14 January 2023

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

 ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்து  செகத்து உதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும்  செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும்  திருமல்லி வள நாடி வாழியே

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பாதங்கள் வாழியே 








அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை 

பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *

நாம் கடவா வண்ணமே நல்கு.












கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்  -நீதியால்
 நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும்  வம்பு.












ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் தினமும் பாசுரங்களையும், ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவரின்   சிறப்பு அலங்கார காட்சிகளையும்  இங்கு பகிரும் பாக்கியம் பெற்றேன்... அத்துடன் இந்த ஆண்டு தினமும் பாசுரங்களை சேவித்து படங்களுடன் you  tube லும்  பகிரும் முயற்சியில் ஆண்டாளின் ஆசிர்வாதத்தால்  தினமும் பதிவிட முடிந்தது. மனதிற்கு மகிழ்ச்சி தந்த  ஒரு செயல். சில பல பிழைகள் இருப்பினும் முயற்சித்து பதிவிட்டது ஏதோ  சாதனை செய்தது போல இருக்கிறது .







மேலும் தொடர்ந்து இங்கு வந்து சேவித்து, இனிய ஊக்கம் தரும் கருத்துரைகளை தந்த நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்...








ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺



1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவும் படங்களும் அருமை. இறை அருளால் தாங்கள் சிறப்பாக தினமும் மார்கழி பதிவுகளை தொகுத்து தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியும் கூட. தங்களுடன் தொடர்ந்து வந்த நான் சில காரணங்களால் தொடர்ந்து வர இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். விடுபட்ட பதிவுகளை நேரம் கிடைக்கும் சமயத்தில் வாசிக்கிறேன். ஸ்ரீ ஆண்டாள் தாயார் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கும், மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete