04 October 2018

திருமலையில் (6)

 ஓம் நமோ நாராயணா






நாங்கள் படியேறி வந்ததும் , ஏற்கனவே பதிவு செய்திருந்த அறையில் தங்கி ஒய்வு எடுத்துவிட்டு காலையில் தரிசனம் காண சென்றோம் . 300 ரூபாய் தரிசனத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்ததால் 2 மணி நேரத்தில் வேங்கடவன் தரிசனம் கிட்டியது.




ராஜ கோபுரம்:

இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம்' என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.






மூன்று பிரகாரம்:

 கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி பிரதட்சிணம்' என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.











கிருஷ்ண தேவராய மண்டபம்:

கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர்.

இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார்.

 கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார்.

 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.









ரங்க மண்டபம்:

சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.




 திருமலை ராய மண்டபம்:

ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

ஜனா மண்டபம்:

திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.





துவஜஸ்தம்ப மண்டபம்:

வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.



 நடிமி படி காவிலி:

இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது.

வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது.

இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி' என்று இந்த கதவுகளுக்கு பெயர்.

இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.







திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் - மோகினி திருக்கோலத்தில் சுவாமி மலையப்பன்.











1032.   
எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

 

 அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்!!’ என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.

 கைசலியாமல் பாவங்களைச் செய்ததனாலுண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத அசக்தியாயிற்றுக்காண்.

ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும்.


கோதையும் , பெரியாழ்வாரும் - திருமலை வேங்கடவன் தரிசனம் 5

முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..

திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..

அன்புடன்

அனுபிரேம்

4 comments:

  1. அழகான படங்கள்.. மனதைக் கவர்கின்றன..

    ஹரி ஓம் நமோ நாராயணாய...

    ReplyDelete
  2. திருப்பதி போய் சேர்ந்தாச்சா?!

    ReplyDelete
  3. அழகான படங்கள். விவரங்களும் அருமை

    ReplyDelete
  4. திருப்பதிக்கு உங்களுடன் வந்து தரிசனம் செய்யும் நிறைவு கிடைக்குது.
    பின்னடியே வருகிறேன்.
    படங்கள் அழகு.
    விவரங்கள் எல்லோருக்கும் உதவும்.
    பாசுரம் தேர்வு அருமை.

    ReplyDelete