்கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார். 

இறைவனின் ஆணைப்படி சிவகணங்கள் வந்தியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றன.
















நலம் தரும் திருப்பதிகம்

 01 திருஆலவாய்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 51 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்



பாடல் எண் : 10

எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய

அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை

குண்டராம் அமணர் கொளுவும் சுடர்

பண்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.


எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும், அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.

மீனாட்சி அம்மன்  சுந்தரேஸ்வரர்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment