16 August 2019

அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்


கோவை பொள்ளாச்சியில்  இயற்கை அழகு சூழ அமைந்துள்ள  திருக்கோவில் மாசாணியம்மன் ஆலயம்.






பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ளது ஆனைமலை. மலையில் தோன்றி பாய்ந்து வருகிறது உப்பாறு. ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாசாணியம்மன் கோவில்.






 இக்கோவிலில் அருள்மிகு மாசாணியம்மன்  17 அடி சயனக் கோலத்தில் அருள் புரிகின்றாள். அம்மனின் காலடியில் இருக்கும் அசுரன் மகுடாசுரன் என அழைக்கிறார்கள்.




ஸ்தல வரலாறு -

பழங்காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு சொந்தமான தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் உண்டாலும் அவருக்கு மரண தண்டனை நிச்சயம் என சட்டம் விதித்திருந்தான்.

அப்போது ஒரு சிறுமி இந்த சட்டத்தை அறியாமல் இந்த தோட்ட பழத்தை உண்டுவிட்டாள். இதையறிந்த நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றினான்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவனுடன் போர்புரிய அதில் நன்னன் கொல்லப்பட்டான். பிறகு அந்த கிராம மக்கள் அனைவரும் இறந்த அந்த சிறுமிக்கு கோவில் கட்டி வழிபடலாயினர். அக்கோவிலே மாசாணியம்மன் கோவில் என்று கூறப்படுகிறது





மாசாணம் என்றால் மயானம் என்று பொருள். மயானத்தில் இருக்கும் அம்மன் நீதி தேவதையாக பார்க்கப்படுகின்றார்.


கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி, துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.



மிளகாய் அரைத்து வழிபாடு:

பொருள்களைக் களவு கொடுத்தல், கடன் பிரச்னை, நம்பிக்கை துரோகம், பகை என மனக்குறையோடு வரும் பக்தர்கள் அங்குள்ள நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து பூசி நீதியை வேண்டுகின்றனர்.

இங்கு வழிபடும் பக்தர்கள் கோயிலை விட்டு செல்லும் போது  தங்களின் மனக்குறை இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.


 கோவிலின் உள்ளே மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது . நாங்கள் சென்றது ஒரு சாதாரண நாளில் அன்றும் சிறிது கூட்டமாகவே இருந்தது . ஆனாலும் நல்ல தரிசனம் . பலர் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகின்றனர்.

மிகவும்  பரவசம் செய்யும்  அழகில் அம்மன் அருள் புரிகிறாள் .




பசுமையான வழி 


ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!

அழகுமிகு தொம்பைகளும் அந்தரத்தில் ஆடிவர
வாழை, தெங்கு குலைகளுமே அடுக்கடுக்காய் அசைந்துவர
குழைந்திருக்கும் பக்தர்கூட்டம் வடமெடுத்து இழுத்துவர
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!

ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்
மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்
இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்
சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......

காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!

அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!

சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி

திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!

இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!

ஊரிருக்கும் இடமெல்லாம் தாயாரே நீயிருப்பாய்
உன்பிள்ளை கணபதியை உன்னுடனே வைத்திருப்பாய்
தடையேதும் வாராமல் உனைக்காண அவன் அருள,
தயவெல்லாம் தந்திடவே நீயென்றும் அருளிடுவாய்!

ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்
கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்
குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்
ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!

தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்
வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்
ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்
பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!

ஆதவனைக்கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது
திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது
செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்
பொன்புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்

குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் - விடி
வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் 
சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்
நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!


அம்மன் திருவடிகளே சரணம் 




அன்புடன்
அனுபிரேம் 

6 comments:

  1. அம்மன் திருவடிகளே சரணம்.
    மிக அருமையான அழகான படங்கள்.முன்பு அடிக்கடி போகும் கோவில்.
    அம்மன் பாடல் பாடி வழிபட்டுக் கொண்டேன்.

    ReplyDelete
  2. கோயில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை அனு.

    கடைசிப் படம் செம அழகு..

    கீதா

    ReplyDelete
  3. அமாவாசை அன்று செல்வது விசேசம்...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அழகான அம்மன் கோவிலைப்பற்றிய பதிவு. கோவைக்கு எப்போதோ உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். இந்த கோவில் பற்றி கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது ஆனால் இதுவரை போனதில்லை. ஸ்தல வரலாறு தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். படங்களைப் பார்த்தும், பரவசமூட்டும் அம்மன் பாடல்களை பாடியும், மகிழ்ச்சி எய்தினேன். எல்லா படங்களும் மிக அழகாக உள்ளது. சயன கோலத்தில் மூலஸ்தானத்தில் அம்மன் காட்சி தருகிறாரா? கடைசிபடமும் அங்குள்ள அம்மன் படமா? மிகவும் அழகு. தங்கள் பதிவால் அம்மனை மனமாற தரிசித்துக் கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மூலஸ்தானத்திலும் சயன கோலத்திலயே அம்மன் காட்சி அருள்கிறார்.

      ஆமாம் சகோ கடைசி படமும் அங்குள்ள அம்மன் படம் தான் ..கோவில் தளத்தில் கிடைத்தது . கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை எனவே நான் எடுக்க வில்லை .

      Delete
  5. அழகான கோவில். மாசாணி அம்மன் பற்றி கேள்விப்பட்டது உண்டு. கோவிலுக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவு மூலம் தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பசுமையான சாலை - பார்க்கும்போதே மகிழ்ச்சி.

    ReplyDelete