09 August 2019

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோவில்

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி






இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.

அகிலத்தைக் காப்பவளாக அம்பாள் விளங்குவதால் அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள்.

51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.





ஸ்தல வரலாறு

திருவானைக்கா என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இருக்கும் ஜம்புலிங்கம், அன்னை அகிலாண்டேஸ்வரியால் உருவாக்கப்பட்டது. 

எம்பெருமானின் கட்டளைக்கிணங்க மானிடப்பெண்ணாக பூலோகத்தில் அவதரித்த பார்வதி தேவி, காவிரி ஆற்றில் நீரில் லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களால் நீர் லிங்கமாக மாறியது. அதை வழிபட்டு பேரானந்தம் அடைந்தாள் அம்பிகை. 

ஜம்பு என்னும் முனிவர் எம்பெருமானை வேண்டி இங்கு தவமிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த  சிவன்

 அவருக்கு காட்சி தந்து, நாவல்பழத்தை அளித்தார்.


 சிவன் கொடுத்ததாயிற்றே அதனால் கொட்டையையும் விழுங்கிவிட்டார் ஜம்பு முனிவர். அந்த கொட்டையிலிருந்து விதை முளைத்து செடியாக மாறி மரமாக வளர்ந்தது. 


சிரசு வெடித்து முக்தி பெற்றார் ஜம்பு முனிவர். பக்தனாகிய ஜம்புவுக்கு முக்தி அளித்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.





 சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இந்தக்காட்டில் ஒருவர் யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தார்கள். 

சிவலிங்கம் கூரையில்லாமல் இருந்ததால் சிலந்தி, லிங்கத்தின் மீது வலை பின்னி வெயில் மழை படாமல் காய்ந்த சருகுகளை மேலே போட்டு காத்தது. 

யானை காவிரி ஆற்றிலிருந்து தும்பிக்கையால் நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. 


அப்படி செய்யும் போது சிலந்தி பின்னிய வலை அசிங்கமாக இருப்பதாக நினைத்து யானை அதை அழிக்கும். 

மறுநாள் சிலந்தி வந்து மீண்டு லிங்கத்தின் மீது வலை பின்னும். மீண்டும் யானை வந்து அழிக்கும். இப்படியே மாறி மாறி நடக்கவே, ஒரு நாள் சிலந்தி கோபம் கொண்டு யானையின் துதிக்கையில் நுழைந்து கடித்தது, யானையும் சிலந்தியும் உயிர் துறந்தன. 

இவர்களது பக்தியை மெச்சிய சிவபெருமான் சிவகணங்களுக்கு தலைவராக்கினார்.


மறுஜென்மத்தில் சிலந்தி கோச்செங்கட்சோழனாக பிறந்தது. 

கோச்செங்கட் சோழனுக்கு பூர்வ ஜென்ம வாசனை இருந்தது போல, அவன் கட்டிய 70 கோயில்களும் யானைகள் உட்புகாத மாடக் கோவிலாக இருந்தது. இவன் கட்டிய முதல் கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். 

தலவரலாறு படி இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பும்போது இறைவனே சித்தராக வந்து பணியாளர்களுக்கு திருநீறு கொடுத்ததாகவும் அதற்கேற்ப அது தங்கமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.




ஸ்தல சிறப்பு

 மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட் பிராகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக (அப்பு என்றால் நீர்) எழுந்தருளியுள்ளார். நாகப்பழ மரத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர். இந்த லிங்கம், தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

இவரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். 




அம்பாள் நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதில் அணிந்திருக்கும் தாடகங்கள் பக்தர்களின் பார்வைக்கு நன்றாக தெரியும் அளவுக்கு பெரிதாக இருக்கும்.

 முன்பு அம்பாள் பார்வைக்கு உக்கிரமாக கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் அவளைக் கண்டு அச்சம் கொண்டதால் அப்போது அம்பாளை தரிசிக்க வந்த ஆதி சங்கரர் சிவசக்ரம் என்னும் இந்த காதணிகளை பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாகவும் வரலாறு கூறுகிறது. 

அதன் பிறகே அம்பாளின் முன்புறம் விநாயரையும், அம்பாளுக்கு பின்பு முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை தணித்ததாகவும் கூறுகிறார்கள்.


 அரிய சன்னிதிகளாக சரஸ்வதி தேவி வீணையில்லாமலும்,
 சந்திரன் தேவியருடனும், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் சனிபகவான், முருகப்பெருமான் சன்னிதிகள் இருக்கின்றன.









திருத்தலத்தின்  சிறப்புகள் 


அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். 

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.





மடிசார் சேவையில் அன்னை அகிலாண்டேஸ்வரி

 சிவன் குருவாகவும், அம்பாள் மாணவியாக இருந்து கற்றரிந்த தலம் இது என்பதால் மாணாக்கர்கள் கல்வியில் மேன்மை வர இத்தலத்துக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள். 

ஆடிமாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவ மிருந்ததாக ஐதிகம். அதனால் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அம்பாள் காலையில் லஷ்மியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலை யில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். 




 இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அம்பாளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பள்ளியறை பூஜை கிடையாது.

ஆனால், பள்ளியறை இருக்கிறது.

இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர்.


வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை போட்டபடியே கோயிலுக்குள் சென்றாள். வேதியரிடம், “நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,” என்றாள்.

 கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர்.

 “கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார்.

அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.








பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்” உண்டானது.

இத்தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார்.

அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார்.

அப்போது அம்பிகை, தானும் உடன் வருவதாக கூறினார்.

சிவபெருமான் அம்பாளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அம்பிகையையை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.

ஆனால், அம்பிகை சிவனிடம், “நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!’‘ என்றார். இதற்கு சிவனும் உடன்பட இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

 இங்கு பங்குனி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்ச்சவத்தின் போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி அளிக்கின்றனர்.

இந்த உற்சவத்திற்கு பஞ்சப்பிரகார உற்சவம் என்று பெயர் .


போன முறை அங்கு சென்ற பொழுது எடுத்த படங்களுடன் இன்றைய பதிவு ...



 திருஞானசம்பந்த சுவாமிகள்

திருச்சிற்றம்பலம்



வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு
வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக
மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக
வாழ்பவர் 
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத
மில்லையே

சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று
சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி
லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத
மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண
வல்லரே




ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  திருவடிகளே சரணம் ...



அன்புடன் 
அனுபிரேம் 

7 comments:

  1. அழகான கோவில். தமிழகம் செல்லும்போது இங்கேயும் செல்வதுண்டு. சில படங்கள் முன்னர் எடுத்திருக்கிறேன் - பிரகாரங்களில்.

    நிறைய தல வரலாறு கொடுத்திருப்பது சிறப்பு. சில தெரிந்தவை என்றாலும் மீண்டும் படித்து ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  2. தலவரலாறும், படங்களும் அருமை.

    //ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவடிகளே சரணம் ...//

    ஆடிவெள்ளி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தரிசனம் செய்து கொண்டேன் , மனதுக்கு மகிழ்வு.
    நன்றிம்மா அனு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அழகான படங்கள். கோபுர தரிசனம் அற்புதமாக இருக்கிறது. அன்னை அகிலாண்டேஸ்வரியை ஆனந்தமாக தரிசித்து கொண்டேன். ஸ்தல வரலாறும், புராண கதைகளும் படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. இங்கு உச்சிக்கால பூஜை மிகவும் விஷேசமானது என நிறைய வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை இந்த கோவிலுக்கு செல்லும் சந்தர்ப்பம் அமைந்த போது தரிசனம் செய்து வந்தேன். அது அவ்வளவாக கோவில் அமைப்புகள் பற்றிக்கூட நினைவில் இல்லை. ஆனால், இன்றைய தங்கள் பதிவு மிக விரிவாக தரிசனம் செய்ய வைத்து பழைய நினைவுகளை வெளிக் கொணர்ந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. விவரங்கள் சுவாரஸ்யம். நானும் இரண்டுமுறை இந்தக்கோவிலுக்குச் சென்று வந்துள்ளேன்.

    ReplyDelete
  5. //அம்மனின் காதில் அணிந்திருக்கும் தடாகங்கள் // - தடாகங்கள் - நீர் நிலை. தாடகங்கள் - காதில் அணியும் அணி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...மாற்றிவிட்டேன்...

      Delete
  6. இந்த நீர்த் தலத்தில் தற்போது இயற்கையான நீர்வரத்து நின்றுவிட்டதாகவும், செயற்கையாக குழாய் வைத்து உள்ளே தண்ணீர் கொண்டுவருவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது அறிந்தேன்.

    ReplyDelete