24 September 2020

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு பஞ்சதுவாரகா தரிசனம் ...

இந்த ஸ்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.



 ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

துவாரகாதீசர் கோயில்  108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

பெருமாள்- கல்யாண நாராயணன், துவாரகா நாதன்-துவாராகாதீசன், நின்ற திருக்கோலம்

தாயார்– கல்யாண நாச்சியார்- ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்) .

தீர்த்தம் - கோமதி தீர்த்தம் 

விமானம் - ஹேம கூட விமானம்









நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. 

கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். 

இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.


பிரதான வடக்கு வாயில் - மோட்ச துவாரம் - சிவன் கோவில் குசேஸ்வர் - தெற்கு வாயில் சொர்க்க துவாரம்

தெற்கு கோமதி நதி–படித்துறைகள்: 

சங்கம்காட் சங்கமநாராயணர்-வாசுதேவகாட் ஆஞ்சனேயர், நரசிம்மர்.

நான்காவது தளம்-அம்பிகை-சந்நிதி-பலதேவர்-கருடன்-ராஜபலி

மேற்கே அம்பிகை,புருஷோத்தமன், தத்தாத்ரேயர், தேவகி, நாராயணன்;

கிழக்கே சத்யபாமா-சங்கராச்சாரியார்கள்.     








ஸ்தல வரலாறு

தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாகும்.

உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது.

கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள்.

இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலை சாளுக்ய பாணியில் கட்டப்பட்டதாகும்.

கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும்,  பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.







கண்ணனுக்கு உணவும் உடையும்  கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.


பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும்.





கருப்புநிறம் கொண்ட கண்ணன்  நான்கு  திருக்கரங்களுடன், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.  இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். 

இந்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது.

60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன.  

கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. 

இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன.

துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.


 இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் ஐந்து முறை ஏற்றி இறக்கப்படுகிறது. 

கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. 

காலையில் பாலகிருஷ்ணனாகவும், பகலில் மகாராஜாவைப் போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.









ஸ்தல சிறப்புகள் :-

இத்தலம் உலக பாரம்பரிய களமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது.

இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.


காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை “உடாபன்” என்றழைக்கிறார்கள்.

அப்போது தங்க பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள்.

7 1/2 மணிக்குள் தீர்த்தமும் ப்ரசாதமும் படைக்கப்படுகிறது.

உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள்.

பிறகு அப்பமும், அக்காரமும் பாலில் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது.

அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன.

இரவு  செரிமானத்திற்காக லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான்.

இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர்.







(அங்கு படம் எடுக்க அனுமதி இல்லை , எனவே அனைத்து படங்களும் இணையத்திலிருந்தே ..)


3144

அன்னையென்செய்யிலென்? ஊரென்சொல்லிலென்? தோழிமீர்! * 

என்னையினியுமக்காசையில்லை அகப்பட்டேன் * 

முன்னையமரர்முதல்வன் வண்துவராபதி 

மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன்வலையுளே.


- மூன்றாம் திருவாய்மொழி – மாசறுசோதி



தொடரும் ......

கண்ணன் திருவடிகளே சரணம் ....

அன்புடன் 

அனுபிரேம்     

5 comments:

  1. மிகவும் அழகான கோவில். இரண்டு முறை இங்கே சென்று வந்திருக்கிறேன். தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. இந்தக் கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவந்த நினைவு வந்துவிட்டது.

    கடைசிப் படம் மிக அருமை. அங்க சேவித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் எழுதியுள்ளதுபோல மணிக்கொரு முறை அலங்காரம் மாற்றுகிறார்கள். கண்ணாடி கொண்டு, கண்ணனுக்கு, இந்த அலங்காரம் திருப்திதானா என்று கேட்கிறார்கள். அங்கு வந்திருந்த பக்தர்களின் பக்தி மிகவும் மனதை நெகிழ வைத்தது.

    ReplyDelete
  3. இங்கு பிரசாதமாக 150 ரூபாய்க்கு பெரிய லட்டு தந்தார்கள். கோவிலிலிருந்து படி இறங்கிச் சென்றால் கோமதி நதி கடல் முகத்துவாரம்

    ReplyDelete
  4. படங்கள் எல்லாம் மிக அழகு.
    நேரலையில் உணவு படைக்கப்படுவது, அபிஷேகம், அலங்காரம் எல்லாம் பார்த்தேன்.
    துவாரகை கண்ணனை மீண்டும் தரிசனம் செய்த மனநிறைவு.

    ReplyDelete
  5. பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. அவ்விடம் செல்ல இறையருள் துணைநிற்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete