16 December 2022

1. திருப்பாவை - மார்கழித் திங்கள்

 முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.



ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் --ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்.



கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். 


கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று. 

திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. 

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. 

இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. 

ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. 

இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் வேண்டும்  ஆண்டாளின் பக்தியை எடுத்துச் சொல்கிறது.




மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்

      நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

      கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

     பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்



செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் க்ருஷ்ண கைங்கர்யம் என்னும் செல்வத்தை உடைய இளம் பெண்களே! 

சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!

 மார்கழி பௌர்ணமி தினத்தில் நல்ல நாள் அமைந்துள்ளது. 

கூர்மையான வேலை உடையவரும் கண்ணனுக்குத் தீங்குபுரியும் ஜந்துக்களை அழிக்கும் கொடுஞ்செயலை உடையவருமான நந்தகோபருக்கு அடங்கிய பிள்ளையும், அழகு பொருந்திய கண்களையுடைய யசோதைப் பிராட்டியின் சிங்கக்குட்டி போன்றவனும், கறுத்த மேகத்தைப் போன்ற திருமேனியையும், சிவந்த கண்களையும் சூர்யனையும் சந்த்ரனையும் போன்ற முகத்தையும் உடையவனுமான கண்ணனான நாராயணன் எம்பெருமானே, அடியார்களான நமக்கே கைங்கர்யத்தைக் கொடுப்பவன். 

ஆகையால், இவ்வுலகோர் எல்லோரும் புகழும்படி க்ருஷ்ணானுபவத்தில் நன்கு நீராட விருப்பம் உள்ளவர்களே! வாருங்கள்.



மார்கழி மாதம் முதல் நாள் -ஸ்ரீரங்கம்  பரமபத நாதர் சந்நிதியில் --
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் நந்தகோபன் குமரன் அலங்காரத்தில்.













ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கண்ணபெருமானின் அழகையும், ஸ்ரீ ஆண்டாளின் பக்தியையும் விளக்கும் திருப்பாவையைப் பற்றி விளக்கமாக நீங்கள் சொல்வதை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் ஆர்வத்துடன் கேட்டு மகிழலாம். முதல் பாசுரம் நன்று தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete