19 December 2020

4. ஆழிமழைக்கண்ணா

 ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்.






'கிருஷ்ணா, நீ எப்போதும் அழிவற்ற பரம்பொருள். ஊழிக்காலத்துக்குப் பின் இந்த உலகத்தை மறுபடியும் சிருஷ்டி செய்யும் முதல் பரம்பொருளும் நீயே.

 ஜீவாத்மாக்களாகிய நாங்கள் அடிக்கடி பிறந்தாலும், அவரவர் விதிக்கு ஏற்றபடி சரீரங்கள் அழிந்தாலும், அழியாத ஆத்மாக்களாக இருக்கிறோம். எங்களுடைய கர்மவினைப்படி பலன்களை அனுபவிக்கச் செய்கிறாய். 

ஆனால், ஏதோ ஒரு பிறவியில் செய்த புண்ணியப் பயனாய் இப்போது நாங்கள் உன்னிடத்தே நீங்காத பக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படியே இந்த நிலையிலேயே நாங்கள் நிலைத்திருக்கும்படி நீ அருள்புரியவேண்டும்' என்று பிரார்த்திக்கிறாள்.



ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல் *

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி *

ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்து *

பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில் *

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து *

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் *

வாழஉலகினில் பெய்திடாய் * நாங்களும் 

மார்கழிநீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.



பொருள்-

'வட்டம் வட்டமாகச் சுற்றிச் சுழன்று பெய்கின்ற மழைக்கு இறைவனே,
 நாங்கள் மார்கழி நீராடி நோன்பு இருக்க விரும்புகிறோம். 

அதுவும் உன்னை அடைவதற்காகவே நாங்கள் நோன்பு இருக்கிறோம்.

 எனவே, கடலில் புகுந்து கடல்நீரினை உறிஞ்சி எடுத்துக்கொண்டு வானத்துக்கு ஏறி, ஊழிக்காலத்து முதல்வனாக இருந்து சிருஷ்டிகளைப் படைக்கும் உன்னுடைய திருமேனியின் நிறம் போன்ற கருத்த மேகங்கள், 

நாபிக் கமலத்தில் தாமரை மலரைக் கொண்ட பத்மநாபனின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்தின் பிரகாசம் போன்ற மின்னலையும், 

பகவானின் கையில் இருக்கும் பாஞ்சஜன்ய சங்கின் ஒலி போல் கர்ஜிக்கும் இடியையும், ஏற்படுத்தியபடி, 

பகவானே, உன்னுடைய கோதண்டமாகிய வில்லில் இருந்து சரமாரியாகப் புறப்பட்டு பாய்ந்து செல்லும் அம்புகளைப் போல், மழையைப் பொழியச் செய்வாய். 

அப்போதுதான் நாங்கள் மார்கழி நீராடவும், உலகத்தில் இன்புற்று வாழவும் முடியும். 
எனவே வஞ்சனை இல்லாமல் மழையப் பொழியச் செய்வாய்' என்று வேண்டுகிறாள்.


திருப்பேர்நகர் (அப்பக்குடத்தான்) - ஸ்ரீ கமலவல்லி தாயார்.



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. படங்கள் அழகு.

    விளக்கம் மிகச் சிறப்பு. தொடரட்டும் பாசுர அமுதம்.

    ReplyDelete