11 November 2018

அருணகிரிநாதர் -திருவண்ணாமலை

முருகா சரணம் ..

கதிர்வேலா சரணம்...

திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள்.

 அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை.







திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரிநாதர்.
இவர் சுமார் 167 ஆலயங்களுக்கு சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் .




அருணகிரிநாதர் சுமார் 16 ஆயிரம் பாடல்களை முருகன் மீது பாடினார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 1328 பாடல்கள் மட்டுமே உள்ளன.


 திருப்புகழ் பாடல்களில் சந்த வகைகள் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்களில் 1008 சந்த வகைகள் இருப்பதாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். அவை கலைப் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

அவர் மேலும் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவற்றையும் இயற்றினார்.



இந்த பொக்கிஷத்தை நமக்கு தந்த அருணகிரிநாதர் பெண்ணே கதி என்று கிடந்தவர். அவரை ஆட்கொண்ட முருகப்பெருமான், அவர் மூலம் நமக்கு திருப்புகழை தரச் செய்தார்.

இதன் மூலம் முக்தித் தலமான திருவண்ணாமலையில் சிவபெருமான் மட்டுமின்றி முருகனும் தனி திருவிளையாடல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.




திருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு,  சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது.  அதன் பயனாக முத்தம்மைக்கு ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியம் கிடைத்தது. அருணாசலேஸ்வரர் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அந்த குழந்தை “அருணகிரி” என்று பெயரிட்டார்.

சிறு வயதில் இருந்தே அருணகிரி பெற்றோர் சொல் கேட்காமல் காம களியாட்டங்களில் ஈடுபட்டார். இதனால் மனம் வெறுத்த தந்தை வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் முத்தம்மை உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒருநாள் அவர் தம் மகளை கூப்பிட்டு, “தம்பியை பார்த்து கொள்” என்று கூறி விட்டு உயிரை விட்டார்.



அதன் பிறகு தம்பிக்கு அன்னை போல இருந்து அவரது சகோதரி கவனித்து வந்தார். தட்டிக்கேட்க ஆள் இல்லாததால் அருணகிரியின் காம களியாட்டங்கள் அதிகரித்தது. இதனால் சொத்துக்கள் அழிந்தன. வறுமை சூழ்ந்தது. அதோடு அருணகிரியை தோல் நோயும் தாக்கியது.

பணம் இருக்கும் வரை பாசத்தோடு இருப்பது போல நடித்த தேவதாசிகள், அருணகிரியாருக்கு நோய் இருப்பதை அறிந்ததும் வெளியில் தள்ளி கதவைப் பூட்டினார்கள்.

 அப்போதுதான் அருணகிரிநாதருக்கு புத்தி வந்தது. தனது வாழ்வை சற்று யோசித்துப் பார்த்தார். தவறான பழக்கத்தால் தன் சகோதரியையும் ஏழ்மை நிலைக்கு தள்ளி விட்டதை நினைத்து வருந்தினார்.

குற்ற உணர்ச்சி பொங்க, என்ன செய்வது என்று தலை சாய்த்து யோசித்தார். அவர் கண்ணில் திருவண்ணாமலை ஆலய வல்லாள மகாராஜா கோபுரம் பட்டது.



உடனே அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தார். யாருக்கும் பயன்படாத தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால் முருகப்பெருமானின் சித்தமோ வேறு விதமாக இருந்தது.

கோபுரத்தில் இருந்து விழுந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் தனது இரு கைகளையும் ஏந்தி பிடித்துக் கொண்டார். அருணகிரி நாதர் ஆச்சரியத்தோடுப் பார்க்க அவர் காதில் முருகப்பெருமான்,

“சும்மா இரு, சொல் அற” என்று சொல்லி, ஜெப மாலை ஒன்றையும் கொடுத்து விட்டு மறைந்தார்.

அக்கணமே அருணகிரி நாதரின் தோல் நோயும் மறைந்தது.



முருகன் அருள் பெற்ற அவர் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தவத்தில் மூழ்கினார். சுமார் 12 ஆண்டுகள் அவர் தவத்தில் இருந்தார்.

ஒருநாள் முருகப் பெருமான் அவர் முன் தோன்றி, “என் திருப்புழைப் பாடு” என்றார். அதற்கு அருணகிரி, “முருகா... எனக்கு வேதமும் தெரியாது. சந்தமும் தெரியாது. நான் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்” என்றார். உடனே முருகப்பெருமான் அவர் நாவில், “முத்தைத் தரு பத்தி திருநகை” எனும் திருப்புகழின் முதல் அடியை எழுதி எடுத்துக் கொடுத்து மறைந்தார்.




மறுநிமிடத்தில் இருந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை பாடி குவித்தார். முதலில் அவர் பாடிய திருப்புகழ் பாடல்....



முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்தி சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி விரவாகப்
பத்தற்கிர தத்தைக் கட்விய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே

தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரபவு நிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக்களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழு நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே

--இந்த முதல் திருப்புகழ் பாடலைப் பாடி விட்டு அருணகிரிநாதர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

சில ஆண்டுகள் கழித்து முருகப்பெருமான் அவர் முன் மீண்டும் தோன்றி, “என் ஆலயங்களுக்கு சென்று திருப்புகழைத் தொடர்ந்து பாடு” என்று உத்தரவிட்டார்.

அதை ஏற்று அருணகிரிநாதர் வயலூருக்கு சென்றார்.

பிறகு தமிழகம் முழுவதும் சென்று திருப்புகழ் பாடினார்.

வடநாடு மற்றும் ஈழத்துக்கும் சென்று முருகனை புகழ்ந்து திருப்புகழ் பாடினார். அவருக்கு வயலூர், சிதம்பரம், விராலிமலை, பிரான்மலை, திருச்செந்தூர், திருத்தணி ஆகிய 6 தலங்களில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

இந்த சம்பவங்களால் அருணகிரிநாதரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடத்து சில புலவர்கள் அழைத்ததின் பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூராரை கந்தகர் அந்தாதி பாடி தோற்கடித்தார்.

பழனி தலத்தில் இருந்தபோது இறைவனிடம் வேண்டி தம் சகோதரிக்கு முக்தி பெற்றுக் கொடுத்தார். அது போல வட மாநில யாத்திரை மேற்கொண்டிருந்தபோது சாதுக்களுடன் இருந்த தந்தையை கண்டுபிடித்து அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தார்.


கம்பத்தில் (தூணில்) காட்சி தந்த முருகன் 


மீண்டும் திருவண்ணாமலைக்கு  திரும்பினார் அருணகிரிநாதர் .

அருணகிரிநாதர் தன்னை முருக பக்தன் என்றும், முருகன் அருள் பெற்றவர் என்றும் கூறிக்கொள்வதாக அவர் மீது காழ்ப்புக் கொண்ட அமைச்சர், மன்னரிடம் புகார் கூறினார்.



முருகனடிமை எனக் கூறிக்கொள்ளும் அருணகிரி, மன்னன் முன் முருகனை வரவழைத்துக் காட்ட வேண்டும். பராசக்தியின் பக்தனான நான் பராசக்தியை வரவழைத்துக் காட்டுவேன். இதில் யார் ஒருவர் அவரது தெய்வத்தை வரவழைக்க முடியவில்லையோ அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றார் அமைச்சர்.

மன்னனுக்கு இந்தப் போட்டி மிகவும் பிடித்திருந்தது. முருகனையும், பராசக்தியையும் நேரில் காணலாம் என்று ஆனந்தம் கொண்டிருந்தான். ஒரு சுபயோக சுப தினத்தில் போட்டி துவங்கியது.

தேவி உபாசகர் அமைச்சர் சம்பந்தாண்டார் முதலில் தானே தேவியை வரவழைப்பதாகக் கூறினார். தேவியை அங்கே தோன்ற அதிகாரமாக உத்திரவிட்டார். அவரது அடக்கமின்மை காரணமாகவோ என்னவோ தேவி தோன்றவில்லை. கூட்டத்தினரிடையே அவமானம் ஏற்படுவதைக் கண்ட சம்பந்தாண்டார் பல முறை தேவிக்கு உத்திரவிட்டார். தோல்வியே மிஞ்சியது.

அருணகிரிநாதரோ அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பம் ஒன்றில் முருகன் எழுந்தருள வேண்டும் எனக் கோரி, அவ்விடம் நோக்கிச் செல்லத் தொடங்கினார். மன்னனும், மக்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். அவ்விடத்தை அடைந்த அருணகிரியார் முருகனின் பெருமை குறித்துத் திருப்புகழை பக்தி, சிரத்தையுடன் பாடத் தொடங்கினார்.

திருப்புகழ் நிறைவுற்றவுடன், கம்பத்திலே மயில் வாகனத்தில் முருகன் தோன்றினார். சோதனையைச் சாதனையாக்கினார் அருணகிரி நாதர். இந்தக் கதையின் அடையாளமாக இன்றும் கம்பத்து இளையனார் என்ற தூண் அண்ணா மலையார் கோயிலில் காட்சி அளிக்கிறது.

திருவண்ணாமலை

         சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான், தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான்.

அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரி நாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான்.

 உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன், தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார்.

அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி, தேவலோகத்துக்கு பறந்து சென்றார்.

இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான், சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான்.

பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது வருந்தினார். கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார்.

அப்போது அவர், “மன்னா நான் மன்னிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார்” என்றார்.

அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி, திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார்.

ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார்.

அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்.

சிலர் அந்த கிளி, திருத்தணி வந்து முருகன் கையில் அமர்ந்ததாக சொல்கிறார்கள்.

இத்தகைய சிறப்புடைய அருணகிரிநாதர் வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அலங்காரம், திருவெழுக் கூற்றிருக்கை ஆகியவையும் பாடியுள்ளார்.



இந்தியத் தபால்துறை 1974 ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி அருணகிரிநாதர் உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலையை வெளியிட்டு அவரை கெளரவித்தது.

(மேலே உள்ள படங்கள் எல்லாம் திருவண்ணாமலை ..முருகன் சந்நிதியின் கோபுர படங்கள்   )



முருகா சரணம் 

கந்தா சரணம் 

கதிர்வேலா சரணம்


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. அருணகிரிநாதரின் சிறப்பு பற்றி மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன்.

    கந்தனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

    ReplyDelete
  2. தெரிந்த கதை மீண்டும் படித்தேன்.
    படங்கள் எல்லாம் மிக அழகு, தெளிவு.
    முருகா சரணம் , கந்தா சரணம்.

    ReplyDelete
  3. முதலாவது குழந்தை முருகன் மிக அழகு..

    ஆவ்வ்வ் இங்கேயும் அருணகிரியாரின் கதை அதே கதைதானா?:) அப்போ மீ சேவ்:).. ஹா ஹா ஹா என்பக்கத்திலதான் கந்தசஷ்டியில எழுதிட்டமோ என ஓசிச்சேன்ன்:)..

    ReplyDelete
  4. வாசித்திருக்கிறோம் என்றாலும் மீண்டும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி

    மிக்க நன்றி படங்கள் அருமை சகோதரி.அனு

    துளசிதரன், கீதா

    ReplyDelete