23 August 2019

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி









நீ கிருஷ்ணனை கர்ப்பத்தில் அனுபவித்தால்
உன்னை தேவகிக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை பிள்ளையாய் அனுபவித்தால்
உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால்
உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால்
உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை காதலனாய் அனுபவித்தால்
உன்னை கோபிகைகளுக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை தகப்பனாக அனுபவித்தால்
உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை பார்த்தசாரதியாய் அனுபவித்தால்
உன்னை அர்ஜுனனுக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை நண்பனாய் அனுபவித்தால்
உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை தூதுவனாய் அனுபவித்தால்
உன்னை பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை தெய்வமாய் அனுபவித்தால்
உன்னை பீஷ்மருக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை கீதாசார்யனாக அனுபவித்தால்
உன்னை சஞ்சயனுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை ஆபத்பாந்தவனாக அனுபவித்தால்
உன்னை த்ரௌபதிக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை ரங்கனாய் அனுபவித்தால்
உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை நாராயணனாய் அனுபவித்தால்
உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை குருவாயூரப்பனாக அனுபவித்தால்
உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை பாண்டுரங்கனாக அனுபவித்தால்
உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை உடுப்பி கிருஷ்ணனாக அனுபவித்தால்
உன்னை கனகதாஸருக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை கிரிதாரியாக அனுபவித்தால்
உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக அனுபவித்தால்
உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக அனுபவித்தால்
உன்னை கிருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை ராஸநாயகனாக அனுபவித்தால்
உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை அனந்த பத்ம நாபனாக அனுபவித்தால் உன்னை மஹாராஜா ஸ்வாதித் திருநாளுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக அனுபவித்தால்
உன்னை சுகப்ரம்மரிஷிக்கும்ப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை நாமஜபமாக அனுபவித்தால்
உன்னை ஹரிதாஸ்யவனுக்குப் பிடிக்கும்!

நீ கிருஷ்ணனை ராதிகாதாஸனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ணனுக்குப் பிடிக்கும் !

நீ கிருஷ்ணனிடம் ப்ரேமையில் உன்னையே கொடுத்து
அவன் இஷ்டப்படி வாழ்ந்தால் உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !

உன்னிடத்தில் இத்தனைபேர் ப்ரியம் வைக்கக்
காத்திருக்க நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக
ஏங்குகிறாய் !!!

கிருஷ்ணனிடம் சரணாகதி ஆகிவிடு !!

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!


(படித்ததில்  பிடித்தது )





ஆன்மா எனும் தயிரை உடல் எனும் பானையில் இட்டு..

பக்தி எனும் மத்து கொண்டு..

கிருஷ்ண பிரேமை எனும் கயிறு கொண்டு..

கிருஷ்ணா..கிருஷ்ணா என முன்னும் பின்னும் கடைந்தால்..


பகவத் அனுக்கிரகம் எனும் வெண்ணெய் கிடைக்குமே...

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

(படித்ததில்  பிடித்தது )






பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம் திருமொழி - மாணிக்கங் கட்டி

கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்


மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி *
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் *
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் *
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)

1 44


உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ *
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு *
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் *
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ. 

2 45


என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு *
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு *
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி *
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ. 

3 46



சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் *
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் *
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் *
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.



                                               

அனைவருக்கும் இனிய ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!


  ஓம் நமோ நாராயணா 

ஸ்ரீ கிருஷ்ணன்  திருவடிகளே சரணம்..!!!!


அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. வணக்கம் சகோதரி

    தங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். படங்கள் அற்புதம். கண்களால் அள்ளி அள்ளி பருகியும் தெவிட்டாத அமிர்தமாய் இனிக்கிறது.

    படித்ததில் பிடித்தது இரண்டுமே படித்ததும் பக்திப் பரவசத்தில் உடல் சிலிர்க்கிறது. கண்கள் குளமாக படித்தேன்.

    /உன்னிடத்தில் இத்தனை பேர் ப்ரியம் வைக்கக்
    காத்திருக்க நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக
    ஏங்குகிறாய் !!!

    கிருஷ்ணனிடம் சரணாகதி ஆகிவிடு !!
    ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா/

    உண்மை சகோதரி.. எவ்வளவு உண்மையான வரிகள். இன்னமும் சதாரண மனிதர்களாக இருக்கிறோமே என மனது கிடந்து தவிக்கிறது.

    அருமையான கிருஷ்ண ஜெயந்தி பதிவு. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  2. கவிதையும் ஓவியங்களும் மிக அருமை அனு!

    ReplyDelete
  3. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அத்துணை பரிமாணங்களையும் இரசித்து, அனுபவித்து, உணர்ந்து எழுதிய அன்பின் வரிகள். வாசிக்கவும் மிகவும் பிடிக்கிறது. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  4. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.

    சிறப்பான பதிவு. பாராட்டுக>

    ReplyDelete
  5. நன்னாளில் அருமையான பதிவு. இதே நாளில் தஞ்சாவூரில் உள்ள யாதவ கண்ணன் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் புதிய பதிவினை (Yadhava Kannan Temple, Thanjavur) நான் ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  6. ரசிக்கத்தக்க ஓவியங்கள்.

    பிடிக்கும் லிஸ்ட் இதுவரை நான் படித்திராத சுவாரஸ்யம்.

    ReplyDelete
  7. அத்தனையும் அருமை, பாடல், படங்கள்
    படித்ததில் பிடித்தது மிக அருமை.

    ReplyDelete